ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 10, 2013

கடவுளைப் பார்க்க திருமூலர் வெளிப்படுத்திய பாடல்

கண்பார்க்கக் கிட்டாது காணஅரிது என்னீர்
நண்பாக பார்க்கவே மார்க்கஞ்சொல் நந்தி
வன்பட்ட கண்ரண்டும்வைத்து முனைமூக்கில்
தென்பட்ட நாலுஞ் சிதையாமல் நோக்கிட
--திருமூலர்
1. கண்பார்க்கக் கிட்டாது காணஅரிது என்னீர்
அண்ட சராசரம் எல்லாவற்றிலும் கடவுள் இருக்கிறார். அவர்தான் எல்லாவற்றையும் உருவாக்கினார் அவரே இயக்குகிறார் என்றும், கடவுள் இல்லாத இடமே இல்லை என்றும் சான்றோர்கள் சொல்கிறார்கள்.

இந்த மனித வாழ்க்கையில் மனிதர்கள், எத்தனையோ பல எண்ணங்களிலும், உணர்வுகளிலும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள். இப்படிப்பட்ட லௌகீக வாழ்க்கையில், சாதாரண மனிதர்கள் கடவுளைப் பார்க்க முடியாது, “அது முடியாதது” என்று சொல்கிறார்கள்.
2. நண்பாக பார்க்கவே மார்க்கஞ்சொல் நந்தி
ஆகவே, அண்டசராசரத்தில் எல்லாவற்றிற்கும் உள்ளே இயக்கிக் கொண்டிருக்கின்ற அந்தக் கடவுளை சாதாரண மனிதர்கள் முழுமையாகப் பார்க்கவும், கடவுளோடு ஒன்றி வாழவும் உபாயம் ஒன்று வேண்டும்.

நம்மை உருவாக்கியது நம் தாய் தந்தையரே. முதல் தெய்வமும் அவர்கள்தான். தாய் தந்தையரின் அருளால்தான் நாம் அண்டத்தின் ஆற்றலையும், இந்தப் பிண்டத்தின் இயக்கத்தையும் அறிய முடியும், பார்க்க முடியும்.
3. வன்பட்ட கண்ரண்டும்வைத்து முனைமூக்கில்
வலிமையான நமது கண்களாகிய இரண்டையும், கண்ணின் நினைவை மூக்கின் முனையில் கொண்டு போய் வைக்க வேண்டும்.

அதாவது, நாம் கண்கள் புறத்தில் இருப்பதைக் காட்டுகின்றது. அதே சமயத்தில் நாம் அக நினைவு கொண்டு, கண்ணின் நினைவைப் புறத்தில் செலுத்தாமல், கூர்மையாக மூக்கின் நுனிக்குக் (புருவ மத்திக்கு) கொண்டுவரவேண்டும்.

மூக்கின் மேல் புருவ மத்தியில் தான்
கவன ஈர்ப்பு நரம்பு உள்ளது.
புறக் கண்ணின் நினைவவை,
அக நினைவுடன் அங்கே கொண்டு செல்லும்போது
அகக் கண்ணாக, ஞானக் கண்ணாக மாறுகின்றது.
ஞானதிருஷ்டி என்றும் இதைச் சொல்வார்கள்
4. தென்பட்ட நாலுமஞ்சிதையாமல் நோக்கிட
கண்கள் இரண்டும் அகக் கண்ணுடன் இணைந்து,
சுவாசமானது அதன் வழி அமைந்து
(2+1+1 நான்கும் ஒன்றாகச் சேரும்போது),
விண்ணின் ஆற்றலைக் கூர்மையாக எண்ணி அதைச் சுவாசித்தால், அது புருவ மத்தியில் மோதி, நீல நிறமாக அலைகள் குவிந்து வெண்மை நிற ஜோதியாக ஒளிரும். கண்களை மூடியும் சரி, திறந்திருந்தாலும் சரி அதைப் பார்க்க முடியும்,

நம் சுவாசம் விண்வெளி சுவாசமாக மாறும் பொழுது, அந்த நீல நிற ஒளி நமக்குள் பெருகப் பெருக, நாம் வேகா நிலையாக ஒளியின் சரீரம் பெறமுடியும்.

இந்த ஒளியான சக்தியை வைத்துத்தான் சப்தரிஷிகளும் எல்லா மாமகரிஷிகளும் என்றும் பதினாறு என்ற நிலையில், அழியாத நிலையில் பேரின்பப் பெருவாழ்வு என்று பேரானந்த நிலையில் எல்லையில்லாத இந்தப் பேரண்டத்தில் வாழ்ந்தும் வளர்ந்தும் கொண்டுள்ளார்கள்.

அந்தச் சக்தியை நாமும் வளர்த்து, ஜோதிமயமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளுடன் இணைந்து வாழ்வோம்.

சிறிது நாள் பழகிவிட்டால் சுலபமாகக் கிட்டக்கூடியது. அவர்களுடன் நாம் தொடர்பும் கொள்ள முடியும். நம் அனுபவத்தில் பார்க்கலாம்.