ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 10, 2021

எப்படித் தான் இருந்தாலும் முதுமை (முதிர்வு) என்று வரும் போது எதிலுமே மாற்றம் இருக்கத் தான் செய்யும்

 

பல பல செடிகளில் எடுத்துக் கொண்ட விதைகளை நிலத்தில் ஒரே பாத்தியில் வைத்து ஊன்றினாலும் கூட அதனதன் உணர்வுக்கொப்பத் தான் அந்தச் செடிகள் விளையும்.

அதே போல் தான்
1.நாம் பிறருடைய உணர்வுகளைக் கண் கொண்டு கூர்ந்து பார்த்து எடுத்துக் கொண்டால்
2.அந்த உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்துக்களாக நம் எலும்புக்குள் பதிவாகின்றது.
3.இப்படிப் பதிவானால் தான் அந்த மனித உடலிலிருந்து வரக்கூடியதை நுகர்ந்து நாம் அறிய முடியும்.

உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டு அவருக்கு உதவி செய்து அவரைக் காப்பாற்றுகின்றோம். ஆனால் அவருடைய தீய வினைகள் நமக்குள் ஒட்டிக் கொள்கின்றது.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் தீமைகளில் இருந்து மீள வேண்டும் என்ற வினைகள் தான் உடலில் வினையாகச் சேர்கிறது. இந்த உணர்வுகள் கணங்களுக்கு அதிபதி ஆகி மனிதனாக உருவாகின்றது

மனிதனாக ஆனபின் அன்பும் பண்பும் பரிவும் கொண்டு தீமைகளை நீக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம். நமக்குள் ஊழ்வினை என்ற வித்தாகின்றது.

ஆனால் இது எங்கிருந்து வருகின்றது...? காற்றில் இருந்து தான் வருகிறது.

நோயாளியின் உணர்வுகள் வெளி வரும் பொழுது நுகர்ந்த பின் அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது. “அவனைக் காக்க வேண்டும்” என்று எண்ணுகின்றோம். ஆனால் நல்ல குணங்களுக்குள் அவர் பட்ட வேதனைகள் இணைந்து விடுகின்றது.

எல்லோரிடத்திலும் இது உண்டு.

ரோட்டில் ஒரு பிச்சைக்காரன் சென்று கொண்டிருந்தாலும் இரக்க மனம் கொண்டு அடப்பாவமே... இப்படி இருகின்றானே...! என்று எண்ணினால் போதும். அவன் உணர்வை நுகர்ந்து விடுகிறோம்...

1.அழுகிய உணர்வின் வித்து அவன் உடலில் இருப்பது வினை இயக்கம்
2.நாம் நுகர்ந்தவுடனே நமக்குள் வருகின்றது.

இப்படி நம்மை அறியாமலே தீயவினைகள் ஏராளமாகச் சேர்கிறது. மனிதனுடைய உடலில் எத்தனையோ விதமான நோய்கள் வருகின்றது... பார்க்கலாம். அந்தந்த உணர்வுக்கொப்ப நம்மை மாற்றி அமைக்கின்றது.

இது எல்லாம் எங்கே இருக்கின்றது...?

செடி கொடிகள் எல்லாம் விளைகின்றது. அதனுடைய சத்தை எல்லாம் சூரியனின் காந்த சக்தி எடுத்து வைத்திருக்கின்றது

அதே போல் மனிதனுக்குள் விளைந்த உணர்வுகள் ஒவ்வொன்றையும் சூரியனின் காந்த சக்தி எடுத்துப் பரமாத்மாவில் கலக்கி வைத்திருக்கின்றது.

உதாரணமாக நான் பேசியது உங்களுக்குள் வித்தாகப் பதிவாகி இருக்கிறது. நீங்கள் பேசியது என் உடலில் பதிவாகி இருக்கின்றது.

மீண்டும் நீங்கள் என்னை நினைக்கும் பொழுது
1.நான் (ஞானகுரு) அமெரிக்காவில் இருந்தாலும் கூட
2.சாமி எல்லோருக்கும் உபதேசம் செய்தார்... இன்று அவர் வேதனையுடன் இருக்கின்றார் என்று நினைத்தால்
3.உடனே இங்கே வரும்... உங்களைச் சோர்வடையச் செய்யும்.

ஆனால் இப்பொழுது இங்கே யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளைக் கேட்டால் சோர்வை நீக்கச் செய்கிறது. ஆனால் சாமி மீது பற்றாக இருக்கும் பொழுது நான் எடுத்துக் கொண்ட உணர்வுகள் “வேதனை” என்று நீங்கள் எண்ணினால் உங்களைச் சோர்வடையச் செய்கிறது.

ஆக... எப்படித் தான் இருந்தாலும் ஒரு கனிந்த பழம் முதலில் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் நாளடைவில் அது அழுகத் தான் செய்யும்.

அது போல் எத்தகைய தன்மையாக இருந்தாலும்...
1.அது முழுமை அடையும் போது அதனுடைய தன்மை மாறத்தான் செய்யும்.
2.அருள் ஒளி என்ற உணர்வை நாம் எடுத்தாலும் கூட தீய வினைகள் அழுகுகின்றது...
3.உடல் மாறுகின்றது... “உணர்வுகள் ஒளியாக மாறுகின்றது...”

அதே சமயத்தில் தீய வினையின் உணர்வுகள் நமக்குள் வந்து விட்டால் உடலில் உள்ள நல்ல உணர்வுகளை அழுகச் செய்து விடுகிறது. தீவினையின் உணர்வின் அணுக்கள் நோயாகின்றது... உடல் மாறுகின்றது.

1.சாமியைப் பார்த்தேன்... சாமியாரைப் பார்த்தேன்...
2.எல்லோரையும் பார்த்தேன் நன்றாகிவிடும்...! என்று சொன்னாலும்
3.நாம் நுகர்ந்த உணர்வைத் தான் உயிர் இயக்கும்... அதற்கொப்ப அடுத்த உடலை உருவாக்கியே தீரும்.

இதிலிருந்து யாரும் தப்ப முடியாது.