ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 16, 2013

தன் கணவனுக்கு வரும் கெடுதலை மனைவியால் தடுக்க முடியும்

1. கணவனை எண்ணி மனைவி வேதனைப்பட்டால் என்ன ஆகும்?
வீட்டிலே பெண்கள், கணவன் மேல் அதிகம் பிரியமாக இருப்பார்கள். அவர் கஷ்டப்படுகிறாரே என்ற வேதனையை எடுத்து, அவரை நினைக்கும் பொழுதும், சாப்பாடு போடும் பொழுதும் மற்ற நிலைகளிலும் இந்த வேதனை கலந்த மூச்சை விடுவார்கள்.

கடைசியிலே டாக்டரிடம் சென்றாலும், அதைத்தான் சொல்வார்கள். டாக்டர் ஏதாவது சொன்னாலும் கூட, பதறிப் போய் உங்கள் சிந்தனை அங்கே தாக்கப்படும் பொழுது நல்ல மருந்தைக் கொடுப்பதை உங்கள் உணர்வே தடைப்படுத்திவிடும்.

நன்றாக கவனித்துப் பார்க்க வேண்டும். கணவன் மேல் அதிகமான பிரியமாக இருக்கின்றார்கள். டாக்டர் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்தப் பதட்டமான உணர்வு கொண்டு நீங்கள் டாக்டரைப் பார்க்கும் பொழுது,
இந்த உணர்வுகள் அங்கேயும் பதறச் செய்து
சிந்திக்கும் நல்ல அலைகளினுடைய நிலைகள் மாறி
அவரால் வியாதியைக் கண்டுபிடிக்க முடியாது.
தப்பான அபிப்ராயத்தைக் காட்டும்.
இந்த உணர்வின் அலைகள் வேலை செய்யும்.

யாம் சொல்வது உங்களுக்கு லேசாகத் தெரியும். இயற்கையின் உண்மையான நிலைகளில் எந்தப் பாசத்தை வைத்திருக்கின்றோமோ, அது நம்மையறியாமலே அவருக்கு தீமையை விளையவைக்குமே தவிர நல்லதை விளைவிக்காது.

கணவன் மேலே இவ்வளவு பாசம் வைத்திருந்தார்.
துடிதுடித்தார் என்று நாம் சொல்வோம்.
ஆனால், இவர்கள் பிறரைத் துடிக்க வைப்பது யாருக்கும் தெரியாது.

டாக்டர் வந்து பார்க்கும் பொழுது,
நம் உணர்வை உடனே நல்லதாக மாற்றிவிட வேண்டும்.

அதாவது, மருத்துவர் சரியான முறையில் நோயின் தன்மையைக் கண்டறிய வேண்டும். அவர் கொடுக்கும் மருந்துகள், சீரான நிலையில் என் கணவரின் நோயை நீக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஆக, இதை இப்படி மாற்றிப் பாருங்கள். இந்த உணர்வின் தன்மை தானாகவே வேலை செய்யும். இதை அனுபவத்தில் சொல்கிறோம்.

அதே சமயத்தில் கணவர் இப்படிப் படுத்துக் கிடக்கிறாரே, வியாபாரத்தில் இப்படி மோசம் பண்ணுகிறார்களே என்று பெண்கள் நினைத்தால் போதும். நிச்சயம் அவர்கள் மோசம் பண்ணுவார்கள்.

இந்த உணர்வு உடனடியாகப் போய் அங்கே வேலை செய்யும். செய்யாததைத் தூண்டுவதற்கு அதுவேதான் காரணமாகப் போகும்.
2. தன் கணவனுக்கு வரும் கெடுதலை மனைவியால் தடுக்க முடியும்
ஆகவே, இந்த உபதேசத்தைக் கேட்போர் கணவன் மனைவி இருவரும் அவசியம் ஆத்ம சுத்தி செய்து பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.

பெண்களுக்குச் சக்தி அதிகம். ஆத்ம சுத்தி செய்துவிட்டு, எந்த நோயானாலும் நோய் இல்லை என்று சொல்லுங்கள்.

கணவன் வெளியில் சென்றிருக்கும் பொழுது பெண்கள் முறைப்படி தியானம் செய்துவிட்டு கணவனுக்கு மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும். அவர் எத்தொழில் செய்தாலும், நன்றாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி எண்ண வேண்டும்.

ஜோதிடரிடம் சென்று 1000 ரூபாய் கொடுத்துவிட்டு வருகின்றோம் அல்லவா. அதை விடுத்து சாமி இப்படியெல்லாம் செய்யச் சொல்லியிருக்கிறார் என்று நீங்கள் ஆத்ம சுத்தி செய்து பாருங்கள். நன்றாக இருக்கும்

எண்ணத்தின் வலுப்பெற்றாக வேண்டுமென்றால், நீங்கள் யாம் சொல்லும் முறைப்படி எண்ணினால் இந்த வாக்குறுதி செயலாகும். யாராவது கெடுதல் செய்யவேண்டும் என்று நினைத்தால் கூட உங்கள் உணர்வுகள் போய் அதைப் பிளக்கும்.

உதாரணமாக, வேப்ப மரம் தன் கசப்பின் தன்மையைக் கொண்டு இயங்குகின்றது. வேறொரு மணம் வந்தால் அதை ஒதுக்கிவிடும்.

கணவன் மனைவி இருவரும் ஒன்று சேர்ந்து, ஒரே நிலைகள் கொண்டு ஆத்ம சுத்தி செய்யும் பொழுது, மற்றொருவர் உங்களுக்குக் கெடுதல் செய்யவேண்டும் என்ற எண்ணங்கள் கொண்டிருந்தால்,
உங்கள் எண்ணங்கள் அங்கே ஊடுருவும்.
அந்தக் கெடுதலான எண்ணங்கள் அங்கே தடைப்பட்டுவிடும்.
இந்தக் கெடுதலான எண்ணங்கள்
உங்கள் உணர்வுக்குள் வருவது தடைப்படும்.

நீங்கள் உயர்ந்த உணர்வுகளை எடுத்துச் சொல்லும் பொழுது, உங்கள் வியாபாரத்தில் உங்களிடம் பொருள் வாங்கிச் செல்பவர்களுக்கு நல்லதாக இருக்கும். அந்தக் கடைக்குச் சென்றேன், நல்லதாக இருந்தது என்பார்கள். இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம். எலலாமே உணர்வின் செயல்தான்.