ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 21, 2014

அமாவாசை அன்று நம் முன்னோர்களை சாப்பாடு வைத்துக் கூப்பிட்டால் என்ன ஆகும்...?

1. முன்னோரின் ஆன்மாக்களைக் குட்டிச்சாத்தானாக மாற்றி விடுவார்கள்
பொதுவாக இங்கே என்ன செய்வார்கள்? அமாவாசை என்றால் வீட்டில் நினைவு நாளாக வருடத்திற்கு ஒரு நாள் சாப்பாட்டை வைத்துக் கூப்பிடுவார்கள்.

ஆக, மகாளய அமாவாசை அன்று மந்திரவாதிகள் எல்லாம் அங்கங்கே படையெடுத்துவிடுவார்கள். எந்தெந்த வீட்டில் ஆகவில்லையோ, அந்த வீட்டிலிருந்து மண்ணை எடுத்துக் கொள்வார்கள்.

இந்த மந்திரங்கள் செய்யக்கூடிய ஜோதிடம், நட்சத்திரம், அவர்கள் எந்தப் பக்கத்திலே இருக்கின்றார்களோ அதையெல்லாம் எடுத்து குறித்து வைத்துக் கொள்வார்கள்.

பின், அவர்கள் வீட்டில் தலை முடி ஒன்றையும், கிழிந்த துணி ஒன்றையும் எடுத்து வைத்துக் கொள்வார்கள். அதை வைத்து மந்திரங்களை ஓதுவார்கள்.

அப்பொழுது, இவர்கள் இங்கே வீட்டில் சாப்பாடை வைத்து தாத்தா, பாட்டி, அம்மா அப்பாவைக் கூப்பிடுவார்கள். செத்தவர்களை என்ன செய்யும்?

இந்த நேரத்தில் ஜெபித்தவுடன், ஏனென்றால், இவர்கள் உடலிலிருந்து வலிமை பெற்றது, அதை இழுத்துக் கொள்கிறார்கள் மந்திரவாதிகள்.

இழுத்து என்ன செய்வார்கள் அதைக் குட்டிச்சாத்தானாக மாற்றுவார்கள். மாற்றியபின் என்ன செய்வான்? ஒரு வீட்டில் ஏவல் பண்ணுவார்கள்
2. செய்வினையைப் பற்றிய உண்மை
எப்படி ஏவல் பண்ணுகிறான்?

இந்த உணர்வை எடுத்து மண்ணில் அதை திரும்பவும் ஏற்றி, சில கரு மைகளைத் தடவித் தடவி ஆகாத வீட்டில் விடுகின்றான்.

அங்கே என்ன ஆகின்றது?

இப்படிச் செய்தவுடன், அந்த வீட்டில் ஒரு விதமான கலக்கங்கள் வரும். இந்தக் கலக்கங்கள் வந்தவுடனே ஒருவருக்கொருவர் சண்டை போடுவார்கள்,

சண்டை போடும் பொழுது தன்னையறியாமலே அந்தக் குடும்பத்தை நாஸ்தி பண்ணும். இந்த மண் அந்த வேலையைச் செய்யும். வீட்டில் செய்வினை என்பது இந்த வழியில்தான்.

குடும்பத்தில் சில தோஷங்கள் இருக்கும். சில மந்திரவாதிகள் வந்தவுடனே வீட்டில் இருப்பது எல்லாவற்றையும் சொல்வார்கள். உங்கள் வீட்டில் இந்த இடத்தில் இத்தனை அடி ஆழத்தில் அதற்குள் வைத்திருக்கிறார்கள், நீங்கள் தோண்டிப் பாருங்கள் என்பார்கள்.

இப்படிச் சொன்னவுடன் வீட்டில் தோண்டுவார்கள். தோண்டும் பொழுது, நீங்கள் ஒரு ஆட்டையோ, கோழியையோ அறுத்து ரத்தத்தை விட்டு தண்ணீரைப் பிடியுங்கள் என்று மந்திரவாதி சொல்வான்.

இங்கே கிடு கிடு என்று நடுங்க ஆரம்பித்துவிடுவார்கள். மந்திரவாதியிடம் நீயே வந்து எடுப்பா என்பார்கள்.

இல்லை, நீங்களே தோண்டுங்கள் உங்களுக்கு சக்தி கொடுக்கிறேன் என்பான் மந்திரவாதி. தோண்டிப் பார்த்தால்,
அதற்குள் ஒரு “யந்திரம்” இருக்கும்.
அதை எடுத்துப் பார்க்கும் பொழுது,
அதில் உங்கள் பெயர் எழுதியிருக்கின்றது என்பான்.

ஆக, இவன் எண்ணிய இந்த உணர்வின் தன்மை கொண்டு ஏவியவுடனே, அதைச் சொன்னவுடனே இந்த மண்ணில் இந்த மந்திரவாதி ஏவல் பண்ணியது வரும்.

அப்புறம், “காசு” அதற்கு அடியில் வைத்திருக்கின்றார்கள் பாருங்கள் என்பான்.

வீட்டில் இருப்பவர்கள் பணமெல்லாம் போய்விட்டதே, நஷ்டமாகிவிட்டதே என்பார்கள்.

மறுபடியும் அதைச் சொல்லி, ஏமாற்றி தோஷத்தை நீக்குகின்றேன் என்று பணத்தை வாங்கிக் கொள்வான் மந்திரவாதி.