ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 24, 2022

நன்றிக் கடனை எப்படித் தீர்ப்பது…?

நாம் யாரும் தவறு செய்யவில்லை. பிறருக்கு நாம் பல நன்மைகளைச் செய்து இருக்கின்றோம். ஆனால் நாம் நன்மை செய்த நிலைகள்…
1.அந்த உதவி செய்த நன்றிக்காக நண்பன் உடலை விட்டுப் பிரியும் போது
2.நம் மேல் பற்று கொண்டு அந்த ஆன்மா பிரிந்து விட்டால்
3.அந்த ஆன்மா நம்மை அறியாமலேயே நம் உடலுக்குள் வந்துவிடும்.

நண்பனை நாம் உடலுடன் எப்படிப் பார்த்து உதவி செய்தோமோ அதே போல் நமக்குள் வந்தாலும் அந்த சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் என் உடலில் உள்ள அந்த ஜீவான்மா பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ணினால்
1.இந்த நண்பன் நம்முடன் ஒன்றி வந்தாலும்
2.அந்த நண்பனிடத்தில் விளைந்த தீய வினைகள் நம்மிடத்தில் விளையாது நம்மையும் காக்கலாம்
3.அந்த நண்பனின் உயிர் ஆன்மாவையும் பிறவியில்லா நிலை அடையச் செய்யலாம்.

அதாவது உங்களின் நிலையிலிருந்தே அந்த ஆன்மாவை உயர்ந்த நிலை பெறச் செய்ய முடியும்

ஒவ்வொரு நாளும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்… எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவன்மாக்கள் பெற வேண்டும் என்று எண்ணி அந்த வலுவைச் சேர்க்க வேண்டும்.

அந்த இன்னொரு உடலில் தான் வாழும் போது குடும்பத்தில் சங்கடத்தினாலோ வெறுப்பாலோ வேதனையாலோ உருவான உணர்வுகள் அங்கே எப்படி நோயாக விளைந்ததோ… அந்த உடலை வீழ்த்தியதோ… அதே சமயத்தில் “உதவி செய்தான் நண்பன்…!” என்ற எண்ணத்துடன் பற்று கொண்ட நிலையில் அந்த ஆன்மா நம்முள் வந்தாலும் அதைப் போன்ற தீமைகளை அகற்ற சப்தரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ண வேண்டும்.

அவ்வாறு பல முறை செய்யச் செய்ய நம் உடலில் இருக்கக்கூடிய நண்பருடைய உயிரான்மா நமக்குத் தீமை விளைவிக்காது அதற்கும் அந்த நன்மைகளைப் பெறச் செய்கின்றது,

ஆகவே பிறர் படும் கஷ்டத்தைக் கேட்டுணர்ந்தாலும் அந்தக் கஷ்டத்தை உருவாக்கும் உணர்வின் எண்ணங்கள் நமக்குள் விளையாது தடுக்க…
1.சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்கள் ஜீவான்மக்கள் பெற வேண்டும் என்று எண்ணினால்
3.பிறருடைய கஷ்டங்களையோ நஷ்டங்களையோ பத்திரிக்கை வாயிலாகப் படித்துணர்ந்த நிலையில்
4.அது நமக்குள் தீமை விளைவிக்கும் வித்தாக விளைந்திடாது தடுக்கவும் நம்மைக் காத்திடவும் முடியும்.

ஆகவே மேல் அழுக்கைப் போக்க நீரை ஊற்றி எப்படிக் குளிக்கின்றோமோ… தங்கத்தில் செம்பும் வெள்ளியும் சேர்ந்து விட்டால் திரவகத்தை ஊற்றி எப்படிச் சுத்தப்படுத்துகின்றோமோ… கைகளில் அழுக்குப்பட்டால் சோப்பைப் போட்டுத் தூய்மைப்படுத்துவது போன்று
1.அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியை நம் உடலுக்குள் செலுத்தி நம்மை அறியாது சேர்ந்த தீவினைகளை அகற்றி
2.நன்றியின் உணர்வாக எண்ணி நம்முள் வந்த ஆன்மாக்களுக்கும் அந்த மகரிஷியின் அருள் சக்திகளைச் செலுத்தி
3.நமக்குள் தீமையாக விளைவிக்காத அதைத் தடுத்து
4.சப்தரிஷி மண்டலத்துடன் அவர்களை இணையும் நிலையைச் செய்வதே நல்லது.