ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 16, 2016

துருவ நட்சத்திரத்தை குருநாதர் எமக்கு நேரடியாகக் காண்பித்து வாழ்க்கையில் வரும் விஷத் தன்மையை முறியடிக்கும்படி செய்தார்

நாம் எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து இன்று மனிதனாக உருவாகியுள்ளோம். ஆக, மனிதனான பின் வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்தால் அந்த வேதனையின் உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது.

அந்த வேதனையை நமக்குள் வளர்த்துக் கொண்டால் வேதனைப்பட்ட மனிதனின் உயிரான்மா நமக்குள் வந்துவிடுகின்றது. அந்த உணர்வைத் தனக்குள் வளர்க்கின்றது. இந்த உடலை வீழ்த்துகின்றது.

வேதனை உணர்வுகள் அணுவான பின் அந்த மனிதன் உடலை விட்டுச் சென்றபின் இத்தகைய விஷத் தன்மை கொண்ட உடலாக உருமாற்றிவிடுகின்றது அந்த உயிர்.

இதிலிருந்தெல்லாம் நீ எவ்வாறு மீளப் போகின்றாய்? என்று குருநாதர் எம்மிடம் பல வினாக்களை எழுப்பித் தெளிவாக்கிக் காட்டினார். அதற்குப் பின் நீ இதை மாற்றுவதற்கு என்ன செய்யப் போகிறாய்? என்றார்.

காலையில் 4.00 மணிக்கு விண்ணை நோக்கும்படி,
ஏகும்படிச் செய்கின்றார் குருநாதர்.

விண்ணிலே துருவ நட்சத்திரம் அந்த 4.00 மணியளவில் தான்
பூமியின் நிலைகளிலிருந்து துருவப் பகுதி நம்மை அறியும்படி செய்கிறது.

காரணம், இந்தச் சூரியனின் ஒளிக் கதிர்கள் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளி வருவதைக் கவர்ந்து அலைகளாக மாற்றும் பொழுது ஒளி அலைகள் அங்கே பிறக்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் பரவி வரும் பொழுது
நம் பூமியின் சுழற்சி வட்டத்தில்
துருவப் பகுதி வழியாக பூமி எவ்வாறு இழுக்கின்றது
என்பதனையும் தெளிவாக்குகின்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
இதைப் போன்ற நிகழ்ச்சிகளை நேரடியாகக் காண்பித்தார்.

அந்தந்தக் காலங்களில் விஷத்தின் தன்மையை நுகர்ந்து அந்த விஷத்தின் தன்மையை முறியடிப்பது எப்படி என்ற நிலைகளை காலை 4.00லிருந்து 6.00க்குள் இதை வழக்கமாக வைத்து துருவ நட்சத்திரத்தை உற்று நோக்கிப் பார்த்து அதை எடுக்கும்படிச் செய்தார்.

காலையிலிருந்து இரவு வரையிலும்
பல பல தீமைகளைச் சந்திக்கச் செய்தும் நுகரச் செய்தும்
உடலுக்குள் உபாதைகளை உருவாக்குவதும்
காலை 4.00 மணிக்கெல்லாம் குருநாதரின் துணை கொண்டு
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை யாம் நுகரப்படும் பொழுது
நுகர்ந்த விஷத்தன்மைகள் அனைத்தும் ஒடுங்குகின்றது.

அடுத்து இதனின் ஈர்ப்பு வட்டத்தில்
சப்தரிஷி மண்டலங்கள் எவ்வாறு சுழல்கின்றது?
அதனின்று உமிழ்த்தும் உணர்வுகள் எவ்வாறு பரவுகின்றது?
அதனை நீ எவ்வாறு நுகர வேண்டும்?
என்பதைத் தெளிவாக்குகின்றார் குருநாதர்.

இதை அறிவதற்காக சில சில நிகழ்ச்சிகளை எமது வாழ்க்கையில் நடத்திக் காட்டுகின்றார். சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளை நுகர்ந்தறிந்து அந்த உணர்வுகளை உடலுக்குள் சேர்க்கும் பொழுது விஷத் தன்மைகள் எவ்வாறு ஒடுங்குகின்றது?
தீமைகளிலிருந்து நீ எவ்வாறு மீள வேண்டும்?
என்பதனை அங்கே தெளிவாக்குகின்றார்.

இப்படித்தான் அனுபவரீதியில் மனிதன் இந்தத் தீமைகளிலிருந்து விஷங்களை ஒடுக்கி உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலத்தில் இன்றும் நிலைத்து வாழ்கின்றார்கள், வளர்ந்து கொண்டேயுள்ளார்கள், என்றும் பதினாறு என்ற நிலைகளில் அடைந்து கொண்டுள்ளார்கள்.

இதை நீ பெறுகின்றாயா?

அல்லது இன்று பல பச்சிலைகள் மூலிகைகளைக் கொண்டு பிறருடைய துன்பங்களைப் போக்குகின்றேன் என்று வைத்தியர் என்ற நிலைகளை அடைகின்றாயா?

பல தாவர இனங்களைக் கையில் எடுத்துக் கொண்டு தேளிடம் காட்டப்படும் பொழுது அது ஒடுங்குவதும் விஷப் பூச்சிகளிடம் காட்டப்படும் பொழுது அது பம்முவதும். கடுமையான மிருகங்களிடம் அதைக் காட்டியபின் அது அஞ்சி ஓடுவதும்
இதைப் போல பெருமைகளைக் காட்டி
உன்னுடைய வலிமையைக் காட்டி
உன்னுடைய திறமையைக் காட்டிப்
புகழ் தேடிச் செல்கின்றாயா?

அந்தப் புகழின் நிலையில் நீ இந்த உணர்வின் தன்மை உனக்குள் வந்த உணர்வுகள் மீண்டும் விஷத் தன்மையைக் கொண்டு நீ மடிகின்றாயா? மனித உருவை மாற்றுகின்றாயா? என்றார்.

இப்படி பல வினாக்களை எழுப்பி, சப்தரிஷி மண்டலத்தில் இணைய  வேண்டியதன் அவசியத்தை அனுபவபூர்வமாக உணர்த்திக் காட்டினார் குருநாதர்.