ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 12, 2023

உடலுக்குள் மாறிக் கொண்டே இருக்கும் செயல்கள் - இந்திரஜித்

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கித் தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வுகளைப் பெற்று வளர்ச்சியாகி வந்த நிலைகள் தான் மனிதனுக்குள் இருக்கும் நல்ல குணங்கள்… “தேவாதி தேவர்கள்…”

சித்திரபுத்திரன் கணக்குப் பிள்ளை (கணக்கு எழுதுகிறான்) என்று காட்டியுள்ளார்கள். நம் கண் கொண்டு எதை எல்லாம் உற்றுப் பார்க்கின்றோமோ அந்த உணர்வின் தன்மைகள் தனக்குள் (உடலுக்குள்) அமைக்கின்றது… அது தான் சித்திரபுத்திரன்.

அதாவது…
1.நாம் கண் கொண்டு பார்த்த உணர்வுகள் உயிரின் துணை கொண்டு புத்திரனாக (அணுக்களாக) விளைகின்றது
2.அதனின் (சித்திரபுத்திரன்) கணக்கின் பிரகாரம் நமக்குள் எண்ணங்கள் தோன்றுகின்றது.

உதாரணமாக சந்தர்ப்பத்தில் நாம் ஒரு கடும் விஷம் கொண்ட பாம்பைப் பார்த்து விடுகிறோம். பார்த்த பின் பாம்பின் நினைவு அதிகமாகிறது. காரணம் அதைக் கூர்மையாக உற்றுப் பார்க்கின்றோம்… பதிவாகி விடுகின்றது.

பாம்பின் நினைவு நமக்குள் ஆழமாகப் பதிவான பின்… அச்சத்தின் உணர்வுகள் அடிக்கடி வரப்படும் போது நஞ்சின் தன்மையாக உடலுக்குள் வளர்கின்றது.

இந்த நஞ்சின் தன்மை வளரப்படும்போது நமக்குள் இருக்கக்கூடிய தேவாதி தேவர்கள் அதாவது மனிதனை உருவாக்கிய நல்ல குணங்கள் அஞ்சுகின்றது… இனி என்ன நடக்குமோ…? என்று…!

1.பாம்பைப் பார்த்த நிலைகளில் நாம் எண்ணும் உணர்வுகள் இந்திரலோகமாக (இந்திரீகம்) மாறுகின்றது.
2.இந்திரீகம் என்றால் உணர்வின் கருக்களாகி அணுக்களாக உருவாவது
3.இந்திரலோகத்தில் இப்படி அணுவாகும் பொழுது இந்திரஜித்…!
4.அது எதுவாக உருவாக்குகின்றதோ அதன் செயலாக்கமாக அது உருவாக்கும்
5.இந்திரஜித் என்றால் மற்ற தீமைகளை விளைய வைக்கும் அதனின் செயலாக்கங்களாக “மாறிக் கொண்டே இருக்கும்…”

அது அதற்கு உண்டான… காரணப் பெயர்களை இப்படி வைத்து நம் உடலுக்குள் இயங்குவதைத் தெளிவாகக் காட்டுகின்றது நம் சாஸ்திரங்கள்.

நம் கண்களால் பார்த்தது சித்திரபுத்திரன் ஆகிறது. எந்த உருவை நாம் பார்க்கின்றோமோ அந்தச் சித்திரம் தனக்குள் அது இயக்கக்கூடிய “புத்திரனாக மாறியது” (இந்திரஜித்).
1.அந்தப் பாம்பை பார்த்த பின் அச்சத்தால் எவ்வளவு தீமைகளை நுகர்ந்தோமோ அந்த உணர்வின் தன்மை இங்கே விளையச் செய்கிறது.
2.அந்த விஷத்தின் தன்மை ஐயோ பாம்பு…! வீட்டிற்குள் வந்து விடுமே… கடித்துவிடுமே…! என்ற உணர்வு வருகிறது
3.இந்த எண்ணங்கள் வரப்படும் பொழுது இந்த எண்ணமே நமக்குள் எமனாகின்றது.
4.சித்திரபுத்திரனின் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் .

கண்ணிலே பார்த்த அந்தப் பாம்பின் உணர்வுகள் அச்சப்படும் நிலையில் எதை அதிகமாக வளர்க்கின்றோமோ அந்த உணர்வே நமக்குள் எமனாகின்றது.

சிந்தனையற்ற நிலையில் அவ்வாறு இயக்குவதை “எமன் எருமை மீது வாகனமாக வருவதாகக் காட்டுகின்றார்கள்…” சிந்தனை இல்லாதபடி
1.ஐயோ பாம்பு வருகிறது… என்ற உணர்வை… அந்த விஷத்தைத் தான்
2.வேதனையை எண்ணுகின்றோமே தவிர… “வேதனையை நீக்கும் வலுவை” நாம் எடுக்கவில்லை.

இதனையும் நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் காட்டுகிறது. சிவனைக் காட்டி “சிவனுக்கு முன் நந்தீஸ்வரனை…” வைத்துக் காட்டுகிறார்கள்.

நம் உயிர் ஈசன் ஆகின்றது… நான் எண்ணிய உணர்வுகள் உயிரால் உருவாக்கப்படும் பொழுது அதுவும் ஈசனாக இருந்து நம்மை இயக்குகின்றது. நந்தீஸ்வரா…! எனக்குள் சென்று அது எனக்குள்ளே உருவாக்கும் நிலைகள் பெறுகின்றது..

எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அது அணுக்களாக உருவாகப்படும் பொழுது அதுவே உடலாகின்றது… சிவம் ஆகின்றது. சிவனுக்கு நந்தீஸ்வரன் கணக்குப்பிள்ளை…!

சாஸ்திரங்கள் இதை எல்லாம் நமக்குத் தெளிவாக காட்டுகின்றது அதில் தவறு இல்லை. அதன் வழி வளர்ந்தவர்கள் நாம் இதை எல்லாம் புரிந்து கொண்டால் போதும்.

ஆலயத்தில் காட்டப்படுவது அனைத்தும் துவைதம்…!
1.கண்களால் அந்தத் தெய்வ உருவங்களைப் பார்த்து… நினைவுகள் அந்த ஞானிகளுடன் ஒன்றும்போது
2அவர்கள் காட்டிய நல் வழியினை நுகர்ந்து வாழ்க்கையில் வரும் தீமையை அகற்றிடும் சக்தியாக நமக்குள் விளையும்.

தீமை அகற்றிடும் சக்தி உங்களுக்குள் வளர வேண்டும் என்பதற்குத்தான் இந்த விளக்கங்களைக் கொடுக்கின்றோம்.

குருநாதர் எனக்குச் சக்தி கொடுத்தார்…! என்று நீங்கள் எண்ணலாம் ஆனால் இந்த அருள் வழியில் தான் அந்தச் சக்தியினைப் பெறக்கூடிய தகுதியை உங்களுக்கு ஏற்படுத்துகின்றோம்.