ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 24, 2013

என் மனைவியின் (சாமியம்மா) வலுவான எண்ணத்தால் யாம் சக்தி பெறமுடிந்தது - ஞானகுரு

1. என் மனைவியின் வலுவான எண்ணத்தால் எமக்குச் சக்தி கிடைத்தது
குருநாதர் எம்மை அழைத்துச் சென்ற நிலையில், நான் இங்கே என் குடும்பத்தை விட்டுவிட்டுப் போய்விட்டேன். என் மனைவிக்கு நோய் வந்து அதிலிருந்து மீண்டு அப்பொழுதுதான் எழுந்திருந்தார்கள்.

அப்பொழுது அவரின் தாயாருக்கு உடலுக்கு முடியாமல் இருக்கிறது. எமக்கு ஐந்து குழந்தைகள். ஆனால், கையில் இருக்கக்கூடிய பணத்தையெல்லாம் என் மூத்த பையன் கொண்டுபோய் இறைத்துவிட்டான்.

அப்படி இருந்த அந்த சந்தர்ப்பத்திலும்
தன் வலுவின் தன்மையை விடாதபடி
ஒரே நிலைகளிலே எப்படியும்
நாளைக்கு ஜீவிக்க முடியும்.
நாளைக்கு நன்றாக இருப்போம் என்ற அந்த எண்ணத்தில்
என் மனைவி (சாமி அம்மா)
இருந்து வந்ததினால்தான் தாக்குப்பிடிக்க முடிந்தது.

ஏனென்றால் அந்த வலுவான எண்ணத்தை இங்கே அதிகமாகக் கூட்டியதால்தான். எனக்கு இந்தச் சக்தி கிடைக்க முடிந்தது. என் மனைவி சோர்வையும் சஞ்சலத்தையும் எடுத்து அதை நான் பார்த்துக் கொண்டிருந்தால் நான் சக்தி பெற்றிருக்க முடியாது.

குருநாதர் பல சக்திகளைக் கொடுத்தாலும் கூட என்னைச் சார்ந்தவர்கள் குடும்பத்தில் வேதனையிலும், சங்கடத்திலேயும் எத்தனையோ அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

நான் வெளியிலே போகப்போகும்போது எனக்குக் கஷ்டம். அதே சமயத்தில் வீட்டிலே கஷ்டம். ஏற்கனவே கையில் வைத்திருந்த பணத்தையெல்லாம் பையன் வாரி இறைத்துவிட்டான். பல நிலைகளிலும் தொல்லை வருகிறது. இங்கேயும் தொல்லைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நான் நன்றாக நீட்டாக (NEAT) இருந்து கொண்டு இங்கிருந்து போகிறோம். போகிற பக்கமெல்லாம் நம்மைக் கிண்டல் செய்வது, கேலி பண்ணுகிறார்கள். ஒருவருக்கு யாம் உதவி செய்தாலும்கூட கேலி பண்ணுவார்கள் இத்தனை அவஸ்தைகள்.

ஆனால் வீட்டில் வந்தால் இவ்வளவு இம்சை. அப்போது அந்த நேரத்திலே இதைத்தான் குருநாதர் கொடுக்கிறார்.
இப்படி, ஒவ்வொரு நிமிடத்திலும் வரக்கூடிய
ஒவ்வொரு இம்சைகளிலிருந்தும், எதை எதையெல்லாம்
எப்படி எப்படியெல்லாம் பக்குவப்படுத்திக் கொடுக்க வேண்டுமென்று
எனக்கு அனுபவபூர்வமாகத்தான் கொடுத்தார் குருநாதர்.
2. யாம் உங்களையும் அந்தச் சக்தியைப் பெறச் செய்கின்றோம்
அந்த சமயத்தில் நம் வீட்டில் தியானம் இருக்கவில்லை அப்பொழுது தியானமெல்லாம் சொல்லவில்லை. பொதுவாக குருநாதருடைய நிலைகள்தான் தெரியும்.

எல்லோரும் தியானத்தைச் செய்வதற்குண்டான வழியை முதலில் அறிவதற்கு, எது தியானம்? எப்படி தியானம் செய்வது? என்ற இந்த அனுபவத்தைப் பெறுவதற்கு 16 வருட காலம் உணர்த்தினார்.

அதாவது, ஒரு எண்ணத்தின் தன்மையை
இந்தக் காற்றிலே இருப்பதை எப்படி சுவாசிப்பது?
அதைக் காற்றிலிருந்து எப்படி பிரிப்பது?
அதை நாம் எப்படி சுவாசிப்பது?
உங்கள் உடலில் எப்படிச் சேர்ப்பது?
என்ற இந்த நிலைகளையெல்லாம் அறிந்த பின்புதான் உங்களுக்கு அதை உபதேச வாயிலாகப் பதிவு செய்கின்றோம்.

நமது குருநாதர் 16 வருட காலத்தில் உணர்த்திய, அதை யாம் கண்டுணர்ந்து வளர்த்த, அந்த சக்தி வாய்ந்த அருள் ஞான வித்துக்களைத்தான் உங்களுக்குள்ளும் ஊன்றி, அதை நீங்களும் வளர்ப்பதற்கு, குருநாதர் உணர்த்திய அதே வழிப்படி உணர்த்தி வருகின்றோம்.