ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 5, 2023

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் மனிதர்களின் ஈர்ப்பு வட்டத்தை அது பற்றற்றதாக ஆக்கும்

குழந்தைகளை மட்டும் “வாடா…” என்று கொஞ்சம் நீங்கள் அதட்டிக் கூப்பிட்டுப் பாருங்கள். அவன் முறைத்துக் கொண்டு நிற்பான். ஆனால் “வாடா கண்ணு…!” என்று அன்புடன் அழைத்துப் பாருங்கள்… இணங்கி உங்களிடம் வருவான்.

இந்த இரண்டு உணர்வுகளுக்கும் உண்டான வித்தியாசம்… சந்தர்ப்பங்கள் அதனுடைய அழுத்த உணர்வுகள் ஆகப்படும் பொழுது… எந்த நிலையில் இயக்குகிறது என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

அதாவது…
1.ஒன்றுடன் ஒன்று மோதும் போது (+/-) லைட் எரிகின்றது.
2.மாற்று உணர்வுகள் இணையும் போது சப்தம் (கர்ர்ர்…”) வருகின்றது.

மின்சாரம் ஒரே சீராக வந்து கொண்டிருந்தாலும் திடீரென்று அதிலே எதிர்மறையான “எர்த்” வந்தால் அத்தகைய சப்தங்கள் வருகிறது. (இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்).

இந்த இயக்கத்தின் நிலைகள் இது எல்லாம் இயற்கை.

ஆனாலும் இயற்கையில் வருவதை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி மனிதனுக்கு உண்டு. அது தான் முருகு…! மாற்றி அமைக்கும் சக்தி பெற்றவன்… பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்…!

1.ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நல்லதாக மாற்றி அமைக்கக்கூடிய…
2.அதை உருவாக்கக்கூடிய சக்தி பெற்றவன் மனிதன் என்று காட்டுகின்றார்கள்
3.அதனால் தான் ஆறாவது அறிவு அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று காட்டுகின்றார்கள்.

விமானம் மேலே பறக்கிறது என்றால் காற்றழுத்தத்தின் தன்மை கொண்டுதான் அது இயங்குகின்றது. இருந்தாலும் அதிலே சுழலக் கூடிய இயந்திரத்தில் ஒரு பின்னை (PIN) எடுத்து விட்டால் போதும்… எல்லாமே தீர்ந்துவிடும்.

1.ஒவ்வொரு பொருளிலும் சில நுண்ணிய அலைகளை வைத்துத் தான் அதனுடைய இயக்கங்களே சீராக இருக்கின்றது.
2.அதே மாதிரி அந்த நுண்ணிய அலைகளை வைத்து நமக்குள் மாறி வரும் உணர்வின் அழுத்தங்களைச் சீராக்க முடியும்.

இதை எல்லாம் நாம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். அதற்குத் தான் இதைச் சொல்வது.

ஏனென்றால் நாம் எல்லோரும் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் விஷ்ணு தனுசு. இந்த வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய ஒவ்வொன்றையும் அதை வைத்து மாற்றி அமைக்க முடியும்.

1.சந்தர்ப்பங்கள் தான் நம்மைக் குற்றவாளியாக ஆக்குகின்றது
2.சந்தர்ப்பங்கள் தான் நம்மைக் கோபக்காரனாகவும் ஆக்குகின்றது
3.சந்தர்ப்பங்கள் தான் நம்மை வேதனைக்கும் உள்ளாக்குகின்றது.

ஆக இப்போது நாம் எந்தச் சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டும்…?

தீமைகளை எல்லாம் அடக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் விஷ்ணு தனுசு. ஆனால் என்னை இப்படிப் பேசுகின்றான்… திட்டுகின்றான்… வேதனைப்படுத்துகின்றான்…! என்ற அந்த உணர்வு தாக்கி அதை நாம் எடுத்தால் சிவ தனுசு. மீண்டும் பிறவிக்குத் தான் வர வேண்டும்.

உதாரணமாக… உதவி செய்கின்றார்கள். ஆனால் சந்தர்ப்பம் பணத்தை வாங்கியவரால் அதைத் திரும்பக் கொடுக்க முடியவில்லை. அதனால் சண்டையிடுகின்றார்கள்.
1.ஆனால் நம்மிடமோ தவறு இருக்கின்றது
2.பணத்தைக் கொடுத்தோம்.. உதவி செய்தோம் என்று உண்மையைச் சொல்ல வருகின்றார்கள்.

பார் அன்று பணம் இருக்கும் போது எல்லோருமே என்னிடம் வாங்கிச் சாப்பிட்டார்கள். ஆனால் இன்று அடுத்தவருடன் சேர்ந்து கொண்டு என்னை மிகவும் கேவலமாகப் பேசுகிறார்கள்… என்று சொல்கிறார்.

உணர்வு அந்த இடத்தில் அழுத்தமாக வரும் போது இங்கேயும் தூண்டுகிறது. அவர்களும் வேண்டியவர்கள் தான்… இவர்களும் வேண்டியவர்கள் தான்… அவர்களும் உதவி செய்தவர்கள் தான் இவர்களும் உதவி செய்தவர்கள் தான்

ஆனால் குற்றம் இங்கே இருக்கப்படும் பொழுது அதை வெளிப்படுத்த முடியாதபடி இந்த உணர்வு செல்லும் போது அங்கே எதிர்மறையாகிறது
1.இருவர் மத்தியிலும் சிக்கிக் கொண்ட பின்… அந்தச் சந்தர்ப்பம்
2.ஒருவரை ஆதரிக்கும் பொழுது ஒருவரிடம் நாம் குற்றவாளியாக மாறிவிடுகின்றோம்.

இதைப் போன்று இந்த உணர்வுகள் வாழ்க்கையினுடைய சந்தர்ப்பங்கள் பெரிய குற்றவாளியாக அந்த இடத்தில் நம்மை உருவாக்கி விடுகின்றது.

அன்று உதவி செய்தேன்.. ஆனால் இப்போது இப்படிச் செய்கின்றானே…! என்று “ஆவேசம்” வரும். நாம் இட்ட உணர்வுகள் நேருக்கு நேர் ஆனவுடன் இந்த ஆவேச உணர்வு நமக்குள் வந்து அடுத்தடுத்து வரப்படும் பொழுதெல்லாம்
1.நம்முடைய நல்ல செயல்களை மாற்றிக் கொண்டே வரும்
2.நல்லவைகளைப் பற்றிச் சிந்திக்கும் உணர்வு வராது
3.குற்ற இயல்புகளுக்கே கடைசியில் அழைத்துச் சென்று விடுகின்றது.

இந்த ஆவேசம் ஒவ்வொன்றையும் தடைப்படுத்துகின்றது. எதையாவது ஒரு பொருளை எடுத்துப் பக்குவமாகச் செயல்படுத்த வேண்டும் என்றாலும் உடனடியாக இந்த ஆவேசம் தான் வரும்.

ஆனால் என்ன சொல்கின்றார்…? ஏது சொல்கின்றார்…? என்று சிந்திக்கும் தன்மையை அங்கே இழக்கச் செய்யும். இது எல்லாமே சிவ தனுசு.. ஒவ்வொருவர் மேலும் வெறுப்பு தான் வரும்.
1.யார் மீது இந்த வெறுப்புகள் அதிகமாக (முழுமையாக) ஆனதோ
2.புவியின் ஈர்ப்புக்கே (பற்று) வருகின்றோம்

ஆனால் நாம் தவறு செய்யவில்லை. இதையெல்லாம் மாற்றுவதற்குத் தான்… வாழ்க்கையே தியானமாக்க வேண்டும் என்று சொல்வது.

வாழ்க்கையில் எந்த நிலை… எப்படி வந்தாலும்… ஈஸ்வரா என்று உயிரை எண்ணி ஒரு நொடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எடுத்துப் பழக வேண்டும்.

ஏனென்றால்
1.எத்தனையோ உணர்வுகள் “இப்படி மாறி வரும்…”
2.அடுத்த கணம் இதை எடுத்துப் பழக வேண்டும்…
3.அப்போது தீமைகளைத் தடைப்படுத்தும்
4.உடனே கொஞ்சம் மன வலிமை கிடைக்கும்.

இப்படி நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொன்றாகச் சேர்த்து மாற்றமான நிலைகளில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைக்கப் பழகிக் கொண்டால்
1.“பற்று” துருவ நட்சத்திரத்தின் மீது வருகின்றது.
2.மனிதனுடைய ஈர்ப்பு வட்டத்திலிருந்து பற்றற்றதாக ஆகிறது
3.நம்மை விண்ணுக்கு அழைத்துச் செல்கின்றது.

பற்று…! பற்றற்று இரு…! என்று சொல்வார்கள்.
1.பற்ற வேண்டியது துருவ நட்சத்திரத்தின் சக்தியை
2.பற்றற்று இருக்க வேண்டியது தீமைகளை…!
(இதுதான் பற்று…! பற்றற்று இரு…! என்பதனுடைய அர்த்தம்)

துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக இருப்பவர்கள் இதையெல்லாம் சற்று சிந்தனை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையை அருள் வழியிலே சீராக்கிக் கொள்ளுங்கள்.