ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 3, 2023

உலகில் உள்ள அனைவரையும் நாம் மதித்துப் பழக வேண்டும்

இது நடந்த நிகழ்ச்சி…! தியான வழியில் சாமியை (ஞானகுரு) வைத்துத் திருமணம் நடத்த வேண்டும் என்று இவர்கள் (பெண் வீட்டார்) கட்டாயப்படுத்துகின்றார்கள்.

ஆனால் அவர்கள் (ஆண் வீட்டார்)… எங்களிடம் பலர் பழகி இருக்கிறார்கள். நான்கு பக்கத்திலும் நாங்கள் பழக வேண்டும். எங்கள் முறைப்படித் தான் நாங்கள் திருமணம் நடத்த வேண்டும் என்று சொல்கின்றார்கள்.

“சரி… உங்கள் வழியில் நீங்கள் செய்து கொள்ளுங்கள்…” என்று சொல்லி விடுங்கள் என்று பெண் வீட்டாரிடம் சொன்னேன். அதே மாதிரிச் செய்தார்கள்.

பின் திருமணத்திற்கு வேண்டிய பத்திரிகை எல்லாம் அடிக்கப்படும் பொழுது என்னிடம் யோசனை கேட்க வந்தார்கள்.

அப்போது பையனின் தகப்பனாருக்கு ஒரு நெஞ்சு வலி இருந்தது. “எனக்கு நெஞ்சு வலி இருப்பதால் தான்” சீக்கிரம் திருமணத்தை முடித்து விடவேண்டும் என்று விரும்பினேன் என்றார்.

இங்கே வந்து என்னை அவர் சந்தித்தபின் நெஞ்சு வலி நின்றது. பின் அவருடைய மனம் மாறிவிட்டது. ஊருக்குச் சென்ற பின் மனது கலங்கிவிட்டது.

1.இவர்களும் விடாப்பிடியாகத் தியான முறைப்படி கல்யாணம் செய்ய வேண்டும் என்று சொன்னதால் அந்த இரண்டு மனதும் ஒன்றாகி விட்டது.
2.“குருவை வைத்தே திருமணம் செய்யலாம்…” என்று முடிவு செய்கின்றனர்.

இன்று அவர் இதை ஒத்துக் கொள்ளலாம்…! ஆனால் அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சொல்லும் பொழுது என்ன ஆகும்…? அந்தக் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் நாம் உபதேசிக்கும் உணர்வுகளை இணைத்துக் கொண்டு வந்து தான் மாற்ற முடியும்.

காரணம்… சம்பந்தம் செய்வதை நம்முடைய முறைப்படி ஐயரை வைத்துச் செய்யாதபடி “ஏதோ தியானம் செய்கிறார்கள்…” என்ற உணர்வுகள் அவர்களுக்குத் தோன்றத்தான் செய்யும்.

ஆனால் யாம் உபதேசிக்கும்போது மற்றவர்கள் அதைக் கேட்கப்படும் போது தான் அவர்கள் தெரிந்து தெளிந்து வாழக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
1.என்ன தான் தெரிந்து தெளிந்து வாழக்கூடிய நிலைகள் பெற்றாலும்
2.அந்த அனுபவம் பெற்றவர்களுக்கு அவர்கள் முறைகளைச் செயல்படுத்தவில்லை என்றால்
3.மனதிலே ஒரு அழுக்கு இருந்து கொண்டே இருக்கும்.

ஆனால் அந்த அழுத்தம் மாறி நம்முடன் ஒத்துழைத்தார்கள் என்றால் அது இப்படிச் செய்யலாம். இல்லை என்றால்…
1.அவர்கள் இஷ்டத்திற்குப் போய் நம்முடைய மனம் எப்படியோ
2.அது அவர்களுக்குத் தெரிய வேண்டும் என்று நாம் இப்படித்தான் எண்ண வேண்டும்.

எந்த இடத்திலும் இது போன்று பொதுவான திருமணம் நடக்கிறது என்றால் அவர்கள் இந்த முறைப்படி நாங்கள் செய்ய வேண்டும் என்று விரும்பினால் “சரி உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்…” என்று சொல்லிவிட வேண்டும்.
1.நாம் அதற்கு முன்னாடி தியானம் இருந்து அவர்களுக்கு என்னென்ன பிரார்த்தனை செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.
2.அவர்கள் முறைப்படி செய்யட்டும்…! என்று நாம் எண்ண வேண்டும்.

அப்படி இல்லாதபடி ஆரம்பமே பெண் வீட்டார்கள்… மாப்பிள்ளை வீட்டாரை பெண் வீட்டார்… நாங்கள் சொன்னபடி தான் கேட்க வேண்டும் என்று சொன்னால் நடக்குமா…? அதனால் விபரீதங்கள் தான் ஏற்படும்.

ஆகையினால் மனது ஒத்து வருவதற்கு…
1.தெரிந்தும் நாம் தவறு செய்யக்கூடாது
2.அவர்களுடன் ஒத்துழைத்து நம்முடைய தத்துவத்தை இணைந்து அவரிடத்திலே சொல்லும் பொழுது தான் ஏற்றுக்கொள்ளும் பக்குவமே வரும்.

இல்லை…இல்லை…! நாங்கள் இந்தத் தியான வழியில் பெரிய சக்திகள் பெற்றிருக்கின்றோம் அதனால் இப்படித்தான் செய்ய வேண்டும் அப்பொழுதுதான் நல்லது என்று சொல்லிக் கொண்டிருந்தால் “நம்முடைய காரியங்கள் அத்தனைக்குமே தடங்கல்கள் வரும்….”

அடுத்து நீங்கள் நல்லதை யாருக்கும் சொல்ல முடியாது… அதை வளர்க்கவும் முடியாது நாம் எந்த வழக்கத்தில் இருக்கின்றோமோ அந்தப் பழக்க உணர்வு தான் ஒவ்வொருவருக்குமே வரும்.

அவர்களைத் தெரிய வைக்க வேண்டியது நம்முடைய கடமைகளாக இருக்க வேண்டும்.
1.நம்முடைய பாதை தான் உயர்ந்தது என்று நாம் சொன்னால்
2.அவர்கள் அவருடைய பாதை தான் உயர்ந்தது என்று சொல்ல முற்படுவார்கள்.

ஆகவே தியானத்தைக் கடைபிடிப்பவர்கள் நம்மிடம் இந்தப் பிடிவாதம் இருக்கக் கூடாது.

நம்முடைய தத்துவங்களை அவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவத்தை ஏற்படுத்தி அதை உருவாக்க வேண்டுமே தவிர “நாம் பிடிவாதமாக இருந்து… வெறுக்கும் தன்மைக்குக் கொண்டு வந்து விடக் கூடாது…”

என்ன… எப்போது பார்த்தாலும் சாமியாம்… தியானமாம்…! என்று அவர்கள் எண்ணுவதற்கு விடாதபடி நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதே மாதிரிச் சில சடங்குகள் செய்யும் பொழுதும் உடலை விட்டு வீட்டில் யாராவது பிரிந்து சென்றாலும் “காக்கைக்கு சோறு வைக்கின்றோம்…” என்று சொன்னாலும் அவர் இஷ்டத்திற்கு நாம் விட்டுவிட வேண்டும்.

ஆனால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மாவைக் கூட்டு தியானமிருந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் இணைய வேண்டும்… பிறவி இல்லா நிலை அடைய வேண்டுமென்று நாம் இதைச் செயல்படுத்த வேண்டும்.

அவர்களிடம் “இந்த ஆன்மா எப்படி விண்ணுக்குச் செல்கிறது என்று பாருங்கள்…!” என்று நாம் தூண்டிவிட்டு அந்த முறைப்படி செய்தோம் என்றால் அவர்கள் ஆர்வத்துடன் கேட்பார்கள்.

1.ஒரு பழக்கத்தில் இருக்கிறோம் என்றால் அதை மாற்றிப் புதுப்பித்துக் கொண்டு வர வேண்டுமென்றால்
2.”எவ்வளவு நல்லதாக இருந்தாலும்” அதை உடனடியாகக் கொண்டு வர முடியாது.

கேரளாவிலே மொக்கை அரிசி தான் சாப்பிடுகிறார்கள். அதை நம்மைச் சாப்பிடச் சொன்னால் “யாருடா இந்த அரிசியைச் சாப்பிடுவது…?” என்று நாம் நினைக்கின்றோம்.

ஆனால் நாம் இங்கே பொடியாக இருக்கும் பொன்னி அரிசியைச் சாப்பிடுகின்றோம். ஆனால் இந்த அரிசியை யார் சாப்பிடுவார்கள்…? என்று அங்கே கேரளாவில் உள்ளவர்கள் சொல்கின்றார்கள்.

காரணம்… அவரவர்கள் ருசி தான் எல்லோருக்கும் முக்கியம்…!

ஆகவே நாம் மற்றவர்களை மதித்துப் பழக வேண்டும். நமது குருநாதர் காட்டிய வழியில் மற்றவர்களை உயர்த்தினால் தான் நம்முடைய சொல்கள் அங்கே ஏற்கும் பருவம் கிடைக்கும்.

இல்லை… என்னுடையது தான் உயர்ந்தது என்று சொன்னால் நம்முடைய உணர்வை அவர்கள் தாழ்த்தித் தான் பார்ப்பார்கள்.

ஆகவே
1.நாம் நம்முடைய தத்துவங்களை அவர்களை அணுகிப் போய்த் தான் சொல்ல முடியுமே தவிர
2.கட்டாயப்படுத்தி யாருக்குமே திணிக்க முடியாது.

கட்டாயப்படுத்திச் சொல்வதோ நம்முடையது தான் நல்லது என்று வலியுறுத்தினால் நம் மீது அவர்களுக்கு வெறுப்பு தான் வரும்.

அந்த வெறுப்பு ஏற்படாதபடி பக்குவப்படுத்தி… நம்முடைய நிலைகளைப் படிப்படியாகச் சொல்லி… அவர்களை உணரும்படி செய்வது நம்முடைய கடமையாக இருத்தல் வேண்டும்.

ஏனென்றால் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்…! அதாவது அந்த எதிர்மறையான உணர்வின் அழுத்தங்கள்… எவ்வளவு தான் உண்மைகளைச் சொன்னாலும் வெறுக்கும் நிலை தான் வரும்.

இதையெல்லாம் மாற்றி
1.நமது வழிகளை உலக மக்கள் ஏற்றுக் கொள்ளும் பருவ நிலைக்கு…
2.அந்தப் பக்குவ நிலைக்கு நாம் எல்லோரும் வளர்தல் வேண்டும்.