ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 20, 2023

ஆத்ம சுத்தி செய்வதன் மூலக்கூறு

புலி தன் குட்டிகளுடன் இன்பத்தைக் காணுகின்றது அதே சமயத்தில் மற்ற உயிரினங்களைத் துன்புறுத்தி இம்சித்துத்தான் தன் உணவை உட்கொண்டு வாழுகின்றது.

தன் குட்டியைக் கண்டு மகிழ்ந்து வாழுகின்றது ஆனால் மற்றொன்றை இம்சிக்கும் பொழுது அது இரையாக்கி ரசித்து வாழ்கின்றது இருந்தாலும் தன் இரையை எடுத்து ரசித்து உட்கொள்ளும் பொழுது
1.தனது இனம் அருகே வந்தாலும் கூட வெறுக்கின்றது.
2.பசியின் உந்துதல் வேகம் அதிகமாகும் பொழுது குட்டியாக இருந்தாலும் கூட விரட்டுகின்றது..

இரை உட்கொள்ளும் போது பார்க்கலாம். அதனுடைய குட்டி இரையைத் தன் பக்கம் அதிகமாக இழுத்தால் போதும். குட்டிக்குப் பாலை அரவணைத்துக் கொடுக்கும். ஆனால் அதே சமயத்தில் இரையை இப்படி இழுக்கும்பொழுது உடனே விர்ர்ர்…” என்று ஒரு தட்டு தட்டும்.

ஏனென்றால் தன்னுடைய வாழ்க்கை என்று நிலை வரும் பொழுது தன் இனமாக இருந்தாலும் தனக்கு இரை கிடைப்பதைத் தடை செய்யப்படும் பொழுது இந்த நிலை ஆகிவிடுகிறது.

மனிதன் நாம் நம்முடைய குழந்தைகளை வளர்த்தாலும் கூட நாம் சொன்னபடி குழந்தை கேட்கவில்லை என்றால் என்ன வருகிறது…?
1.அவன் மீது வெறுப்பான உணர்வுகளைப் பதிவு செய்துவிட்டால்
2.”இவன் இப்படித்தான் இருப்பான்…” என்ற உணர்வை எடுத்துக் கொள்கின்றோம்

அது ஒரு தரம் பதிவாகிவிட்டால் பல காலம் அவன் மீது பேரன்பை வளர்த்து வைத்திருந்தாலும் ஒரு தரம் எடுத்துக் கொண்ட இந்த உணர்வு முன்னணியில் வந்து விடுகின்றது.

அப்பொழுது அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் வெறுப்பான எண்ணங்களே வருகின்றது… அது வளர்ச்சியாகும். ஆனால்
1.அவனை நல்லவனாக மாற்றும் நிலைகள் நமக்குள் மாறி விடுகின்றது.
2.நமக்குள் அவன் மீது இருக்கும் பற்றைத்தான் மாற்றும்.
3.ஆனால் அவன் மீது வைத்திருக்கும் பற்றில் தீமையிலிருந்து அவனை மாற்றி நல்வழிக்குக் கொண்டு வரும் எண்ணம் வராது.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா…!

இது எல்லாம் இந்த உணர்வின் இயக்கங்களில் “தீமையின் வேகங்கள் ஜாஸ்தி…” ஆக இது போன்ற நிலைகளை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என்றால் இரவிலே புலன் அடங்கி நாம் தூங்கும் நேரத்தில் ஆத்ம சுத்தி செய்து தூய்மைப்படுத்தி ஆக வேண்டும்.

தினசரி காலையிலிருந்து இரவு வரை நாம் எத்தனையோ தடவை ஆத்ம சுத்தி செய்தாலும் தூங்கப் போகும் நேரத்தில் குறைந்தபட்சம் ஐந்து நிமிடமாவது
1.நம் நினைவை துருவ மகரிஷிகளுடன் ஒன்றச் செய்து
2.துருவ நட்சத்திரத்துடன் இணையச் செய்து
3.சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்து
4.அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நமக்குள் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.
5.அதாவது தீமையான உணர்வுகளுக்கு ஆகாரம் கிடைக்காதபடி
6.அந்த மகரிஷிகள் உணர்வுகளை நாம் பற்றும்படி செய்தல் வேண்டும்

இதுதான் ஆத்ம சுத்தி செய்வதில் உள்ள “முக்கியமான மூலக்கூறு…”