ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 7, 2021

உலகெங்கிலும் நடக்கும் விபரீத விளைவுகள் - ஈஸ்வரபட்டர்

 

மனித ஞானம் பெற்றுள்ள இன்றைய வளர் நிலைத் தொடர் நிலையையும்… மனிதன் தன் உயர்வின் வழி தெரியாமல் வாழ்க்கை ஓட்ட உருவ பிம்ப சரீர இச்சைக்கொப்ப மனிதனின் ஞானம் செயல் வழி சென்றதன் விளைவுகளையும்… காணும் நிலை வந்து விட்டது.

விஞ்ஞான விபரீதத்தால் அணுக் கதிர் இயக்க வீச்சின் விஷத் தன்மை அதிக அளவில் பரவியதால் இக்கலிக்குப் பிறகு பூமியின் பிரளய மாற்றமும் அதற்குப் பின் அடுத்த இன வளர்ச்சி நிலை… மனித வித்தின் ஞானம் செயல்படா வண்ணம்… செயலின் தொடரே மாறப் போகின்றது.

1.எந்த வளர்ச்சியில் மனிதக் கரு பல ஆயிரம் வருடங்களாக வளர்ச்சியுற்று வளர்ந்ததுவோ…
2.அவ்வளர்ச்சியின் தொடர் வலுத் தன்மை வளரக் கூடிய வளர்ச்சி நிலை…
3.பூமியின் விஷ அலையினால் மாற்றமாகிக் கொண்டிருக்கின்றது.

ஆகவே மாறப் போகும் இத்தருணத்தை ஒவ்வொரு மனிதனும் தன் உயர்வின் ஞானத்திற்கு உணர்வின் எண்ணத்தை உயிரின் ஆத்மாவிற்கு வலுக்கூட்டிக் கொள்வதே நல்லது.

வரப் போகும் விஷ அலையின் மாற்றத்திலிருந்து…
1.மனிதன் பெற்ற உயர்ந்த சக்தி நிலையான
2.பகுத்தறியும் ஞான வளர்ச்சி… செயல் திறமை… சொல்லாற்றலின் செயல் நிலை… யாவற்றையும்
3.எண்ணத்தின் உணர்வைக் கொண்டு சமமான சாந்த குணத்தால்
4.உடலில் உருவாகும் உயிரணு யாவற்றையும் உயர் ஞான அணுக்களாக
5.உயிர் ஆத்மாவின் வலுவுடன் வலுச் சேர்க்கும் வளர்ச்சி நிலைக்குக் கொண்டு செலுத்த வேண்டும்.

அதற்கு… மெய் ஞானிகளின் அலைத் தொடர்பைப் பெற்று இச்சரீர இயக்க ஓட்டத்தில் எண்ணத்தால் எடுக்கக்கூடிய வலுவைக் கொண்டு உயிர் ஆத்மாவின் வலுச் சக்தியைக் கூட்ட வேண்டும்.

காந்த மின் அணுக்கள் தன் இனமுடன் இனத்தை எப்படிச் சேர்த்துக் கொள்கின்றதோ அதைப் போன்று இச்சரீர இயக்கத்தில் ஓடும் அணுத் தன்மை யாவையும் மெய் ஞானிகளின் உயர் காந்த மின் அலையை ஜெபதபத்தினால் எடுத்துப் பழக வேண்டும்.

1.அதனின் வளர்ச்சி கொண்டு இயக்கப்படும் இணைப்பைக் கொண்டு
2.உயிராத்மாவின் வலுக்கூடக் கூட
3.இந்த உடல் என்ற கோளத்தின் உருண்டோடும் அணுவின் வளர்ச்சியில் இருந்து
4.ஆத்ம உயிரின் கன நிலை கூடிக் கொண்டே செயல் கொள்கின்றது.

சூரியன் தான் வளர்க்கும் கோளத்திலிருந்து… சூரியனின் தொடர்பு கொண்டு ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று வலுக் கூடி வளர்ந்து கொண்டே உள்ளதோ அதைப் போன்று இச் சரீரத்தின் ஆத்ம உயிரின் வலுவும் வளர்கின்றது.

ஓர் உயிராத்மா பிறப்பெடுத்து வளர்ச்சி நிலை குறிப்பிட்ட வயது வரம்புடன் ஆத்ம வித்து வலுக் கொண்ட தன்மை கொண்டு உருவக வளர்ச்சி நின்று விடுகின்றது.

இந்தப் பூமி வளர்க்கும் ஜீவ சரீர இயக்கமும் தாவர வளர்ச்சியும் அவை எடுத்த வித்தின் உயிர் ஆத்ம வலுவின் நிலைக்கொப்ப வளர்ச்சி நிலை வாழும் காலம் மாறி மாறிச் செல்கிறது.

மாறி மாறி என்பது…
1.விதை ஒன்று போட்டு
2.அவ்விதையில் மரம் வளர்ந்து பலன் தந்து
3.அதன் சத்து நிலை உள்ள காலங்கள் வரை சததெடுத்து வளர்ந்து
4.பலன் தந்து கடைசியில் பட்டுவிடுகின்றது.

அதே சமயத்தில் இந்தப் பூமியின் உள் பகுதியில் உள்ள நீர்… மண் வளம்… கனி வளம்… இவற்றின் வளர்ப்பு நிலை கூடிக் கொண்டே உள்ளது. ஆக… உருவகத்தில் கனத்துக் கொண்டே “பூமி வளர்க்கும் உயிர் வளர்ப்பு யாவையும்” குறிப்பிட்ட சத்து நிலைக்கொப்ப தாவரமும் ஜீவராசிகளும் வாழ்ந்து மடிகின்றன.

ஆகவே பிறப்பு… வளர்ப்பு… இறப்பு… என்ற தொடர்புடனேயே மீண்டும் மீண்டும் சுழல விடாமல் உடல் கோளத்தின் உயிராத்மாவை என்றும் அழியா நிலைக்கு உயர்த்த வேண்டும்.

சூரியனுக்கும் பூமிக்கும் மற்றெந்தக் கோளத்திற்கும் இல்லா உயர் செயலை… நம் ஆத்ம உயிர் வலுவைக் கொண்டு
1.இன்றெப்படி சுவை எண்ணம் உணர்வு செயல் ஞானம் எல்லா இன்ப நிலைகளில் உடலில் பெறுகின்றோமோ
2.அதைக் காட்டிலும் இந்த உடலில் உள்ள எதிரிகளின் எதிர்ப்பு நிலையற்று மகிழ்ந்து வாழலாம்.

எதிரி என்பது இந்த உடல் அவயங்களில் ஏற்படக்கூடிய சோர்வு… பிணி… பசி… தூக்கம்… இத்தகைய எதிரிகளின் நிலையுமன்றி ஆத்ம வலுவின் வலுவைக் கூட்டி வலுவாக்கிக் கொண்டோமானால் வளர் தொடர் வளர்ச்சியின் வலுவாக நம் இயக்கச் செயல் “பிறவா நித்திய நிலையாகச் செயல் கொள்ளும்…!”

அதற்குத்தான் இந்த உபதேசமே…!