ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 2, 2022

தீமையின் இயக்கத்தைக் காட்டி “அதைக் கருக்க வேண்டும்…” என்பதற்கே ஆலயங்களில் அக்னி குண்டத்தை வைத்தனர் ஞானியர்

 

இன்று காளியம்மன் கோவிலில் அக்னி குண்டம் இறங்குவதும் அங்களேஸ்வரி கோவிலில் அக்னி குண்டம் இறங்குவதும் என்ற நிலைகளில் செயல்படுகின்றார்கள்.

ஆனால் ஞானிகள் நம்மை அந்த அக்னி குண்டத்திற்குள் இறங்கச் சொல்லவில்லை. தீமைகளைக் கண்டோம் என்றால் அடுத்த கணம்
1.அருள் மகரிஷிகளின் உணர்வை (அக்னி) எடுத்து
2.இந்த உடலான குண்டத்திற்குள் நம் எண்ணங்கள் கொண்டு இறக்க வேண்டும்...
3.அந்தத் தீமைகளைக் கருக்கிடல் வேண்டும்.
4.அருள் ஞானத்தை நமக்குள் உயர்த்த வேண்டும்.

அதற்குத் தான் அங்களேஸ்வரி கோவிலிலும் காளியம்மன் கோவிலிலும் மாரியம்மன் கோவிலிலும் அக்னி குண்டத்தை வைத்தது.

1.சிவன் கோவிலில் அதை வைத்திருக்கின்றார்களா...
2.விஷ்ணு கோவிலில் வைத்திருக்கிறார்களா...
3.இலட்சுமி கோவிலில் அக்னி குண்டம் இறங்கச் செய்கிறார்களா...?
4.அல்லது மீனாட்சி கோவிலில் அக்னி குண்டம் இறங்கச் செய்கின்றார்களா...!

இல்லை

ஆகவே நற்குணங்கள் இருக்கும் பக்கம் அதைச் செய்வதில்லை நற்குணங்களின் உணர்வுகளை நாம் நுகர்ந்து நமக்குள் வளர்க்கும் சக்தி பெறுகின்றோம்.

ஆகையினால் அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் நுகர்ந்து நமக்குள் தீமை வராது செயல்படுத்துதல் வேண்டும். இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் தீமையை வென்றிடும் சக்திகளை நமக்குள் வலுவாக்கிக் கொள்ள வேண்டும். அந்த உயர்ந்த சக்தியைக் கூட்ட வேண்டும்.

சிரமங்கள் பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நாம் அதை எடுத்துச் சொல்லுதல் வேண்டும்.
1.மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் எண்ணி ஏங்கினால் இந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் செல்கின்றது
2.தீமைகளை அகற்றுகின்றது.. நீங்கள் எண்ணிய அருள் உணர்வுகளை உயிர் அணுக்களாக மாற்றுகின்றது.
3.அணுக்களாக மாற மாற அறியாது வரும் தீமைகளை அகற்றுகின்றது என்று அடுத்தவர்களுக்கு நாம் சொல்ல வேண்டும்.
4.அப்படிச் சொன்னாலும் அந்த மகரிஷியின் அருள் சக்தியை நுகர்ந்தே சொல்கின்றோம்.

அவர்கள் உடலிலிருந்து தீமைகள் அகல வேண்டும் என்ற உண்மையான உணர்வுடன் சொல்லப்படும்போது நாமும் வளர்கின்றோம். அவர்களும் தீமைகளிலிருந்து விடுபடுகின்றனர்.

மற்றவர்களை அணுகும் முறைகள் நாம் இப்படித்தான் செயல்படுத்த வேண்டும்.