ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 14, 2023

துருவ நட்சத்திரமாக நாம் ஆவோம்

மனித வாழ்க்கையில் பிறர் செய்யும் தீமைகளை நாம் பார்க்க நேர்கிறது. அவருடைய குறைகளை நினைக்கும் போதெல்லாம் அந்தக் குறை தான் நம்மை இயக்குகின்றது.
1.பிறருடைய தவறு தான் நம்மை இயக்குகின்றது என்பதும் அப்போது நமக்குத் தெரிகின்றது
2.அதாவது அவர் மீது நாம் கொள்ளும் கோபமோ ஆத்திரமோ அது வெளியில் இருந்து வந்து தான் நம்மை இயக்குகிறது.

அத்தகைய நேரத்தில் எல்லாம் ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி அதைத் தடுக்க வேண்டும்.

பின் அந்தக் குறை எங்கிருந்து யாரால் வந்ததோ அவர்களை எண்ணி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்கள் பெற வேண்டும்; அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்; சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும்; பிறருக்கு நன்மை செய்யும் பக்குவமும் அந்த நல்ல உணர்வுகளும் வளர வேண்டும்; நல்லது செய்யும் அந்த உணர்வுகள் வளர வேண்டும் என்று நாம் எண்ணி எடுத்து “நமக்குள் அதை விளைய வைக்க வேண்டும்…”

இத்தகைய உணர்வுகளுடன் கலந்து நம் சொல் மூச்சுஅலைகள் வெளிப்படும் போது அவரையும் அது மாற்றுகிறது. இப்படி ஒவ்வொருவரும் பழகிக் கொண்டால்
1.பிறருடைய தீமைகள் நம் வீட்டுக்குள் வருவதில்லை
2.நம் தெருவிற்குள் தீமை செய்யும் உணர்வலைகள் படர்வதில்லை
3.பகைமைகளை மாற்றி நல்ல உணர்வாக இங்கே படரச் செய்கின்றது… ஊருக்குள் ஒன்றுபட்டு வாழும் நிலை வருகின்றது.

ஆகவே நாம் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் கிளைகளாக வளர்வோம். அனைவரையும் பொருளறியச் செய்வோம். இருளைப் போக்கும் அருள் சக்தியைப் பெறுவோம்.

கணவன் மனைவி குழந்தைகள் குடும்பம் என்று… அருள் வழியில் ஒன்றுபட்டு வாழ்ந்து மக்களுக்கு எடுத்துக்காட்டாக நாம் வளருவோம் குறைகளை எண்ணாதபடி குடும்பத்தை உயர்த்திடும் நிலையாக நாம் செயல்படுவோம்.

யாம் உங்களுக்குக் கொடுத்த அருள் ஞானச் சக்கரத்திற்கு முன்னாடி நின்று… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரும் பெற வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் இதை எடுத்து வளர்த்துக் கொண்டே வாருங்கள்.

அதற்குத்தான் அருள் ஞானச் சக்கரத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளோம்
1.அது உங்களைத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து கொண்டே வரும்
2.ஆறாவது அறிவை “ஏழாவது நிலை ஒளியாக…” உருவாக்கிக் கொண்டே வரும்.

அதை வெறும் சக்கரமாக எண்ண வேண்டாம். துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலுவாக எடுப்பதற்கு “உங்களுக்கு ஏதாவது வேண்டும்” என்பதற்குத் தான் அருள் உணர்வைப் பதிவு செய்து அதைக் கொடுத்தது.

அருள் செல்வம் உங்களுக்குள் வளரும்… அருள் ஞானம் பெருகும்; இருளை அகற்றும்; மெய்ப்பொருளை காணச் செய்யும். அனைவருக்கும் மகிழ்ச்சி ஊட்டும் உணர்வாக அமையும்.
1.நாம் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரமாக மாற வேண்டும்
2.அந்த ஒளியின் உணர்வாக மாற வேண்டும்
3.நம் பார்வையால் பேச்சால் மூச்சால் பிறருடைய தீமைகள் அகல வேண்டும்.

நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்… எல்லாவற்றையும் உருவாக்கிய அவருடைய அருளால் இதை நான் (ஞானகுரு) அறிந்து கொண்டேன்.

குருதேவரை நினைத்து துருவ நட்சத்திரத்தை நினைத்து அந்த அடிப்படையில் இந்த வாழ்க்கையை நாம் கொண்டு சென்றால் என்றுமே அருள் உணர்வுடன் ஒன்றி வாழ்கின்றோம். இருளை அகற்றும் சக்தி பெறுகின்றோம்.

நாம் இருக்கும் இடங்களில் நல்ல மழை பெய்யச் செய்ய முடியும். விஷத்தன்மைகளால் உருவாகும் நோய்க் கிருமிகளால் புதிய நோய்கள் நம்மைத் தாக்காது காத்துக் கொள்ள முடியும்.

எல்லா உயிரும் கடவுள்;
எல்லா உடலும் கோவில்
எல்லா உடலும் சிவம்;
எல்லோருடைய கண்களும் கண்ணன்;
எண்ணும் எண்ணங்கள் இராமன்;
கல்யாணராமா - மகிழ்ச்சி என்ற உணர்வு நமக்குள் தோன்ற வேண்டும்.

எண்ணங்கள் எல்லாவற்றையும் தூய்மைப்படுத்தும் உணர்வுகளாக நமக்குள் வளர்ப்போம். இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைவோம் என்ற இந்த உறுதியை நாம் எடுத்துக் கொள்வோம்.

குரு காட்டிய வழியில் நாம் இதைச் செயல்படுத்தி
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் பெருக்கி
2.எல்லாமே ஒளி என்ற உணர்வுடன் ஒன்றி வாழ்வோம்… மற்றவர்களையும் அதிலே ஒன்றச் செய்வோம்.
3.துருவ நட்சத்திரமாக நாம் ஆவோம்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்கள் இணைந்து ஒன்றுடன் ஒன்று துணையாக வாழ்ந்து வளர்வது போன்று அந்த அருள் வழியை நாமும் பெற்று பேரானந்த நிலை பெறுவோம்.