ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 6, 2021

திருக்கடையூர் அமுதகணேஸ்வரரின் தத்துவம் என்ன...?

 

ஒளியைக் கண்டபின் இருள் எப்படி மறைகின்றதோ அதைப் போல் மெய் ஒளியின் தன்மையை அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் எடுக்கப்படும் போது இந்த மனித வாழ்க்கையில் சிந்தனையைக் குறைக்கச் செய்யும் உணர்வின் தன்மையை அது பிளக்கச் செய்துவிடும்.

இந்த உடலில் நாம் இருக்கப்படும் போது ஒவ்வொரு நொடியிலும் அதை எடுத்து வளர்க்கச் செய்து உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றுவது தான் நரசிம்ம அவதாரம்... அடுத்து கல்கி.
1.இந்த உடலை விட்டுச் சென்ற பின்
2.ஒளியின் சரீரமாக என்றும் நிலையான சரீரமாக அது வருகின்றது.

அதற்குத் தான் “மார்க்கண்டேயன்” கதையைக் காட்டினார்கள் ஞானிகள். என்றும் பதினாறு என்ற நிலையில்
1.எமனையே அவன் சிறைப்பிடித்தான்... எமனை வீழ்த்தினான்...! எமனை சம்ஹாரம் செய்தான் என்று
2.திருக்கடையூர் அமுதகணேஸ்வரர்...! ஆலயத்தில் காட்டியுள்ளார்கள்.
அதாவது... இந்த உயிர் பூமிக்குள் வந்த நிலைகளில்
1.சுவைமிக்க அமுதமாகக் கணேஸ்வரனாகத் தனக்குள் சேர்த்து
2.அந்த ஒளியின் சரீரமாக அசுத்தத்தை நீக்கி என்றும் பதினாறாக ஒளியின் தன்மையாக அது சேர்ந்தது.

அங்கே ஸ்தல விருட்சம் எது..?

பிஞ்சிளம் கொடி...! உயிரின் தன்மை கொண்டு அது எப்படி இளமைப் பருவமாக என்றும் பதினாறு என்ற நிலை அடைகின்றதோ அதைக் காட்டுகின்றனர்.

அந்தக் கொடியை எடுத்துக் கொண்டால் எல்லாவற்றிலும் பட்டு... அதை ஒட்டியே தழுவிப் படரும்.

கொடி ஒன்றை ஒன்று படர்ந்து அது எப்படித் தன் சத்தை எடுத்து வளர்கின்றதோ... அது படர்வது போல் நமக்குள் அந்த உணர்வின் சத்தாக...
1.எல்லோரின் உணர்வுகளையும்
2.அருள் ஞான வழியில் வளர்க்க வேண்டும்.
3.அது தான் யாம் (ஞானகுரு) சொல்லும் கூட்டுத் தியானம் என்பது.

நரசிம்ம அவதாரம் எடுக்க வேண்டும் என்றால்... என்றும் பதினாறு என்ற நிலையை அடைய வேண்டும் என்றால் இந்தத் தியானத்தை எடுக்க வேண்டும்.

அதை விடுத்து விட்டு அந்தச் சாமி செய்யும்... இந்தச் சாமி செய்வார்... யாகம் செய்யும்... மந்திரம் செய்யும்... தந்திரம் செய்யும்... என்றால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

உங்களை நீங்கள் நம்புங்கள்.. உயிரைக் கடவுளாக மதியுங்கள். உடலை ஆலயத்தை மதித்து அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை உடலிலே விளையச் செய்யுங்கள். அதை எல்லோருக்கும் கிடைக்கச் செய்யுங்கள்...!