ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 13, 2013

கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கு திருமூலர் வெளிப்படுத்திய பாடல்

இவன்இல்லாமல் அவனுக்குக் கோவில் இல்லை
அவனுக்கும் வேறுஇல்லம் உண்டா அறியின்
அவனுக்கு இவன்இல்லம் என்று அறிந்தும்
அவனை புறம் என்று ஆற்றுகின்றாரே
--திருமூலர்
1. இவன்இல்லாமல் அவனுக்குக் கோவில் இல்லை
“சிவம் இல்லையேல் சக்தி இல்லை
சக்தி இல்லையேல் சிவம் இல்லை”
இதில் சிவம் என்பது திடப் பொருள்,
அதற்குள் மறைந்து நின்று இயக்குவது சக்தி.
கண்ணுக்குப் புலப்படாத பல சக்திகள் ஒன்று சேரும் பொழுதுதான், கண்ணுக்குப் புலப்படக்கூடிய ஒரு பொருளாக உருவமாகத் தெரிகின்றது.

இந்த அகண்ட அண்டத்தில், ஒன்றுடன் ஒன்று இணைந்துதான் அனைத்துமே இயங்குகின்றது. தனித்த சக்தி என்பது அண்டத்திலே கிடையவே கிடையாது.

விண்ணிலே தோன்றிய ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈசனான இந்த உயிர் பல கோடிச் சரீரங்கள் எடுத்து எடுத்து, இன்று மனித உடலை உருவாக்கியது.
ஆக, இந்த மனித உடல் என்பது
ஈசன் வீற்றிருக்கும் ஆலயம்.
2. அவனுக்கும் வேறுஇல்லம் உண்டா அறியின்
ஆதிசக்தி என்பது எல்லையே இல்லாத ஒரு விஷமான ஆற்றல். அது விஷமற்ற மற்றொன்றைத் தாக்கும் பொழுதுதான் வெப்பமாகி, ஈர்க்கும் காந்தமாகின்றது.

காந்தத்தால் மற்றொன்றைக் கவர்ந்து அணுக்களாகி, அதன் வளர்ச்சியில் பல கோடி அணுக்கள் ஒன்று சேர்ந்து, திடப்பொருளாக ஒரு மண்டலமாக உருவாகின்றது.

மண்டலத்தின் வளர்ச்சியில் கோளாகி, நட்சத்திரமாகி, சூரியனாகி, ஒரு பிரபஞ்சமாக உருவாகி, அதற்குள் உயிரணுக்கள் தோன்றி மனிதன் வரை வளர்ச்சி அடைந்தது. விஷத்தைச் சிறுகச் சிறுக வடிகட்டும் நிலையாக வளர்ந்த வந்தது தான், இந்த மனித உடல்.

அதாவது, உடலுக்குள் நின்றுதான் விஷத்தை வடிகட்டும் ஆற்றலை வளர்க்க முடியும். இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்களுக்குத் தேய்மானம் உண்டு. வளர்ச்சி கிடையாது.

மனிதனானபின், அவன் தன்னையும், இந்தப் பிரபஞ்சத்தையும் இந்த ஆதி சக்தியின் இயக்கத்தையும் அனைத்து ஆற்றலையும் அறிய முடியும். ஆக, இந்தப் பிரபஞ்சத்தில்
மனித உடல் பெறுவது என்பது “முழு முதல் கடவுள்”.

இந்த மனித உடல் பெற்ற பின்புதான் விண்ணின் ஆற்றலைத் தனக்குள் வளர்த்து, விஷத்தை ஒளியாக மாற்றி உயிராத்மா விமோசனம் பெறமுடியும். மற்ற உயிரினங்களுக்கோ, தாவரங்களுக்கோ வேறு எந்தப் படைப்புக்கும் அந்தத் தகுதி கிடையாது.
3. அவனுக்கு இவன்இல்லம் என்று அறிந்தும்
நம் உடல் சிவம் என்றாலும், இந்த உடலை விட்டு உயிர் சென்றுவிட்டால் சவம் ஆகின்றது. சிறிது நேரம் ஆகிவிட்டால் நீசம் ஆகின்றது. இந்த உயிர் இல்லையென்றால் நான் என்ற சொல்லே வரமுடியாது.

ஆனால், நம் வாழ்க்கையில் நான் இதைச் செய்தேன், என் வீடு, என் சொத்து, என் ஊர், என் நாடு என்று நமக்குச் சொந்தமில்லாதது அனைத்தையும் சொந்தமாக்குகின்றோம். கடைசியில் வேதனையைத்தான் அனுபவிக்கின்றோம்.

நமக்குச் சொந்தமானது, நித்தியமானது ஒன்றே ஒன்று, நம் உயிரே என்று அறிய வேண்டும். ஆகவே, நான் யார் தான் யார்? இந்த உடலை உருவாக்கியது யார்?

உயிர் உருவாக்கிய கோட்டைதான் மனித உடல்.
மனிதராகப் பிறப்பது அரிது.
மனித உடல் பெற்றதே பெரிய பாக்கியம்.
இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
4. அவனை புறம் என்று ஆற்றுகின்றாரே
கடவுள் எங்கோ இருக்கின்றார் என்றும்,
கடவுளே இல்லை என்றும் பலர் சொல்கின்றனர்.

ஆனால், தம் உயிரே கடவுள் என்றும் அவன் வீற்றிருக்கும் இந்த உடலே கோவில் என்றும் உணர்ந்தவரே மேலானவர். தனக்குள் உள் நின்று இயக்கும் உயிரைக் கடவுளாகவும் உயிரால் உருவாக்கப்பட்ட இந்த உடலை ஆலயம் என்று எவர் மதிக்கின்றனரோ அவரே தெய்வீக நிலைபெறத் தகுதியானவர்.

ஆனால், தன்னை அறியாமலும் தனக்குள் இருக்கும் உயிரைப் பற்றி அறியாமலும் வாழ்க்கை வாழுபவர்கள் மனிதராக இருந்தாலும், கீழான மற்ற உயிரினங்களுக்கு ஒப்பானவரே என்பதை அறிய வேண்டும்.