ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 21, 2013

வான்மீகி, வியாசகர், அருணகிரிநாதர், இராமலிங்க அடிகள் இவர்கள் எப்படி ஞானம் பெற்றனர்

வான்மீகி தான் எல்லை கடந்த நிலை வரப்படும் பொழுதுதான் ஞானத்தைப் பெறுகின்றார்.

தனக்கு விபத்து என்ற நிலையில், தப்பிக்கும் எண்ணத்தில் வரும் பொழுதுதான் வியாசகர் ஞானம் பெறுகின்றார்.

அருணகிரிநாதர் எவ்வளவோ செல்வச் செருக்கோடு இருந்தாலும், கடைசியில் தன் உடலில் வேதனைகளாகும் பொழுது, அந்த வேதனையிலிருந்து மீள வேண்டும் என்ற உணர்வில் எல்லை கடந்த நிலையில் ஏங்குகின்றார்.
அப்பொழுதுதான் அவருக்குள் அந்த மெய்ஞானம் வந்து,
அவர் உடல் (குஷ்ட ரோகம்) அழுகிய சரீரம் மாறி,
அதன் பின் மெய்ஞானத்தைப் பாடல்களாகப் பாடுகின்றார்.

இதைப் போல, இராமலிங்க அடிகளுக்கு கல்வியில் நாட்டமில்லை. அவருடைய அண்ணியோ அண்ணனுக்குத் தெரியாமல் அவருக்கு ஆகாரம் கொடுக்கின்றது. ஆனால், இராமலிங்க அடிகளின் அண்ணனோ “உன்னாலே தான் கெடுகிறான்” என்று அண்ணியை (தன் மனைவியை) அடிக்கின்றார்.

அண்ணியை அடிக்கப்படும் பொழுது, “நம்மால் தானே அண்ணிக்கு அடி கிடைக்கின்றது” என்று இராமலிங்க அடிகள் அந்த ஏக்கத்தில் எண்ணிய எண்ணத்தின் உணர்வுகள், அவர் எடுத்துக் கொண்டதுதான் அருள்ஞானியினுடைய அருள் வாக்கு.

அருள்ஞானியினுடைய உணர்வலைகள் இராமலிங்க அடிகளுக்குக் கிடைக்கும் பொழுதுதான் அவருடைய எண்ணமும் புனிதமாகின்றது. இராமலிங்க அடிகளும் அந்த மெய்ஞானத்தைப் பெற்று, பிறருடைய துன்பத்தைப் போக்கும் அந்த ஞான வழிகளைத் தொடர்கின்றார்.

ஆகவே, ஏழ்மையிலே வாடும் உங்களை எத்தகைய துன்பம் தாக்குகின்றதோ அந்தத் தாக்கும் நேரத்திலிருந்து உங்களைக் காக்க இந்தத் தியானத்தைக் கடைப்பிடியுங்கள்.

எப்பொழுதெல்லாம் துன்பம் வருகின்றதோ, அப்பொழுதெல்லாம் யாம் சொல்லும் இந்த ஆத்ம சுத்தியினுடைய பலத்தை எடுத்து, அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும், அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று உங்கள் உடலுக்குள் நினைவைச் செலுத்துங்கள்.

உங்கள் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தி,
உயிரான ஈசனிடம் வேண்டி
உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும்
அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும் என்று
ஏங்கி தியானிக்கும் பொழுது, அறியாது வரும்
எத்தகைய கொடிய நிலைகளிலிருந்தும்
நீங்கள் விடுபட முடியும்.

அந்த துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் ஆற்றல்களை உங்களுக்குக் கிடைக்கச் செய்வதற்குத்தான் யாம் இந்த உபதேசமே செய்கின்றோம். ஆகையினாலே, நீங்கள் ஒவ்வொருவரும் எவ்வளவோ வறுமையில் இருந்தாலும், இந்த சந்தர்ப்பம்தான் உங்களுக்கு உயர்வைக் காட்டுகின்றது.


ஒவ்வொரு நிமிடமும் அந்த மெய்ஞானிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற்று, இந்த வாழ்க்கையில் உங்கள் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்ற முடியும். எமது அருளாசிகள்.