ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 26, 2021

மண்ணிலே வளரும் வைரமே மங்கா ஒளி நிலை பெறும்போது உயிராத்மாவை ஒளியாக்க முடியாதா…? - ஈஸ்வரபட்டர்

 

காட்சி:
எண்ணெயை ஊற்றி விளக்கு எரிகின்றது... மெழுகுவர்த்தி எரிகின்றது… தீவட்டி எரிகின்றது… மின்சார ஒளி பல்புகளும் எரிகின்றன. இதைப் போன்றே காட்சியில் ஒவ்வொரு எரிக்கப்பட்டு ஒளி தரும் சாதனமும் தெரிகின்றது.

சூரியனும் நட்சத்திர மண்டலங்களும்… பூமியின் ஒளியும்… வைரக் கற்களின் ஒளித் தன்மையும்… மாணிக்கக் கல்லின் ஒளியும்… சிறு மின் மினிப் பூச்சியின் ஒளியும்… வரிசையாக இன்னும் பலவும் காட்சியில் தெரிகின்றன.

விளக்கம்:
செயற்கையில் எரிக்கப்படும் பொருள் ஒவ்வொன்றுமே நம் தேவையின் பலனுக்குகந்த ஒளித் தன்மை பெற அதற்குகந்த பொருளைச் செலுத்தித் தொடர்ந்து ஒளியைக் காண்கின்றோம்.

பூமியும் சூரியனும் மற்றக் கோளங்கள் யாவையும் தன்னைத் தானே சுழன்று ஓடும் ஓட்டத்தில் மற்றக் கோளங்களின் தொடர்பைக் கொண்டு தன் சுழற்சி ஓட்டத்தில் ஒளியை வெளிப்படுத்துகின்றது. தன்னையும் ஒளியாக்கி பிறவற்றையும் ஒளிப்படுத்துகின்றது.

பூமிக்கு பூமியைக் காட்டிலும் சக்தி வாய்ந்த சூரியனின் வளர்ச்சித் தன்மையின் குழந்தையாய்… சூரிய ஈர்ப்புப் பிடியில் தொடர் கொள்ளும் ஓட்டத்தில் இரவும் பகலும் மாறி மாறி வருகிறது.

சம நிலை வெளிச்சமும் சம நிலை இருளும் கொண்டு பூமி சுழன்று கொண்டே ஓடினாலும் சூரியனின் சந்திப்பு ஏற்படும் இடத்தில் மட்டும் வெளிச்சம் கொண்டு பூமியின் இயக்கம் உள்ளது.

வளர்ச்சியின் வளர் நிலை கொண்ட பூமியைப் போன்றுதான் சூரியக் குடும்பங்களில் ஒவ்வொரு மண்டலமுமே ஒளி நிலை கொள்ளுகின்றது. ஆனால் சூரியனுக்குப் பகல் இரவு என்ற இருள் தன்மை குறைவாக உள்ளது சூரிய பூமியில்.

சூரியனுக்கு அதன் வளர்ப்பு மண்டலங்களின் (மற்ற பிரபஞ்சங்கள்) அமைப்புத் தன்மையினால்… வளர்ந்த பெரிய கோளமாய் வளர்ச்சியுற்றுச் செயலுறும் ஈர்ப்புத் தொடரில்…
1.சூரியனுக்கு மேல் வளர்ந்த சூரியக் குடும்பமில்லா இரண்டு கோளங்களின் எதிர் எதிர் தன்மையினால்
2.மற்றக் கோளங்களுக்கில்லா ஒளித் தன்மையும் உயர் வளர்ப்பு செயல் தன்மையும் நம்மை வளர்த்த சூரியனுக்கு உண்டு.
3.அண்ட சராசரங்களில் சூரியனை ஒத்த பெரிய கோளங்கள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும்
4.நம் சூரிய வளர்ப்பின் வளர் ஞான எண்ணச் செயல் பகுத்தறியும் சரீர உருநிலை பெற்ற
5.ஜீவத்தன்மை கொண்ட வளர்ச கதியின் சூரிய சக்தியின் நிலை ஒத்தவை சில தான்.

இப்பூமியில் மண் வளத்தில் வளரும் வைரத்தின் ஜொலிப்பும்… மாணிக்கமும்… இன்னும் ஒளி நிலை பெற்ற கற்கள் எத்தனையோ…
1.மண்ணின் சத்தை எடுத்து ஒளியின் மங்காத நிலை பெற்று
2.ஒளி வீசும் அத்தன்மையின் முதிர்வைப் பூமியின் வளர்ப்பே வளர்க்கும் பொழுது
3.எண்ணத்தின் பகுத்தறிவைக் கொண்டு ஒளி பாய்ச்சி ஒளி நிலை கண்டு உண்மை உணரும் வழி நிலையில்
4.எதிர்படும் பிம்பத்தைப் படமாக்கிக் காணும் நாம்
5.எண்ணத்தின் பகுத்தறிவின் ஞானத்தால் ஞான ஒளியின் கூர்மையைக் கொண்டு
6.அனைத்தையும் அறிந்து பார்த்து செயல்படுத்தும் ஒளி ஞானம் கொண்டு
7.ஒளியின் ஒளி வித்தின் வளர் ஞானத்தின் சித்து நிலை பெற்று
8.சிவசக்தி என்ற வளர்ப்பின் வளர்ப்பை என்றுமே மங்கா ஒளி நிலைத் தன்மையால் வளர்ச்சிப்படுத்தலாம்.