ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 18, 2023

மகரிஷிகளை நாம் எண்ண வேண்டிய வரிசைக்கிரமம்

யாம் உபதேசிக்கும் உணர்வுகள் அனைத்தும் அகஸ்தியரும்… அவரைப் பின்பற்றிய நமது குருவும்… சப்தரிஷிகளின் அருளும் அதன் பின் 4000 ஆண்டுகளுக்குள் வியாசகர் பெற்ற நிலையும் தான்.

1.அகஸ்தியன் உணர்வைத் தனக்குள் எடுத்து உணர்வின் ஒளியாகப் பெற்றவர் வியாசகர்
2.அவரிடமிருந்து வெளிப்பட்டதை பிருகு அத்திரி இதைப் போன்ற மகரிஷிகள் அந்த உணர்வை தனக்குள் வளர்த்து
3.அதை எல்லோரும் பெற வேண்டும் என்ற உணர்வு கொண்டு எழுத்து வடிவில் பதிவு செய்தனர்
4.எழுத்து வடிவில் இல்லை என்றாலும் கூட சுருதி வடிவிலே தனக்குள் வளர்த்துக் கொண்டவர்கள்
5.அதன் வழியில் அவர்களுக்குள் விளைந்ததும் பின் அவர்கள் பிறர் பெற வேண்டும் என்று எண்ணியதும்
6.மற்றவர்கள் அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும் நன்மை பெற வேண்டும் என்று அவர்கள் செயல்படுத்தினார்கள்.

ஆனால் பின் வந்தோர் அதை மாற்றி விட்டார்கள் இது எல்லாமே உங்களுக்குத் தெரிய வரும். உபதேசத்தின் மூலக்கூறுகளை அந்தந்தக் காலகட்டத்தில் உங்களுக்குள் எல்லாவற்றையும் தெளிவாக்கிக் கொண்டு வரும்.

நீங்கள் வளர… பிறரைத் தெளிவாக்க தெளிந்த பூமியாக தெளியச் செய்யும் உணர்வாக நமக்குள் வளர்க்க… என்றும் பேரானந்தப் பெருநிலை என்று நிலை அடைய இது உதவும். நாம் எல்லோரும் அதைப் பெறுவோம்.

உதாரணமாக பலசரக்குக் கடையிலே பொருள்களை வாங்குகின்றார்கள். பொருள்களை எல்லாம் விற்றால் வியாபாரம் நன்றாக இருக்கும்… குடும்பம் நன்றாக இருக்கும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.

அதே மாதிரித் தான்
1.அந்த அருள் ஞானிகளின் சக்திகளை எல்லோருக்கும் கிடைக்கச் செய்தால்
2.அவர்கள் அதைப் பெறும்பொழுது மகிழ்ச்சி நிலைகள் உங்களுக்குள் வளரும்.

புறப்பொருளை விற்றுப் பணத்தை வாங்குகின்றீர்கள் ஆனால்
1.அருள் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் எடுத்து எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று செலுத்தும் போது
2.அதை அவர்கள் பெற்று மகிழ்ந்திடும் உணர்வுகள் வரும் போது பேரானந்தச் செல்வமாக நீங்கள் பெறுகின்றீர்கள்.

ஆகையினால் “எல்லோருக்கும் அந்த அருள் சக்திகளைக் கிடைக்கச் செய்யுங்கள். அந்த மகிழ்ச்சியான அரும்பெரும் செல்வத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள் ஏனென்றால் இது பேரானந்தப் பெரும் செல்வம்.

ஆகையினால் அதைப் பெறுவதற்கு முயற்சிப்போம் குரு அருளை நாம் என்றுமே பெறுவோம். அவருடைய அருளால் எல்லா நிலைகளையும் நாம் பெறுவோம் எல்லோரையும் நாம் மகிழ்வடையச் செய்ய முடியும்.

நம்மை மனிதனாக உருவாக்கிய நம் அன்னை தந்தை உயிரைக் கடவுளாக மதித்து… நம்மைத் தெய்வமாகக் காத்தருளிய நிலையும் மனிதன் நல் ஒழுக்கத்தையும் நல் நிலைகள் பெறுவதற்குக் குருவாக வழிகாட்டிய முதல் குருவின் ஆசியை நாம் பெறுவோம். அவர்கள் துணை கொண்டு
1.மெய் உலகின் உணர்வின் தன்மையை வழிகாட்டும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவருடைய அருளும்
2.அவரின் அருள் துணை கொண்டு மெய் ஞானிகள் அருளும்
3.அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான உணர்வையும்
4.அதிலிருந்து வளர்ச்சி பெற்ற சப்தரிஷிகளின் அருள் உணர்வுகளையும் நாம் பெறுவோம்.

உலக இருளை மாய்ப்போம்… மெய்ப்பொருள் காணும் அந்தப் பாக்கியத்தைப் பெறுவோம்.