ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 1, 2023

உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய துன்பத்தை “எண்ணிய நேரத்திலே” மாற்ற முடியும்

மற்றவர்கள் சிரமப்படுவதைக் கண்டு அவர்கள் மீது இரக்கப்பட்டு நீங்கள் உதவி செய்கிறீர்கள். ஆனாலும் அவர்கள் பட்ட வேதனை உங்களை அறியாமல் உங்களுக்குள் புகுந்து வாட்டி வதைக்கின்றது.

அதை மாற்றி… உங்களைக் காத்துக் கொள்வதற்கு ஞானிகள் உணர்வினை இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் நிரப்புகின்றோம். அதை நீங்கள் பெருக்கிக் கொண்டு அந்த ஞானிகள் காட்டும் வழியில் செயல்பட்டீர்கள் என்றால் அந்த உணர்வு உங்களைக் காக்க உதவும்.

நான் (ஞானகுரு) ஒன்றும் உங்களைக் காப்பாற்ற முடியாது…!

1.குரு வழியில் நான் அதைப் பெற்றேன்…
2.எடுத்து எனக்குள் வளர்த்தேன்… என் துன்பத்தைப் போக்க முடிந்தது
3.மகரிஷிகளின் அருள் சக்திகளை என்னால் எளிதில் பெற முடிகின்றது
4.உங்களுக்குள் அதைப் பாய்ச்ச முடிகின்றது.

ஆகவே அந்த அருள் ஞானத்தைக் கொடுக்கின்றேன் நீங்கள் வளர்த்துக் கொண்டால் தான் அந்தப் பலனைப் பெற முடியும். ஞான வித்தை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்… அதற்குண்டான நீரை ஊற்றினால் தான் ஞானிகள் உணர்வு உங்களுக்குள் விளையத் தொடங்கும். மற்ற யாரும் செய்து தர முடியாது.

எந்த ஞானியாக இருந்தாலும் யோகியாக இருந்தாலும்
1.நம்முடன் கலந்து உறவாடி அந்த உணர்வின் தன்மை கொண்டு அந்த இணைப்பு இருந்தால்தான் சொல்லி…
2.உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை விண்ணுக்குச் செலுத்தவும் முடியும்… நாமும் அங்கு செல்ல முடியும்
4.அப்படி இணைப்பில்லாதவர்கள் ஒன்றும் செய்ய முடியாது.

நாம் எடுத்துக் கொண்ட உயர்ந்த உணர்வு மெய் ஒளியின் சுடரைக் கொண்டு “சிறு துளி பெரு வெள்ளம்…” என்று அந்த ஆற்றல்மிக்க சக்தியைக் கூட்டி அதை வளர்த்து அந்த எண்ணத்தின் தன்மை கொண்டு தான் நாம் எதனையும் செயல்படுத்த முடியும்.

நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்தவர்கள் “யாராக இருந்தாலும் சரி…” நம் குருநாதர் காட்டிய வழியிலே அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் அந்த ஆன்மாக்கள் இணைய வேண்டும் என்று அந்தந்த வீட்டாருடன் சேர்ந்து செயல்படுத்தினோம் என்றால் அவர்களை விண் செலுத்த முடியும்.

இன்னொரு உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரைத்து விட்டு ஞானிகளின் அருள் வித்தின் தன்மையை விளைய வைக்க முடியும்.

சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரக்கூடிய ஆற்றல் மிகுந்த சக்திகளை
1.நீங்கள் பெற வேண்டும் என்று யாம் எப்படிச் செய்தோமோ இந்த உணர்வின் தன்மை கொண்டு
2.உங்கள் எண்ணத்தை அங்கே மீண்டும் செலுத்தினால் தான் உங்கள் நினைவலைகள் அங்கே செல்லும்.

அது அல்லாதபடி… என் பிள்ளை “இப்படி இருக்கின்றானே… இப்படி இருக்கின்றானே…” என்று பிள்ளையைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தால் இங்கே நோயாகி இறந்த பின் அவன் உடலுக்குள் சென்று அவனை இன்னும் கொஞ்சம் நாசமாக்கத் தான் முடியும். நான் நாசமானேன்.. அவனும் நாசமானான்…! என்ற நிலை தான் வரும்.

வேதனையுடன் இறந்தால் இதே உணர்வின் தன்மை தான் அங்கேயும் தோன்றும்.

நான் ஒருவனுக்கு உதவி செய்தேன்…! ஆனால் பதிலுக்கு அவன் இடைஞ்சல் செய்தான் என்றால் “பாவிப் பயல்… நான் நல்லது செய்தேன் எனக்கு இப்படிச் செய்தானே… இப்படிச் செய்தானே…!” என்று எண்ணிக் கொண்டிருந்தால் போதும்.

கடைசியில் உடலை விட்டுச் செல்லும் பொழுது அவன் நினைப்பு தான் வரும். இதே உணர்வு கொண்டு அந்த உடலுக்குள் புகுந்து இந்த வேதனையை அங்கே விளைய வைத்து அவனையும் வாழ விடாது விஷத்தையே மீண்டும் எடுத்து வளர்த்துப் பல உடல்களுக்குள் சென்று தொல்லைகளைக் கொடுத்து விஷ ஜந்துக்களாகத்தான் பிறக்க முடியும்.

விஷ ஜெந்துக்களாகப் பிறந்தாலும் மனிதன் கையில் சிக்கி அடிபட்டு
1.அவனுடைய உணர்வைக் கவர்ந்தால் தான் மீண்டும் மனிதனாக வர முடியும்
2.அதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று சொல்ல முடியாது…!
3.அது வரையிலும் எடுத்த வேதனையை அனுபவித்துக் கொண்டு தான் இருக்க வேண்டும்

ஆகவே எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்த உடலை விட்டு நாம் சென்ற பின் மெய் வழியின் தன்மை கொண்டு மெய் ஒளியின் தன்மை பெற்று அங்கே சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்.

விஞ்ஞான உலகில் படர்ந்து கொண்டிருக்கும் நஞ்சின் தன்மையிலிருந்து உங்களை மீட்டிக் கொள்வதற்கு இது உதவும்.

உங்களுக்கு இதிலே கஷ்டம் ஒன்றுமில்லை… நஷ்டமும் இல்லை. பக்தியிலே எப்படி நல்லதை நினைக்கின்றீர்களோ அதைப் போல் “ஞானிகளின் அருள் சக்திகளை எண்ணி எடுத்து… எனக்குள் அதை வளர்ப்பேன்…” என்று செயல்படுத்துவதே தியானம்.

1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவேன்
2.என் சொல்லுக்குள் இனிமை பெறுவேன்
3.என் பேச்சு மூச்சும் நன்மை பெறும்
4.நான் பார்ப்பதெல்லாம் நல்லதாக இருக்கும்
5.நான் செய்வதெல்லாம் நல்லதாக இருக்கும் என்று
6.இதை எண்ணி வளர்த்துக் கொள்ளச் செய்யும் இந்தத் தியானம் உங்களுக்குக் கெட்டதா…?

ஆகவே ஞானிகள் காட்டிய அருள் வழியிலே நாம் சென்று பழகுதல் வேண்டும்.

குருநாதர் எனக்கு எப்படி வாழ்க்கையில் வந்த விஷத்தின் தன்மையை மாற்றுவதற்கு… ஞானிகள் உணர்வுகளை என் நல்ல உணர்வுடன் கூட்டச் செய்து அருள் உணர்வுகளைப் பெருக்கச் செய்தாரோ… எனக்குள் வரக்கூடிய துன்பத்தைத் துடைக்க எதைச் சொன்னாரோ… அவர் கற்றுக் கொடுத்ததைத் தான் உங்களுக்கும் உணர்த்துகின்றோம்.

அதன் வழி கடைப்பிடித்தால்…
1.உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய துன்பத்தை
2.“எண்ணிய நேரத்திலே” அதை மாற்ற முடியும்… தெளிவு பெறும் தன்மையும் வரும்.

அந்த விண்ணின் ஆற்றலைப் பெறக்கூடிய தகுதி நீங்கள் பெற வேண்டும் என்று ஆசையிலேயே சொல்கின்றேன்.
1.அதைப் பெற வேண்டும்… அந்த மெய் ஒளி பெற வேண்டும் என்ற
2.அதே ஆசையில் நீங்களும் இருந்தால் இது சீக்கிரம் உங்களுக்குக் கை கூடும்.

அவ்வாறு நீங்கள் அதைப் பெற வேண்டும் என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டிக் கொள்கின்றேன்.