ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 10, 2013

மனதைத் தங்கமாக்குவது என்றால் என்ன?

அந்த மகாஞானிகளின் அருள் ஒளிகளை நாம் பெறவேண்டும். அனைத்து மகரிஷிகளினுடைய எண்ண ஒலிகள் இன்றும் காற்றிலே மிதந்து கொண்டிருக்கின்றது. அதை நாம் பெறுவதற்குத்தான் இப்பொழுது நாம் செய்யும் இந்தத் தியானம்.

அன்று மகரிஷிகள் எப்படிக் காட்டினார்களோ அதன் வழிகளில் நாம் ஒவ்வொருவரும் உள்ளத்தைத் தங்கமாக்க வேண்டும். தங்கம் எதிலுமே மாசுபடுவதில்லை.

தங்கத்தில் அழுக்கு நிற்காது. அதனுடைய நிறத்தை மாற்றாது. ஆக, இந்தத் தங்கத்தின் நிலைகளில் மாசுபடா நிலைகள் இருந்தால் அது எப்பொழுதும் “பளிச்” என்று இருந்து கொண்டேயிருக்கும்.

அதைப் போன்று, மனிதனுடைய நிலைகளில் நாம் தங்கத்தைப் போன்று ஒவ்வொரு எண்ணத்தையும் உயர்ந்ததாக ஆக்கிக் கொண்டால் ஒருவர் நம்மைத் திட்டினால் நல்ல எண்ணத்தில் இது மாசுபட்டு அதை அழிக்காது.
இதுதான் தங்கமாக்குவது.
தங்கமாக்குவது என்றால் வேறொன்றுமில்லை.

நமக்குள் பிறருடைய சங்கடப்படும் உணர்வுகள் வந்து, இப்படி நம்மைப் பழித்துப் பேசிவிட்டார்களே என்ற உணர்வு வந்தால் மற்ற பாத்திரங்களில் அழுக்குப் பட்ட மாதிரி அதனுடன் படிந்துவிடும். அதைத் தேய்க்கத் தேய்க்க அது தேய்ந்து கொண்டே இருக்கும்.

இதைப் போல நம் நல்ல எண்ணத்திற்குள் பிறர் சொல்லும் துன்பமான எண்ணங்கள் இருளான நிலைகள் வந்தால், நமக்குள் இருள் சூழும்.

அதே மாதிரி நாம் நல்ல எண்ணத்துடன் இருக்கும் பொழுது, பிறர் ஏதாவது “சுருக்” என்று சொல்லிவிட்டால் இருள் சூழ்ந்துவிடும். அந்த சமயத்தில், ஞானத்தை ஊட்டும் நிலைகள் அங்கே மறையும்..

இதற்குத்தான் நாம் மனதைச் சுத்தப்படுத்துவதற்கு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் அதைச் சுத்தப்படுத்தும் பொழுது நமக்குள் மாசுபடும் நிலைகள் மாறி, நமக்குள் இருக்கக்கூடிய ஒவ்வொரு குணத்தின் எண்ணத்தையும் தங்கமாக மாற்றிவிடும்.

இதுதான் கொங்கணவர் தங்கமாக்கியது. நீங்கள் இதைச் செய்து பாருங்கள். இதைப் போல செய்து பார்க்கும் பொழுது,
·         வாழ்க்கையிலும் செல்வம் வரும்.
·         உங்கள் மனதிலேயும் மகிழ்ச்சி வரும்.
·         உங்கள் சொல்லிலேயும் தெளிவு வரும்.

ஆக, நீங்கள் இந்த தியானத்தின் மூலம் இந்த உணர்வின் தன்மையை நீங்கள் எடுக்கப்படும் பொழுது உங்கள் தொழிலேயும் செல்வாக்கைப் பார்க்கலாம். உங்கள் மனதில் மகிழ்ச்சியையும் பார்க்கலாம்.