ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 29, 2023

உயிரான்மா ஒளியாக மாறினால் “அகண்ட அண்டத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும்”

இன்று மனிதனாக இருக்கின்றோம்… இந்தச் சூரியக் குடும்பம் அழிந்துவிட்டால் அணுக்களாகத் தான் செல்வோம்… பிரபஞ்சத்தில் மிதப்போம். பின்
1.ஏதாவது ஒரு கோளுக்குள் இழுத்துக் கொண்டு போகும்
2.அங்கே அதற்குண்டான உணவு (சத்து) இருந்தால் புழுவாக பூச்சியாக அல்லது கிருமியாக வளர வேண்டி இருக்கும்
3.விஷத்தன்மையாகத்தான் மாற்றிக் கொண்டிருக்கும்.

தாவர இனங்கள் அழிந்து விட்டால் அதை விட்டு வெளியே சென்று விடும். மற்ற கோளுக்குள் செல்கின்றது. ஆனால் எந்த பிரபஞ்சத்திற்குள் செல்லும்…? என்று சொல்ல முடியாது.

எல்லாமே அகண்ட நிலையிலிருந்து வளர்ந்தது தான். ஆனால் சூரியன் செயலிழந்தால் பூமி நகர்ந்து ஓடிப் போய்விடும். இதிலிருந்து தப்புவதற்குத் தான் நம் குருநாதர் காட்டிய வழியில் இத்தனை வேலையும் செய்கின்றோம்.

காரணம் இன்று நம் பிரபஞ்சத்தைச் சேர்ந்த நட்சத்திரங்கள் தனக்கென்று தனித்துத் தனித்துச் சூரிய குடும்பங்களாக உருவாகிக் கொண்டிருக்கின்றது.

ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் வளர்ச்சி அடைந்தால் அவர்களுக்குத் திருமணம் ஆகி தனக்கென்று ஒரு குடும்பம் உருவாவது போல்
1.நட்சத்திரங்கள் தன் வளர்ச்சியில் சூரியனாகும் போது பிரிந்து சென்று விடும்.
2.பிரிந்து செல்லச் செல்ல நாளுக்கு நாள் நம் சூரியனும் செயல் இழக்கும்
3.சூரியனின் ஈர்ப்பில் உள்ள பூமி கரைந்து ஓடும்
4.இதில் உள்ள உயிரணுக்கள் மற்ற உயிரணுக்களுக்குக் குருவாக அமையும்.

பல கோடி ஆண்டுகளுக்கு முன் வியாழன் கோளில் இது போன்றுதான் பிரிக்கப்பட்டு நம் பிரபஞ்சத்திற்கு அது குருவாக வந்தது. அதிலே இன்னும் உயிரணுக்களின் தன்மைகள் நிறைய மாற்றங்கள் உண்டு. ஆனால் இப்போது உயிரினங்கள் அங்கே இல்லை.

அதிலிருந்து வரக்கூடிய உயிரணுக்கள் தான் சிறுகச் சிறுக பிரபஞ்சத்திற்குள் வந்து உயிரணுவாக மாறும் தகுதி கிடைக்கின்றது.
1.வியாழனில் கதிரியக்கப் பொறிகள் ஏற்படுவதால் தான் உயிரணுக்களே உண்டாகிறது.
2.அந்தக் கரு சேர்ந்த பிற்பாடு தான் உயிரணுக்களுக்கு மூலமாகிறது
3.இல்லை என்றால் உயிரணுக்கள் தோற்றமே இல்லை
(சில இதுகள் அதில் இருக்கின்றது… சுருக்கமாக உங்களுக்குச் சொல்லிப் பதிவு செய்கிறேன்).

ஆகவே… அண்டத்தில் இருக்கும் உணர்வுகள் அனைத்தும் நம் உடலான இந்தப் பிண்டத்திற்குள் இருக்கின்றது. மகரிஷிகளின் அருளாற்றலைப் பெற்று உயிருடன் ஒன்றி… நுகரும் உணர்வுகளை எல்லாம் ஒளியின் சுடராக நாம் மாற்றி விட்டால்
1.அகண்ட அண்டத்தில் எங்கு வேண்டுமென்றாலும் நாம் செல்ல முடியும்
2.”என்றும் பதினாறு” என்று இந்த வளர்ச்சி… வேகா நிலை அடைகின்றது... எதிலுமே நம் உயிரான்மா வேகாது.

நம் 2000 சூரியக் குடும்பத்தையும் முதலிலே வட்டமிடும். பின் இதைக் கடந்து மற்ற 1000, 2000, 3000 என்ற சூரியக் குடும்பங்களின் கூட்டமைப்பிற்குள் செல்லும்.

ஆரம்பத்தில் இருண்ட உலகமாக இருந்து அதிலிருந்து வளர்ச்சி பெற்று ஒளியின் சிகரமாக அண்டம் வளர்ந்தது,,, எத்தனையோ கோடி வருஷங்களாக வளர்ந்தது.

எல்லாமே ஒளியாக மாறி விட்டால் அதற்கப்புறம் “மனித இனங்களை ஒவ்வொன்றாகச் சீக்கிரமாக ஒளியாக மாற்றும் நிலை வரும்…” ஒளியின் சுடராக ஒளிக்குள் எல்லாமே இது மாறும். எப்படி எத்தனையோ ஆண்டுகள் வளர்ச்சியின் பாதையிலே வந்து கொண்டிருக்கிறது.

ஆதிமூலம் என்ற உயிர் “மனிதரான பின் முழு முதல் கடவுள்…!” இதை ஞானிகள் நமக்கு தெளிவாக்கி உள்ளனர். உலகில் உள்ள அனைத்துமே அடக்கி ஆளும் சக்தி பெற்றது
1.பிரபஞ்சத்தில் இருப்பதை அடக்கி ஆளும் தன்மையைப் பெற்று ஒளியின் சரீரமாக ஆகிவிட்டால் முழுமை பெறுகின்றது
2.மற்ற அகண்ட அண்டத்திலிருந்து வரும் எதையுமே தனக்குக் கீழ் கொண்டு வர முடியும்

அப்படி ஆனது தான் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும்.