ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 10, 2023

எண்ணத்தை மாற்றக்கூடிய சக்தி பெற வேண்டும்

சாதாரண நிலையில் இன்று உடலை விட்டுப் பிரிந்தவர்கள் அடுத்தவர்கள் உடலில் பேயாக ஆடுவதைப் பார்க்கலாம்… அருளாடுவதையும் பார்க்கலாம்… துன்பத்தை விளைவிப்பதையும் காணலாம்.

இந்த உடலில் எதை விளைய வைத்தோமோ இறந்தபின் இன்னொரு உடலுக்குள் சென்று அதைத் தான் அங்கே விளைவிக்கச் செய்ய முடியுமே தவிர குழந்தையாகப் பிறக்க முடியாது.
1.இன்றைய சூழ்நிலையில் இறந்தவர்கள் மீண்டும் மனிதனாகப் பிறப்பதற்குண்டான வழி இல்லை.
2.காரணம் காற்று மண்டலமே நஞ்சாக மாறி விட்டது.

மீண்டும் மனிதனாக வரவேண்டும் என்றால் ஆடாகவோ மாடாகவோ சென்று… இன்னொரு மனிதனின் உடலுக்குள் சென்று வந்தால் தான் முடியும்.

ஆடு மாடு நாய் என்று எத்தனையோ செல்லப் பிராணிகளை வளர்க்கின்றோம். “என் கண்ணுக்குட்டி” என்று அன்புடன் பழகுகின்றோம்.

ஆனால் அது திடீரென்று இறந்து விட்டால் “ஐய்யய்யோ… நான் ஆசையாக வளர்த்த கன்று இறந்துவிட்டதே…!” என்ற இந்த ஏக்கம் நமக்குள் வரும் பொழுது அதனுடைய உயிரான்மா நம் உடலுக்குள் வந்துவிடும். வந்த பின் நாம் உடலில் மனித உணர்வை ஈர்த்து வளர்த்து… கருவாகி குழந்தையாக உருவாகி அப்படித்தான் மீண்டும் மனிதனாக வர முடியும்.

நாயை அன்புடன் வளர்க்கின்றோம்... நான் சொன்னதை எல்லாம் கேட்கின்றது… செல்லமாக நான் வளர்க்கிறேன் என்று சொல்லலாம்.

ஆனால் இறந்தபின் செல்லமாக வளர்த்த நாய் இறந்து விட்டதே…! என்று ஏங்கினால் அந்த ஆன்மா நம் உடலின் ஈர்ப்புக்குள் வந்துவிடும். நாம் சோறு போட்டு வளர்த்த நாயெல்லாம் அதே ஏக்கமாக இருக்கும்.

யார் உணவை அன்புடன் கொடுத்தார்களோ அதே ஏக்கத்திலே தான் இருக்கும் போட்டவர்கள் இல்லை என்றால் அது இறந்துவிடும்.
1.வேறு எங்கேயாவது சென்று உடலை விட்டுப் பிரிந்தாலும்
2.யார் சோறு போட்டார்களோ அந்த உடலுக்குள் வந்து மீண்டும் மனிதனாகப் பிறக்கும்.

ஆனால் நாம் மனிதர்கள் என்ன் செய்கிறோம்…? எத்தனையோ சந்தர்ப்பங்கள் எத்தனையோ காலகட்டங்களில் நம்மை அறியாது உடலை விட்டு உயிர் பிரிகின்றது.

பிரிந்தாலும் பாசத்துடன் வாழ்ந்த நிலையில் நம்முடைய நினைவுகள் கடைசியில் எங்கே செல்கின்றது…?

எட்டுப் பிள்ளைகள் இருக்கின்றது… ஏழு பேர் அதிலே பிழைத்துக் கொள்வார்கள் ஒரு பையன் சிரமப்படுகின்றான்… கஷ்டப்படுகின்றான்… அவன் எதிர்காலம் என்ன ஆகுமோ…? என்று வேதனையை எடுத்து அந்தப் பையன் மீது நினைவு அதிகமாக இருந்தால் இறந்தபின் அவன் உடலுக்குள் தான் செல்லும்.

அங்கே சென்று இன்னும் கொஞ்சம் வேதனையை வளர்த்து அவனையும் மண்ணுடன் மண்ணாக்கி அவனை வீழ்த்தத்தான் இந்த ஆன்மா உதவும்.

இன்னும் கொஞ்சம் அதிகமான விஷத்தன்மையைத் தானும் பெற்று தன் குழந்தையும் பெறச் செய்ய முடியும்.
1.அங்கே சென்று வேதனையை விளைவிக்கத்தான் முடியும்…
2.அவனைக் காக்கவே முடியாது… மனித உடலுக்குள் விளைய வைத்த இந்த உணர்வுகள் இப்படித்தான் இயக்கும்.

இதை எல்லாம் நாம் வடிகட்ட வேண்டும்…!

ஒவ்வொரு குணத்திற்குள்ளும் வேதனையான உணர்வுகள் அடைபட்டுக் கிடைக்கின்றது. அந்த வேதனையை நீக்கும் உணர்வின் சக்தியாக ஞானிகளின் அருள் சக்திகள் உங்களுக்குள் இப்பொழுது நிரப்பப்பட்டுக் கொண்டுள்ளது.

நான் கொடுக்கக்கூடிய ஞான வித்தை வளர்க்கும் விதமாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் ஒரு பத்து நிமிடவாவது எடுத்துப் பழகுங்கள்.
1.எப்பொழுது சிரமங்கள் வருகின்றதா வேதனை வருகின்றதோ துன்பங்கள் வருகின்றதோ அந்த நேரத்தில் எல்லாம்
2.மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்த்துக் கொண்டே இருந்தால் வேதனைகளை ஒடுக்கக்கூடிய சக்தியாக “வாழ்க்கையே தியானமாகின்றது…”.

இப்படித்தான் சிறுகச் சிறுக வளர்த்துக் கொண்டு வர முடியும்…!

நீங்கள் நினைக்கும் போதெல்லாம் அந்த அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும்… மகிழ்ச்சி உங்களுக்குள் தோன்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த உபதேசமே அமைகின்றது.

ஆகவே நீங்கள் அதே பிரகாரம் எண்ணினால் உங்களுக்குள் இது ஓங்கி வளர்ந்து உங்கள் சொல்லுக்குள் இனிமையும் உங்கள் செயல் அனைத்தும் புனிதமும் பெறும் உங்கள் பார்வையும் நல்லதாகும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அடிக்கடி நீங்கள் எண்ணி எடுத்தாலே போதுமானது.
2.உங்களுக்குள் அது தெளிவை ஊட்டிக் கொண்டே இருக்கும்.

குருநாதர் எனக்குள் இன்னல்களை ஏற்படுத்தி அதிலிருந்து மீண்டிட ஆற்றல்களைக் கொடுத்தார். ஆக…
1.ஆற்றல் மிக்க சக்தியாக இருந்தாலும் அதை ஆக்க ரீதியிலே எப்படி நீ பயன்படுத்த வேண்டும்
2.ஆற்றல் மிக்க சக்தியை நீ பெற்றாலும் அந்தச் சக்தியின் வழித் துணை கொண்டு
3.தனக்குள் ஆற்றல்மிக்க எண்ணத்தின் ஒளி கொண்டு வரும் பொழுது
4.”எண்ணத்தை மாற்றக்கூடிய சக்தியாக நீ எப்படிச் செயல்பட வேண்டும்…? என்று
5.காட்டிற்குள் அழைத்துச் சென்று தான் எனக்குக் காட்டினார்.

அதைப் போன்று தான் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் எத்தனையோ துன்பங்கள் துயரங்கள் எல்லாமே துஷ்ட மிருகங்கள் போன்று தான் உடலுக்குள் இயங்கிக் கொண்டுள்ளது. “அதை எல்லாம் மாற்றுவதற்குண்டான சக்தியாகத்தான்” இப்பொழுது ஊட்டிக் கொண்டு வருகின்றோம்.

இந்த உடலை விட்டு நாம் சென்றால் நிலையான ஒளிச் சரீரமாக நாம் மாற வேண்டும்… அது தான் நிலையானது…!