ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 17, 2021

அழியாச் சொத்து வேண்டுமா... அழியும் சொத்து வேண்டுமா...! என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும்

 

இன்றைய மனித வாழ்க்கையில் துருவ மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இதை நமக்குள் சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். இது தான் அழியா பேரின்பச் சொத்து.

தொழில் செய்து அல்லது வேலை செய்து சொத்தைச் சேமிக்க வேண்டும் என்று எண்ணுகிற போது
1.அது அழியக் கூடிய சொத்து தான்... இந்த உடல் வாழ்க்கைக்கு உதவும்.
2.ஆனால் அதுவும் நாம் சீரான நிலைகள் இல்லை என்றால் அதைக் காக்க முடியாது.

சொத்தைச் சம்பாரித்து வைத்திருப்போம். வேதனை... வேதனை... என்று சந்தர்ப்பத்தால் ஏதாவது வந்தால் அடுத்தாற்போல் இந்தச் சொத்தைக் கொண்டு போய் அவர்களிடம் கொடுத்தால் இது எதற்கப்பா...? என்பார்கள்.

எல்லாம் சம்பாரித்து வைத்திருப்பார்கள்...! அதை விரிவாக்கி இது அங்கே இவ்வளவு இருக்கிறது... இந்த இடத்தில் உள்ள சொத்துகள் இந்த மாதிரி இருக்கிறது... இதை எல்லாம் என்ன செய்கிறது...? என்று கேட்டால்
1.எங்கேயோ தொலைந்து போகட்டும்
2.இதை ஏம்ப்பா என்னிடம் சொல்கிறீர்கள்...! என்பார்கள்.

சம்பாரிக்கும் போது எல்லாம் வாங்கி இருப்பார்கள். ஆனால் இந்த வேதனை வந்த பின் இந்தச் சொத்துக் கணக்கைச் சொல்லும் போது என்ன ஆகிறது...?

எங்கேயாவது கொண்டு விடுங்கள்...! என்ற நிலை தான் வருகிறது.

காரணம் செல்வத்தின் தன்மை சேர்த்துக் கொண்டிருக்கும் போது “எனக்கு இப்படி வந்துவிட்டதே...” என்று வேதனை எடுக்கும் போது இந்த உடலின் பற்று தான் வருகிறது.

உடலின் பற்று வரும் போது யார் மீது (தன் குழந்தையோ... நண்பரோ...) நமக்குப் பற்று வருகின்றதோ அவரைப் பற்றிக் கொள்கிறோம். அந்த உடலை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம். உடலுக்குப் பின் அங்கே வந்து விடுகிறோம்.

அந்த உடலுக்குள் சென்ற பின் குழந்தையாகப் பிறப்பதில்லை.
1.தன் உடலில் விளைந்த உணர்வை அங்கே சாகாக்கலையாக உருவாக்கி
2.அந்த ஆசையைத் தூண்டி அதன் வழிகளிலே அங்கே அவர்களையும் மடியச் செய்கிறோம்.

அதன் உணர்வுகள் அங்கே பேய் மணமாக வளர்ச்சியாகி... பூதகணமாக விளைகிறது... அது தான் பூதங்கள் என்று சொல்வது. ஆனால் உணர்வின் தன்மை விளைவித்த பின் எதனை அடக்கி அதற்குள் வந்ததோ அந்த உணர்வின் தன்மையாக வருகின்றது.

அந்த உடலிலிருந்து வெளி வந்தபின் இந்த உணர்வை ஒத்த உயிரினங்கள் எது வளர்ச்சிக்கு வருகிறதோ... அங்கே போய் இந்தப் பூதகணங்கள் அதுவாக உருவாக்கி அதன் செயலாகவே உருவாக்கிவிடும்.

புலியோ நரியோ பாம்போ இவைகள் எல்லாம் தன் இரை தேடும் போது மற்ற உயிரினங்களை இரக்கத்துடன் பார்ப்பதில்லை. தன் உணர்வு கொண்டு தாக்கித் தான் அதை உணவாக எடுக்கும்.

இந்த மனித வாழ்க்கையில் இது போன்ற நிலையைச் செய்வோர் எவரோ அப்படிப்பட்ட மிருகமாகத் தான் உயிர் உருவாக்கும். அதனால் தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகிறாய்..! என்று சொல்வது.

பிறர்படும் வேதனையான உணர்வை எடுத்துக் கொண்டால் அதைத் தூய்மைப்படுத்தத் தெரியவில்லை என்றால் இந்த நிலை வருகிறது.

நம் குழந்தை சிரமப்பட்டால் அதைப் பார்த்துப் பாசத்தால் நாம் வேதனைப்படுகின்றோம். ஆனால் நமக்குப் பிடிக்காதவர் ஏதோ ஒரு செயலால் வேதனைப்பட்டார் என்றால் வெறுப்பால் என்ன செய்கிறோம்...?

அவனுக்கு அப்படித்தான் வேண்டும்... என்று அதை ரசிக்கின்றோம்.

1.தன் குழந்தைக்கு உடல் சரியில்லை என்றால் நாம் வேதனைப்படுகின்றோம்.
2.ஆனால் நமக்குப் பிடிக்காதவருக்கு என்றால் நான் நினைத்தேன்... அவனுக்கு அப்படித்தான் வேண்டும்...! என்ற
3.இந்த விஷத்தை நமக்குள் உருவாக்குகின்றோம்.

ஏனென்றால் எது இந்த உடலில் அதிகமோ அதனின் உணர்வின் வளர்ச்சியைத் தான் நமக்குள் காட்டும். அந்த உணர்வின் செயலாக்கம் தான் நமக்குள் உருவாகும்.

ஆக
1.எதைச் சிருஷ்டித்து இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுக்கின்றோமோ
2.அது அவதார புருஷனாக மாற்றிவிடுகின்றது.
3.கலியா... கல்கியா...? என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.