ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 20, 2013

மற்றவரை நாம் ஏமாற்றலாம், உயிரான ஈசனிடம் ஏமாற்றவே முடியாது

 1. கெட்டதை நீக்க ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்
நம்மையறியாமல் கோபமோ, ஆத்திரமோ, சலிப்போ, சஞ்சலமோ, கோபமோ, பயமோ
இவையனைத்தும் நமக்கு வழிகாட்டி,
இது கெட்டது என்று தெரிந்து கொள்கின்றோம்.

ஆக, அந்த உணர்வின் தன்மை நமக்குள் படவில்லை என்றால்
கெட்டதை நாம் அறிந்துகொள்ள முடியாது. 

கெட்டது என்று நினைத்து,
கெட்டதையே நாம் சுவாசித்துக் கொண்டிருந்தால்
கெட்டவையே நமக்குள் விளைகின்றது.
கெட்டது என்று அறிந்தபின் கெட்டதைத் துடைப்பதற்கு நமக்கு ஆயுதம் தேவை.

எத்தகைய மனிதனாக இருந்தாலும்,அரசனாக இருந்தாலும்,
எத்தகைய ஞானியாக இருந்தாலும் யோகியாக இருந்தாலும்
இந்த உணர்வுகள் தாக்கத்தான் செய்யும்.
உணர்ந்த நிலைகள் நமக்குள் நிலை கொள்ளாமல் அதைத் துடைத்தே ஆகவேண்டும்.

தீமையான உணர்வுகளை நமக்குள் வளரவிடாமல், அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று உடனடியாகச் சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். அத்தகைய ஆயுதம் தான் யாம் கொடுக்கும் ஆத்ம சுத்தி.
2. நம் உயிரான ஈசனை நாம் ஏமாற்றவே முடியாது
நீங்கள் ஒவ்வொருவரும் இதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். எந்த உணர்வின் தன்மையை நமக்குள் பதிவு செய்கின்றோமோ, அந்த உணர்வின் தன்மையை நம் உயிரான ஈசன் செயல்படுத்துகின்றான்.

“இரு, நான் உன்னை என்ன செய்கிறேன் பார், உன்னைத் தொலைத்துக் கட்டிவிடுவேன்” என்று சொல்லும் பொழுது இந்த உணர்வின் சக்தி எனக்குள் பிரம்மமாகி, பிரவணமாகி என் உடலுக்குள் அது ஜீவனாகிவிடுகின்றது.

ஆகவே, உயிரிடம் எதையெல்லாம் நாம் கொடுக்கின்றோமோ அவை அனைத்தும் உருவாக்கிவிடுவான். எடுத்துக் கொண்ட உணர்வுக்குத் தக்கவாறு வேதனையும் கொடுப்பான். இந்த உடலை விட்டுச் சென்றபின், நாம் செய்ததற்குத்தக்கவாறு அடுத்த உடலின் அமைப்பையும் கொடுப்பான்.

நான் உங்களை ஏமாற்றலாம்,
மற்றவர்களையும் ஏமாற்றலாம்.
எனக்குள் இத்தனையும் உணர்த்திக் கொண்டிருக்கும் என் உயிரான ஈசனிடம் மட்டும் ஏமாற்ற முடியாது, அவன் கொடுப்பதைச் சமைத்துவிடுவான்.

ஆகவே நம் உயிரின் தன்மை நமக்குள் ஈசனாகச் செயல்படும் பொழுது, உயிரை நாம் மதிக்க வேண்டும்.

நாம் நமக்குள் இருக்கும் ஈசனுக்குச் சேவை செய்யப் பழகவேண்டும். நாம் நமது உயிரின் இத்தகைய இயல்புகளைத் தெளிவாக அறிந்துணர்ந்து, அந்த ஞானிகள் வாழ்ந்த அருள் வாழ்க்கை வாழ வேண்டும்.

என்றும் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக வாழும் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் அனைவரும் இணைந்து வாழ்வோம். எமது அருளாசிகள்.