ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 21, 2022

பனிரெண்டு மாதங்களிலேயும் நம் ஆன்மாவைத் தூய்மையாக்கிப் பேரொளியாக மாற்றிக் கொண்டு வரவேண்டும்

 

ஒவ்வொரு நிமிடமும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை அனைவரும் எளிதில் பெறும் வண்ணம் அருள் ஞான வித்தை உங்களுக்குள் பதியச் செய்கிறோம். ஆக… சித்திரையை நீக்கிக் கனியின் தன்மை அடைய வேண்டும்.

உயிரான அந்த ஒளியின் வித்தைக் கொண்டு நமக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தையும் அந்த ஒளியின் வித்தாக மாற்றிடல் வேண்டும்.

அது தான் சித்திரைக்கனி என்ற நிலைகள் கொண்டு
1.அந்தக் கனியின் தன்மை அடைந்தால் தான் நாம் முழுமை அடைய முடியும்.
2.உயிரான உணர்வை ஒளியாக நாம் பெற்று என்றும் பேரானந்த நிலை என்ற பெரு நிலையை அடைய முடியும்.

அதைப் பெறச் செய்வதற்கே உபதேசிக்கின்றோம்.

1.சித்திரை என்பது நமக்குள் எடுத்துக் கொண்ட சிறு திரைகளை மாற்றி அமைக்கின்றோம்.
2.வைகாசி… தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையை அந்த துருவ நட்சத்திரத்தின் ஒளியைக் கொண்டு “தனக்குள் தெளிவாக்கு…” என்பது.

ஒவ்வொரு மாதமும் இப்படித் தெரிந்து தெளிந்து கொள்வதற்காகத்தான் பன்னிரெண்டு மாதங்களிலும் விழாக்களை அமைத்தார்கள் ஞானிகள்,

பன்னிரண்டு இராசிகளையும் ஒவ்வொன்றாகத் தாண்டிப் போகும் போது இந்த இராசியைச் சுத்தப்படுத்தி விட்டு அடுத்த இராசிக்குச் செல்லும் பொழுது மீண்டும் குறைகள் வந்தால் அந்த இராசியைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இப்படிப் பன்னிரண்டு மாதங்களிலேயும்
1.ஒவ்வொன்றையும் சுத்தப்படுத்தி
2.நம் ஆன்மாவைத் தூய்மையாக்கிப்
3.பேரொளியாக மாற்றிக் கொண்டு வரவேண்டும். அதற்காகத்தான் இதை அறிந்து கொள்ளச் சொன்னார்கள்.

ஆகவே… இந்தப் பனிரெண்டு மாதத்தையும் வீணாக்கி விடாது ஒவ்வொரு காலப் பருவத்திலும் எந்தெந்த நிலைகள் வருகின்றதோ எல்lலோரையும் உண்மைகளை உணரச் செய்…! என்றார் குருநாதர்

அவர்கள் யார்…? என்ற நிலையை அந்த மெய்யை அவர்களை அறியச் செய்து… அருள் உணர்வின் தன்மை பெறச் செய்து… எந்த அளவில் அவர்கள் அதைப் பெறுகின்றனரோ
1.அதைக் கண்டு நீ மகிழ வேண்டும்…
2.அந்த மகிழ்ச்சி பெறும் சக்தியாக உன்னில் நீ வளர்த்திடல் வேண்டும் என்று எனக்கு உபதேசித்தார்.

அவர் உபதேசித்த அந்த உணர்வின் வழிப்படித் தான் குரு அருளை உங்களில் பதிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் உங்களுக்குள் திரு அருளாக மலர்ந்து
2.மெய்ப் பொருளைக் கண்டுணரும் அருள் சக்தி பெற்று
3.இந்த வாழ்க்கையில் கனியின் பருவம் (ஒளி நிலை) பெறும் அந்தத் தகுதியை நீங்கள் பெற வேண்டும்.