ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 17, 2013

நாம் வெளிப்படுத்தும் உணர்வுகள் கைக்குழந்தைகளை எப்படி பாதிப்படையச் செய்கின்றது?

உதாரணமாக மற்றவர்களைப் பற்றி
“அவர்கள் அப்படி மோசம் இப்படி மோசம்” என்று பேசிப் பாருங்கள்.
நான்கு மணி நேரமானாலும் நேரம் போவது தெரியாது.

இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருந்த பின்பு கண்டிப்பாக சோர்வு வரும். ஏதாவது பேசினால், வீட்டில் சண்டை வரும். கடைக்குப் போனால் வியாபாரம் சரியாகச் செய்ய மாட்டோம்.

அதே மாதிரி, கவலையாகச் சங்கடமான நிலைகளில் பேசிக் கொண்டிருந்த வேதனை உணர்வுகள் கைக்குழந்தை உள்ளத்தில் பட்டவுடன், நம் குழந்தை வீல் வீல் என்று கத்த ஆரம்பித்துவிடும்.

அதிகம் வேதனைப்பட்டவர்களின் வேதனைகளைக் கேட்டுணர்ந்து அதன்பின் நீங்கள் குழந்தையைப் பாருங்கள். கொஞ்ச நேரத்தில், அந்தக் குழந்தை எவ்வளவு தூரம் கத்துகிறது என்று பாருங்கள்.
உங்கள் மூச்சு பட்டவுடன் அதற்கு வயிற்று வலி வரும்.
கண் வலி வரும். ஏதாவது ஒன்று வரும்.

ஏனென்றால், அந்தக் குழந்தை நம்மிடம் பாசமாகப் பார்க்கின்றது. அதற்கு வேதனை தெரியாது, பிஞ்சு உள்ளம். நாம் எடுத்துக் கொண்ட இந்த விஷமான உணர்வுகள் பட்டவுடன் இந்தக் குழந்தையின் உடல் பாதிக்கும்.

கல்யாண வீட்டிற்குள் சென்று பாருங்கள். பலர் குழந்தையைக் கொஞ்சினால் குழந்தைக்கு ஏதாவது ஒரு தொல்லை வரும். ஒரு கூட்டத்திற்குள் எடுத்துச் சென்று விட்டு வந்தால், ஒருவர் சங்கடமாக இருந்திருப்பார். அவர் குழந்தையைத் தூக்கினால் போதும். அந்தச் சங்கடமான மூச்சலைகள் பட்டு, குழந்தைக்குள் அந்த சங்கட அலைகள் சேர்ந்துவிடும்.

இவையெல்லாம் இந்த உணர்வுகள் பாய்வதுதான். எல்லாமே உணர்வின் செயல்தான். இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.