ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 16, 2023

தியானத்தில் இருந்தாலும் குரு வழியில் ஆயுள் மெம்பராக நாம் சேர வேண்டும்

உடல் ஆசையை (முதன்மையாக) வைத்து “ரெக்ரியேசன் கிளப்” (RECREATION CLUB) என்று அதில் ஆயுள் மெம்பராகச் சேர்வார்கள். தண்ணீ குடிப்பது (மது) போன்று எத்தனையோ பல தீய பழக்க வழக்கங்களை வைத்து அதிலே நாங்கள் ஒவ்வொருவரும் மெம்பராக இருக்கிறோம் என்கிறார்கள்.

வியாபாரமும் மற்றதுகளையும் அங்கே பேசுவார்கள். ஆனால் அதிலே ஏதாவது நஷ்டமாகிவிட்டால் என்ன ஆகும்…?

தவறான வழியில் சென்று… “எனக்குக் கெடுதல் செய்தான்… எனக்குத் துரோகம் செய்தான்…” என்று ஒருவருக்கொருவர் பகைமைகளை உருவாக்கி வெறுப்பையும் வேதனையையும் (அந்த ஆயுள் மெம்பர்கள்) வளர்த்துக் கொள்வார்கள்.

வேதனையை வளர்த்துக் கடைசியில் உடலை விட்டுப் பிரிந்த பின் ஆவியாக யார் கெடுதல் செய்தானோ அந்த உடலுக்குள் சென்று அவனையும் வீழ்த்தும்.. அதற்குப் பின் நாயோ நரியோ பாம்போ தேளோ அத்தகைய உடலைத் தான் பெற முடியும்.

இத்தகைய ஆயுள் மெம்பர் நமக்குத் தேவையில்லை...!

1.எப்பொழுதும் குருவுடன் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்) நாம் இணைந்தே வாழ வேண்டும் என்ற நிலையில்
2.குரு காட்டிய அந்த அருள் வழியைப் பின்பற்றி
3.இந்த மனித வாழ்க்கையில் நம்மை அறியாமல் உடலுக்குள் உட்புகுந்த தீமைகள் இயக்காது தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆயுள் கால மெம்பர்கள் இதை முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டும்.

1.குருவுடன் ஆயுள் கால மெம்பராக நான் (ஞானகுரு) இருக்கின்றேன்
2.அவர் எதையெல்லாம் பெற்றாரோ அவர் வழியினைக் கடைப்பிடித்து வருகின்றேன்.
3.குரு எனக்கு எதையெல்லாம் போதித்தாரோ… எவ்வாறு எனக்குள் அதைப் பதிவு செய்தாரோ.. அதைக் கடைப்பிடித்து வருகின்றேன்.

குருவுடன் இணைந்து ஆயுள் மெம்பராக இருக்கின்றேன் நீங்களும் என்னைப் போல் அவருடன் இணைந்து ஆயுள் மெம்பராக இணைதல் வேண்டும்.

குடும்பத்துடன் தான் நாங்கள் குருவுடன் ஆயுள் மெம்பராகச் சேர்ந்தோம். நீங்களும் குடும்பத்துடன் குருவுடன் இணைய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழிகளை குறைந்த காலமாவது உபதேசங்களைக் கேட்டிருப்பீர்கள். குருவின் அருள் வழியைக் கடைப்பிடிப்பதை நீங்கள் ஒரு கடமையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மெய் ஞானத் திருச்சபையின் அங்கத்தினர்களாக நாம் இருக்கின்றோம். நம் வாழ்க்கையில் வரக்கூடிய தீமைகளை நீக்க வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தாக வேண்டும் அதற்குத் தான் அருள் ஞானச் சக்கரத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளோம்.

மாமாகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் துணை கொண்டு… பேரருள் பெற்று ஒளியின் சரீரமாக இருக்கும் அதில் ஆயுள் மெம்பராக நாம் சேர வேண்டும்.

அருள் ஞானச் சக்கரத்தைப் பார்க்கும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதன் பின் உங்களுக்கு எதுவெல்லாம் நல்லதாக வேண்டுமோ…
1.குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அது கிடைக்க வேண்டும்; நண்பர்களுக்குக் கிடைக்க வேண்டும்…
2.நோய்கள் நீங்க வேண்டும்… தொழில் வளம் பெருக வேண்டும்;
3.தொழில் செய்யும் இடத்தில் குற்றம் குறைகள் நீங்க வேண்டும்;
4.துருவ நட்சத்திரத்தின் சக்தி அனைவருக்கும் கிடைக்க வேண்டும்;
5.பொருளறிந்து செயல்படும் திறன் எல்லோரும் பெற வேண்டும்
6.உண்மையை உணர்ந்து… தெளிந்த நிலை எல்லோரும் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று
7.புருவ மத்தியில் உயிரை வேண்டி சக்கரத்திற்கு முன் இப்படி எண்ணும் ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.

குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்றால் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் சக்தி என் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் என்று தியானித்தால் நோய் நீங்கும்.

நோய் நீக்கும் சக்தியை எடுத்து நமக்குள் விளைய வைத்து அதன் வழி செயல்பட்டால் எல்லாம் நல்லதாகும். உங்களால் அடுத்தவருடைய நோய் போகும்… ஆனால் அவருடைய நோய் உங்களுக்கு வராது.

1.ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு ஒரு பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக “அருள் ஞானச் சக்கரம்” கொடுக்கின்றோம்.
2.உலகில் படர்ந்து கொண்டிருக்கக்கூடிய நச்சுத்தன்மையிலிருந்து உங்களை மீட்டிடும் சக்தியாக வரும்.

ஆகவே துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக என்றுமே நாம் இணைந்து இருக்க வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறுவதை ஒரு தலையாகக் கடமையாக வைத்துக் கொள்ள வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து அதிலே நாம் ஆயுள் மெம்பராகச் சேரும் போது “நம்முடைய ஆயுள்” (வாழ்க்கை) அங்கே செல்கின்றது.