ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 1, 2021

மாறி மாறி ஏற்படும் வெப்ப நிலையால் தான் சிருஷ்டியே நடக்கின்றது - ஈஸ்வரபட்டர்

 

அண்ட கோளத்தில் அமில சுழற்சியில் சுழன்று கொண்டே மிதந்து கொண்டுள்ள அமில நிலைகள் அவை அவை சுழற்சி ஓட்டத்தில் சந்திக்கின்ற சீதோஷ்ண நிலையின் தொடர்பு நிலைக்கொப்ப மாற்றத் தன்மைகளை ஏற்படுத்தி சீதோஷ்ண நிலை மோதலின் தொடரைக் கொண்டு அதனுடைய குணத் தன்மையில் வலுத்தன்மை பெறுகின்றது.

உதாரணமாக நாம் பால்… காபி… கஞ்சி… போன்ற வஸ்துக்களைச் சமைத்து வைத்துள்ள நிலையில் அதைக் காய்ச்சி வைத்துள்ள பாத்திரத்தில் அதைக் காய்ச்சி அப்படியே வைத்தவுடன்
1.அதிலுள்ள ஆவி நிலை வெளிப்பட்டு மேல் நிலையில் “ஆடையாக” திடம் கொண்டு படிந்து விடுகின்றது.
2.உஷ்ணம் உள்ள வரை பாலில் ஆடை கட்டுவதில்லை
3.குளிர்ந்த நிலையிலும் அதே தன்மையில் அது உள்ளது.

ஆனால் உஷ்ணப்படுத்தி ஆறிய நிலையில் அதன் குறிப்பிட்ட கால நிலைக்குப் பிறகு அதன் நிலையில் புளிப்பு நிலை கொண்டு மாற்று நிலை ஏற்பட்டு அதை எடுக்காமல் அப்ப்டியே வைத்து விட்டால் என்ன நடக்கின்றது…?

அதில் இரண்டு மூன்று நாட்களில் பூமியின் உஷ்ண நிலைக்கொப்ப புழுக்கள் வளர்கின்றன. அந்தப் புழுக்கள் வளரும் நிலையில் அதையும் அப்படியே விட்டு விட்டால் மேலும் என்ன நடக்கின்றது…?

அதுவே பாலில் அதிகமாக வளர்ந்த புழு ஒன்றை ஒன்று உட்கொண்டு… அதற்குகந்த ஆகாரம் வேண்டி நிலையில் ஒன்றுக்கொன்று உட்கொண்ட நிலையில் பெரும் புழுக்களாகின்றது.

1.பின் ஆகாரம் கிடைக்காத நிலையில் அதனுடைய ஜீவ நிலை பிரிந்து
2.நீர் சக்தி வெளியாகி படிம நிலைக்கு அந்தப் புழு உட்படுகின்றது.
3.இதற்குப் பிறகும் அத்தொடரில் பல நிலைகள் மாறு கொள்கின்றன.

இத்தொடரைப் போன்றே அண்டத்தின் அமிலத் தொடரும் உஷ்ண நிலைக்கொப்பவும் குளிர் நிலைக்கொப்பவும் அமில நிலைச் சேர்க்கைக்குச் சமைப்பு நிலையில் “பல பல உருக்கள்…” உருப்பெறுகின்றன.

சூரியன் சமைத்த ஆறு வகைக் குணத்தின் வண்ண நிலை பூமி சமைக்கும் ஏழாம் வண்ணமாகி மோதலுடன் தொடர்பெடுத்து பூமியின் ஈர்ப்பு நிலைக்கு பூமித் தொடர்பு கொண்ட பூமி சுழற்சியுடன் சுழலுகின்ற அமிலச் சமைப்பில் தொடர் வளர்ச்சியின் தன்மையைத்தான் “இயற்கை” என்றுணர்த்துகிறோம்.

1.இதிலே மாற்ற நிலைகள் பலவாக உருப்பெற்று மாறி மாறித் தொடர்கின்ற நிலையினில்
2.ஜீவ சக்தி கொண்டு உயிரணுத் தன்மை உருவான நிலையில்
3.உணர்வுத் தன்மை வளர்கின்ற இயற்கைத் தாவர நிலை மாறி
4.சரீர நிலை உணர்வு கொள்ளும் பொழுது அறிவு நிலை கொண்ட எண்ண நிலையும் உருவாகிறது.