ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 10, 2013

முக்தி நிலை அடைவதைப் பற்றிய திருமூலர் பாடல்

சிதைக்கு மேல் நாலொன்றும் சேரவெறுப்பாழாய்
பதைக்கும் மனோன்மணி பட்ட பகலாவாள்
உதிக்கும் ரவிகொடி ஒப்பல்ல ஒப்பல்லவே
கதிக்கின்ற பூரணம் கரையில்லை பார்த்திடே
--திருமூலர்
1. சிதைக்கு மேல் நாலொன்றும் சேரவெறுப்பாழாய்
இன்றைய நிலையில் மனிதர்களாகிய நாம் பெரும்பகுதி தன்னைத் தான் அறியாத நிலைகள் கொண்டுதான் இயங்கிக் கொண்டிருக்கின்றோம்.
நாம் எங்கிருந்து வந்தோம்?
எங்கே செல்லவேண்டும்?
என்ற நிலை அறியாமலே வாழுகின்றோம்.

ஆனால், உயிர் விண்ணிலே தோன்றி பூமிக்குள் வந்து தாவர இனச் சத்தை நுகர்ந்து நுகர்ந்து, பரிணாம வளர்ச்சி அடைந்து, நம்மை மனிதனாக உருவாக்கியது என்ற பேருண்மையை உணர்ந்தவர்கள் ஞானிகள், மகரிஷிகள்.

தலையில், இரண்டு கண்களுக்கும் மத்தியிலே நம் சுவாசம் போய் மோதும் இடமாகிய புருவ மத்தியிலே இருந்து கொண்டுதான் உயிரானது இயக்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால், நாம் அதைப் பார்ப்பதுமில்லை, அறிய முற்படுவதும் இல்லை.

இப்படி உயிரை அறியாத நிலையில் வாழும் பொழுது, அந்த உயிர் பாகம் வேற்றிடமாக, பாழடைந்து போய்விடுகின்றது.

ஆக, இப்படி உயிரை அறியாமல் வாழும் வாழ்க்கையானது, நம்மை மீண்டும் இந்தப் பூமியில் இன்னொரு பிறவிக்குத்தான் வித்திடும்.
2 பதைக்கும் மனோன்மணி பட்ட பகலாவாள்
ஆனால், நாம் நம் உயிரை அறிந்து, அதன் துடிப்பை உணர்ந்து
உயிரின் துடிப்பால் உருவாகும் வெப்பத்தை அறிந்து,
உயிரில் உள்ள காந்தத்தின் துணைகொண்டு
அந்த உயிர் வழியாக விண்ணின் ஆற்றலை  
மகரிஷிகளின் அருள் ஒளியைச் சுவாசித்தோம் என்றால்
உயிரைச் சுற்றி மறைந்த நிலைகள் விலகி,
அது பேரருள் பேரொளியாக மாறுகின்றது.
3. உதிக்கும் ரவிகொடி ஒப்பல்ல ஒப்பல்லவே
சூரியன் - 27 நட்சத்திரங்கள், நவக் கோள்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளைக் கவர்ந்து, அதனுடன் மோதி நெருப்பாகி, நஞ்சைப் பிளந்து, பேரொளியாக பல கோடி மைல்களுக்கு அப்பாலும் தன் ஒளியை வீசுகின்றது. இந்தப் பிரபஞ்சத்தையே ஒளி மயமாக்குகின்றது சூரியன்.

27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படுத்தும் ஒளிக்கற்றைகளை அகஸ்தியன் கவர்ந்து,
பல கோடி மின்னல்களையும் நுகர்ந்து,
அந்த உயிர் சத்தைத் தனக்குள் சேர்த்து,
இன்று ஒளியின் சரீரமாக
துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான்.

சூரியன் எதையுமே அதனுடன் மோதித்தான் ஒளியாக்குகின்றது.  ஆனால், துருவ நட்சத்திரம் எதனையும் தனக்குள் கவர்ந்து அதை ஒளியாக மாற்றும் திறன் கொண்டது.

ஆனால், சூரியன் ஒரு நாள் அழியக் கூடியது. இந்தப் பிரபஞ்சம் அழிந்தாலும் சூரியன் அழிந்தாலும், துருவ நட்சத்திரம் ஒரு நாளும் அழியாது.  அதை அழிப்பதற்கு பேரண்டத்திலே வேறு எந்தச் சக்தியும் கிடையாது.

அகண்ட அண்டத்தில் வருவதனைத்தையுமே அது ஒளியாக மாற்றக் கூடிய ஆற்றல் பெற்றது. சிறிதளவு விஷத்தைக் கண்டாலும் அதை ஒளியாக மாற்றிவிடும் துருவ நட்சத்திரம்.

அத்தகைய பேராற்றல்மிக்க துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை நாம் உயிர் வழியாகச் சுவாசித்தோம் என்றால், நாமும் அந்தப் பேரொளியாக, அழியா ஒளிச் சரீரமாக மாற முடியும்.

ஏனென்றால் நம் பூமியில் மனிதனாகத் தோன்றிய அந்த அகஸ்தியன் தான் துருவ நட்சத்திரமாக இன்று உள்ளான். எல்லா மனிதர்களாலும் அந்த நிலையை அடைவது, சாத்தியமான ஒன்றுதான்.
4. கதிக்கின்ற பூரணம் கரையில்லை பார்த்திடே
முதலிலே தோன்றிய நம் உயிர் கடுகிலே மூன்றில் ஒரு பாகம் அளவில் தான் இருக்கும். துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை உயிர் வழியாகச் சுவாசித்து, கணவன் மனைவி எவரொருவர் இணைந்த நிலையில் அதை வளர்க்கின்றார்களோ,
அப்படி அந்த இரு உயிரும் ஒன்றாக இணையும் பொழுது,
சிறிதாக இருக்கும் உயிரின் பரிணாமம்
பெரிதாக வளர்ச்சி அடைய ஆரம்பிக்கின்றது.

நாளும் இது வளர்ந்திட என்றும் பதினாறு என்ற நிலை அடைந்து விண்ணின் ஆற்றலைத் தனக்குள் சேர்த்து, தொடர்ந்து அது வளர்ச்சியாகிக் கொண்டேதான் இருக்கும். அதற்கு முடிவே கிடையாது.

ஆக, நமக்கு பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை. எல்லையில்லாத பேரண்டத்திலே ஏகாந்தமாக என்றுமே வாழமுடியும்.