ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 16, 2023

எல்லோரும் ஒன்றாகச் சேர்த்து ஒளியின் உணர்வாக நாம் மாற வேண்டும்

உயிரைக் கடவுளாக வணங்கி உடலை ஆலயமாக நாம் மதித்துப் பழக வேண்டும். மனிதனை உருவாக்கிய நல்ல குணங்களைத் தெய்வமாக மதிக்க வேண்டும்.

பல கோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக இந்த மனித உடலைப் பெற்றிருக்கின்றோம்… உடல் சிவமாக இருக்கின்றது நம் கண்கள் கண்ணனாக இருக்கின்றது.

இருந்தாலும் சந்தர்ப்பவசத்தால் வேதனை கோபம் போன்ற குணங்கள் அதிகமானால் இரத்தக் கொதிப்பாகிவிடுகிறது.

அந்தக் கோபத்துடன் ஒரு கணக்கைப் பார்த்தால் அது சரியாக வராது. சரியாக வரவில்லை என்றால் “எவன் எழுதி வைத்தானோ…?” என்று அடுத்தவன் மேல் தான் இந்தக் கோபம் செல்லும்.

நாளாக நாளாக இந்தக் கோபம் பெருகி….
1.சிறு மூளையில் இருக்கும் ட்ரான்சாக்சன் செய்யக்கூடிய அந்த நரம்புகள் வெடித்தால் மூக்கு வாய் வழியாக இரத்தம் வரும்.
2.அதே சமயத்தில் இருதயத்தை இயக்கக்கூடிய நுண்ணிய நரம்புகள் செயலிழந்து இருதய அடைப்பு (ஹார்ட் அட்டாக்) வரும்.

வேதனை வேதனை என்று எண்ணினால் கண்ணுக்குள் விஷத்தன்மை பாய்ந்து அது ஈர்க்கும் தன்மை இழந்து இருள் சூழும். கருவிழி நன்றாக இருந்தாலும் பார்வை மங்கிவிடும் மருத்துவரிடம் சென்றாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பார்கள்.

1.அப்படிப் பண்ணிவிட்டான்… இப்படிப் பண்ணி விட்டான் என்று அடிக்கடி வேதனைப்படும் பொழுதெல்லாம்
2.அந்த (வேதனை) நஞ்சு கண்ணிலே படர்ந்து ஆதை இருளாக்கிவிடுகிறது
3.இப்படி எல்லாம் கண்ணுக்கும் நாம் கெடுதல் செய்கின்றோம்.

ஆரம்பத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் புழு உடலாக இருக்கும் போதே துன்பங்களில் இருந்து விடுபடுவதற்காக… “பார்க்க வேண்டும் பார்க்க வேண்டும்…” என்று எடுத்துக் கொண்ட உணர்வு தான் வளர்ச்சியாகிக் கண்களாக உருப்பெற்றது.

கண்கள் உருப்பெற்ற பின் பார்த்து
1.தீமை என்ற உணர்வை எடுத்து… உணர்ச்சியைக் கூட்டி எண்ணங்கள் வருகிறது
2.அந்த எண்ணத்தின் உணர்ச்சி கொண்டு “தன்னைக் காக்கும் நிலை…” வருகிறது.
3.இது எல்லாம் நாம் நுகர்ந்த உணர்வு எண்ணங்களாக வந்து…
4.இந்த உணர்ச்சிகள் நம்மை இயக்கி அதன்வழி நம் உடலாகி…
5.அதன்வழி நம்மை (உரு)மாற்றிக் கொண்டே வருகின்றது.

ஆகவே நாம் ஒவ்வொருவரும் குரு காட்டிய அருள் வழியில் செயல்பட வேண்டும். காரணம் குறுகிய காலமே இந்த மனித உடலில் வாழ்கின்றோம்.

கோடிக் கோடி… கோடிக் கோடி சொத்துகளைச் சேர்த்து வைத்தாலும் அதைப் பார்த்த பின் மற்றவர்களுக்குப் பொறாமை ஏற்பட்டு விடுகிறது. பொறாமைகள் வந்த பின் என்ன நினிக்கின்றோம்…?
1.இவன் எனக்குத் தொல்லை கொடுக்கின்றான்… திரும்பத் திரும்ப இடைஞ்சல் செய்கின்றான்
2.என் வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமையால் இப்படிச் செய்கின்றான் என்று
3.செல்வம் குவிந்திருந்தாலும் அதன் வழி விரோதிகளைத் தான் வளர்க்க முடிகிறது… பகைமைகளைத் தான் உருவாக்குகின்றோம்.
4.பகைமைகளை உடலில் சேர்த்து அந்த உணர்ச்சியோடு தான் ஒவ்வொரு நாளும் வேதனைப்பட்டு ஆத்திரப்பட்டு வாழுகிறோம்
5.அதனால் உடலில் பல தொல்லைகள் தான் வளர்கின்றது

இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபடுவதற்கு நீங்கள் முயற்சி எடுங்கள்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் யாம் கொடுத்த அருள் ஞானச் சக்கரத்திற்கு முன் அமர்ந்து… துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துப் பழகுங்கள். “எங்கே வெளியே சென்றாலும் அதை உற்று நோக்கிப் பார்த்து ஆத்ம சுத்தி செய்துவிட்டுச் செல்லுங்கள்…”

பிறரின் துன்பங்களைக் கேட்டறிய நேர்ந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று இதன் வழி அதை அடக்கி… அறியாது வந்த தீமைகளிலிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்; பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்; நோயிலிருந்து விடுபட வேண்டும் என்று துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து எடுத்து மாற்றிக் கொண்டே வேண்டும்

அது தான் தனுசுகோடி…! கோடிக்கரை என்ற மனித உடலில் இருக்கின்றோம்…. உடலை விட்டுச் சென்றால் உயிருடன் ஒன்றி ஒளியாக மாறி நாம் விண் செல்கின்றோம்… கல்கி.
1.இந்த உடலைக் கழட்டிவிட்டு
2.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாறுகின்றோம்

ஏனென்றால் விஞ்ஞான உலகில் எத்தனையோ விஷ அணுக்களாகக் பரவி “வைரஸ் என்ற கிருமிகள்” பல விதமான காய்ச்சல்களாகப் பரவிக் கொண்டிருக்கிறது சில உடலில் சில குடும்பங்களில் சில நாடுகளில் இது அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றது.

ஒருவருக்கொருவர் சண்டையிடுதலும் வேதனைப்படுதலும் மந்திர ஜாலங்கள் செய்வதும் போன்ற செயல்கள் நடந்து கொண்டுள்ளது. மாயாஜாலங்களைச் செய்து அது நடக்கவில்லை… ஒன்றும் முடியவில்லை என்றால் சாப அலைகளை விட்டு உடலை விட்டுப் பிரிந்துவிடுகிறது.

இப்படி வெளிச் செல்லும் ஆன்மாக்கள் குடும்பத்தில் தெருக்களில் ஊர்களில் பல தொல்லைகள் கொடுக்கக்கூடியதாக மக்களுக்குத் துன்பம் விளைவிப்பதாக வந்து கொண்டிருக்கிறது.
1.அதிலிருந்து மீண்டிட நம் வீட்டிலும் சரி தெருவிலும் சரி ஊரிலும் சரி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை “அடர்த்தியாகப் பரவச் செய்ய வேண்டும்…”
3.மக்களை மீட்கக் கூடிய சக்தியாக வளர வேண்டும்
4.ஒவ்வொரு உயிரும் கடவுள் என்றும் ஆண்டவன் என்றும் ஈசன் என்றும் நம் குருநாதர் உணர்த்திய வழியில் செயல்படுத்த வேண்டும்

இவ்வாறு செய்தால் உயிர் வீற்றிருக்கும் ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் நிலையாக வருகிறது. மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களுக்கு நல்ல அமுதாகக் கிடைக்கிறது.

எல்லா உயிரையும் கடவுளாக மதிக்கும் பொழுது… ஈசனாக மதிக்கும் பொழுது… அவர்கள் குறைகள் நீங்க வேண்டும் என்று எண்ணும் பொழுது நமக்குள்ளும் அது பெருகுகிறது. இந்த வழியில் வளர்த்து நாம் ஆனந்தப்பட வேண்டும்.

கோடிக்கரையிலிருக்கும் நாம் தனுசுகோடியாக ஒளியாக…
1.எல்லோரும் ஒன்றாகச் சேர்த்து ஒளியின் உணர்வாக நாம் மாற வேண்டும்.
2.எதிலுமே இருள் என்ற நிலை வராதபடி பேரருள் பேரொளியாகப் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.