ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 27, 2014

செய்வினையிலிருந்து தப்பிப்பது எப்படி...?

1. மந்திரவாதி எப்படி ஜாலம் செய்கின்றான்?
ஒரு கிராமத்தில் ஒருவர் என்ன செய்தார்? குடும்பத்தில் அடிக்கடி கஷ்டம் வருகின்றது, சண்டை வருகின்றது என்று சொன்னவுடனே, உங்கள் வீட்டில் செய்வினை செய்து வைத்திருக்கிறார்கள் என்று வருகின்றார்கள்.

அப்பொழுது குருநாதர் என்ன செய்தார்? அதை அறிந்து கொள்வதற்காக வேண்டி, நீ சாதாரண மனிதனாக அங்கே போ என்று சொல்கின்றார்.

அதே மாதிரி அங்கே போனேன். கிராமவாசி மாதிரி அங்கே போய் நடக்கிற நிகழ்ச்சிகளையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

மந்திரவாதி ஒரு விளக்கைப் பொருத்தி வைத்துக் கொண்டு அந்த வீட்டில் மூலை மூலைக்குச் சுற்றுகின்றான். அப்பொழுது ஒரு உரலுக்கு அடியில் இரண்டு முழம் தோண்ட வேண்டும் என்று சொல்லுகின்றான்.

அப்படி என்று சொன்னவுடனே, “ஆ” இங்கே இருக்கின்றது. எனக்கு எப்படியோ மயக்கம் வருகின்றது என்று ஜாலம் செய்தான். அப்புறம் கல்லைத் தூக்கு, அதை விரட்டித் தள்ளு.., அதைத் தள்ளு.., இதைத் தள்ளு.., என்று சொல்லிக் கொண்டு சப்தம் போட்டான்.

அப்புறம் என்ன சொல்கிறான்? தைரியமானவர்கள் யாராவது இரண்டு பேர் இங்கே வாருங்கள். அந்த கிராமவாசி மாதிரியே நானும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றேன். அதே மாதிரி இரண்டு பேர் வந்தார்கள்.

இந்த இடத்தில் குழியைத் தோண்ட வேண்டும்.

“டக்” என்று சப்தம் கேட்டவுடனே. அப்படியே நிறுத்த வேண்டும் என்று சொல்கிறான் மந்திரவாதி.

இவன் என்ன செய்தான். இந்தக் கல்லை (உரலை) அடிக்கவும் இந்தச் சப்தம் கேட்டவுடனே “ம்.., வந்துவிட்டது, ஆ!.., என்று சொல்கின்றான்.

அப்படிச் சொன்னானோ இல்லையோ, உடனே கடப்பாரையை வைத்துக் கொண்டு “ஆட்டைக் கொண்டு வாருங்கள், வெட்டுங்கள், தண்ணீரை ஊற்றுங்கள். ஐயோ! என் உடலெல்லாம் எரிகிறது என்கிறான்.

ஆட்டை வெட்டி இரத்தத்ததை உள்ளே விட்டுவிட்டவுடன் தண்ணீர் நிறைய ஊற்று எரியுதே, எரியுதே என்று இவன் கத்துகின்றான்.

அடுத்து கையை வேறுவிதமாக வைத்துக் கொண்டு, “ஆ..,” கை வர மாட்டேன் என்கிறது., இரண்டு கோழியை எடுங்கள், ஆட்டை வெட்டு என்று சொல்கிறான்.

இவர்களும் தயாராக இருந்து கொண்டு அவன் சொல்வது அனைத்தையும் வெட்டுகின்றார்கள். இதையெல்லாம் பண்ணி முடிந்தவுடன் குழியிலிருந்து ஒரு தகடை எடுக்கிறான்.

இன்னார் பேரை இதிலே (தகட்டிலே) எழுதியிருக்கிறான். இன்னென்ன நிலைகளை எல்லாம் எழுதியிருக்கிறான் இப்படி எல்லாம் செய்திருக்கிறான் பாருங்கள், என்று சொல்லுகின்றான்.

இதிலே உங்கள் தலை முடியெல்லாம் இருக்கின்றது.
எலும்புத் துண்டெல்லாம் இருக்கிறது.
உடனே இதையெல்லாம் எரிக்க வேண்டும்.
அதனால் மண்ணெண்ணையக் கொண்டு வாருங்கள் என்கிறான்.

அதைக் கேட்ட வீட்டுக்காரர்கள் என்ன எண்ணுகிறார்கள்? “அடப்பாவிகளா.., நாங்கள் என்ன செய்தோம்? இந்த மாதிரியெல்லாம் செய்வினை செய்து வைத்திருக்கின்றார்களே” என்று சொல்கிறார்கள்.
2. ஆயிரக் கணக்கில் பணம் பறிக்கின்றார்கள்
உடனே, மந்திரவாதியிடம் இதற்குக் காசு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று கேட்கின்றார்கள்.

வெட்டிய இந்த ஐந்தாறு ஆட்டையும், கோழியையும் இவன் எடுத்துக் கொள்கிறான். ஆனால், அதே சமயத்தில் பத்தாயிரம் ரூபாய் கேட்கிறான்.

ஏனென்றால், எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கின்றது. ஒரு வேளை நான் இறந்துவிட்டால் என் பெண்டு பிள்ளைகளை நான் எப்படிக் காப்பாற்றுவது. அதனாலே பத்தாயிரம் ரூபாய் கொடுங்கள் என்று கூசாமல் கேட்கிறான்.

அதை எடுத்து, அந்தப் பணத்தையும் வாங்கிக் கொண்டு போய்விடுகின்றான். அடுத்து இந்த மந்திரவாதி என்ன செய்கிறான்? என்று நான் பின் தொடர்ந்து போய்ப் பார்க்கிறேன்.
3. குருநாதர் செய்த வேலை
இந்த மந்திரவாதி இன்னொரு இடத்தில் அங்கேயும் அதே வேலையை ஆரம்பிக்கின்றான். அப்பொழுது நமது குருநாதர் ஈஸ்வராய குருதேவர் என்ன சொல்கிறார்?

“நீ லேசாகப் போய்விட்டு வாடா” என்று என்னிடம் சொல்கின்றார் குருநாதர். ஆக, இங்கே என்ன நடக்கின்றது?

அங்கே நான் போனவுடனே,
அந்த மந்திரவாதி என்னென்னவோ செய்து பார்க்கிறான்.
ஒன்றும் வரவில்லை. ஆக என்ன சொல்கிறான்?

இங்கே கடும் பூதம் இருக்கிறது, ஒன்றும் செய்ய முடியவில்லை என்று சொல்கிறான்.

இதுவெல்லாம் இந்த இயற்கையில் மக்களை இப்படியெல்லாம் ஏமாற்றி மந்திர தந்திரங்களைச் செய்து, எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றார்கள் என்ற வகையில் அனுபவ ரீதியில் தெரிந்துதான் உங்களிடம் சொல்கின்றோம்.

உங்களிடம் இருக்கக்கூடிய அவன் சொன்ன இந்த உணர்வை எடுத்தபின், செய்வினை செய்திருக்கிறான் என்று அவனை எண்ணும்போது, இவனே (வந்த மந்திரவாதியே) உங்களுக்குள் பதிவு செய்கிறான்.

ஆகவே, இத்தகைய நிலைகளில் நீங்கள் சிக்காதீர்கள்.