ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 20, 2016

பிறர் சொல்லும், பிறர் செய்யும் குறைகள் நம்மைப் பாதிக்காமல் இருக்க குரு காட்டிய அருள் வழி

யாரையுமே குறை கூறிப் பழகாதீர்கள். குறையைக் கண்டால் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெறவேண்டும். அவர்கள் வாழ்க்கையில் தெளிந்த நிலைகள் பெறவேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெறவேண்டும். அருள் ஞான வழியில் அவர்கள் குடும்பம் ஒன்று சேர்ந்து வாழவேண்டும் என்ற இந்த உணர்வினை எடுத்துக் கொள்ளுங்கள்.

அவர்கள் குறையின் உணர்வு நமக்குள் வளராது.

ஆனால், அவர்கள் நல்ல நிலை பெறவேண்டும் என்று எண்ணினால் நமக்குள் இந்த வலுவின் தன்மை அவர்கள் குறையாகச் செயல்பட்டாலும் நமக்குள் அந்த அணுக்கள் வளராது.

அவர்களும் இதைப் போல எண்ணத் தொடங்கினால் அவர் வாழ்க்கையும் நலம் பெறும் சக்தியாக வளரும். ஆகவே, யாரையுமே நாம் குறை கூறும் நிலைகள் வேண்டாம்.

குறையக் கண்டாலும் அடுத்த கணமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் அவர்கள் வாழ்க்கையில் ஒன்றுபட்டு வாழும் தன்மை பெறவேண்டும் என்ற உணர்வை எடுத்துப் பழக வேண்டும்.

நோயாளியைப் பார்த்தால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும், அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர் உடல் நலம் பெறவேண்டும் என்று இதே மாதிரி நீங்கள் எண்ண வேண்டும்.

எந்தக் குறைகளைக் கண்டாலும் குறைகளை எண்ணாதபடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும், அவர் குடும்பங்களில் தொழில் வளம் பெருக வேண்டும் எவர்கள் குடும்பங்களில் எல்லாம் நலம் பெறவேண்டும் என்று இந்த உணர்வை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

இதனால் உங்களுக்குள் அருள் அணுக்கள் விளையப்பட்டு உங்களுக்குள் உடலுக்குள் இந்த நினைவூட்டி இதே மணங்களாகி கேட்போர் உணர்வுகளில் இந்த உணர்வுகள் ஒலியை எழுப்பி உங்களுடைய குடும்பத்தை உங்கள் உணர்வையும் உங்கள் வியாபாரத்தையும் பெருக்க இது உதவும். நோய் வராதும் தடுக்கும்.