ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 9, 2023

எத்தகைய துயரம் வந்தாலும் அதை மாற்றிக் கொள்ளத் தான் இந்தப் பயிற்சி

உங்கள் வாழ்க்கையின் சில சந்தர்ப்பங்களில் மிகுந்த சிக்கல்கள் ஆகிவிட்டால் என்ன செய்ய வேண்டும்…?

1.அகஸ்தியன் பெற்ற பச்சிலை மூலிகைகளின் மணங்கள் நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று
3.யாம் (ஞானகுரு) உங்களுக்குள் உபதேச வாயிலாகப் பதிவு செய்ததை நினைவுக்குக் கொண்டு வந்து
4.அதை உங்களுக்குள் சேர்த்து உமிழ் நீருடன் கலந்து ஆகாரத்துடன் கலந்து இரத்த நாளங்களிலே கலக்கச் செய்யுங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும். அகஸ்தியன் பெற்ற சர்வ தோஷங்களை நீக்கிடும்… சர்வ பிணிகளையும் நீக்கிடும்… அந்தப் பச்சிலை மூலிகைகளின் மணங்கள் பெற வேண்டும் என்று சிறிது நேரம் ஏங்கித் தியானியுங்கள்.

அவ்வாறு தியானிக்கும் போது உடலிலே நோய் உள்ளவர்களுக்கு
1.இது எதிர்நிலையான பின் உடலில் வலி கூட அதிகமாகும்.
2.ஏனென்றால் அந்த உயர்ந்த சக்திகளை எடுக்க விடாது அந்த அணுக்கள் தடுக்கும்.

ஆனாலும் மீண்டும் அதை எண்ணி ஏங்கி எங்கள் உடலில் அந்த அகஸ்தியன் பெற்ற நஞ்சை வெல்லக்கூடிய சக்தி படர வேண்டும் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் உடல் முழுவதும் படர வேண்டும் நல்ல அணுக்களாக மாற வேண்டும் எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

1.எம்மா… எப்பா…! என்று வேதனையாக எண்ணுவதற்கு மாறாக
2.அகஸ்தியன் பெற்ற பச்சிலை மணங்கள் பெற வேண்டும் என்று எண்ணினால் நல்ல அணுக்களாக மாறுகின்றது.

எப்படித் தான் வாழ்ந்தாலும் குறுகிய காலம் தான் நாம் வாழுகின்றோம். உடலில் சிறிது காலம் தான் நாம் இருக்க முடிகின்றது.

அதற்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியையும் அகஸ்தியன் பெற்ற தீமையை நீக்கிய உணர்வுகளையும் நமக்குள் சேர்த்துச் சேர்த்து… சேர்த்துச் சேர்த்து… இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைய வேண்டும். அதற்குத்தான் இந்த மார்க்கத்தைத் தெளிவாக்குவது.

நான் சம்பாரித்தேன் எல்லாம் செய்தேன் என் குடும்பத்தில் என் பையன் நாளை என்ன செய்வான்…?

அதே போன்று தொழில் செய்யும் இடத்தில் என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்… நாளை என்ன ஆகுமோ…? என்று அதை நமக்குள் சேர்த்து விட்டால் அவன் உடலில் விளைந்த ஏமாற்றும் உணர்வு நமக்குள் நோயாக மாறி
1.இறந்த பின் எவன் ஏமாற்றினானோ அவன் உடலுக்குள் தான் நாம் செல்ல முடியும்.
2.மீண்டும் உடலுக்குத் தான் நாம் வருகின்றோம்
3.விண் செல்லும் உணர்வுகளை இழந்து விடுகின்றோம்.

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் வாழ்க்கையில் எப்போது சிரமம் என்று வந்தாலும் கொடுத்த பயிற்சிப் பிரகாரம் அந்த அகஸ்தியன் பெற்ற சக்திகளைப் பெற்றுப் பாருங்கள். எத்தகைய துயரம் வந்தாலும் அதை மாற்றிக் கொள்ள முடியும்

1.எதனையும் பற்றி “இப்படி ஆகிவிட்டதே…!” என்ற சிந்தனை செய்ய வேண்டியது இல்லை.
2.அருளைப் பெறுவேன்… இருளை நீக்குவேன்… துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவேன்…!
3.என் இரத்த நாளங்களிலே அந்தப் பேரருள் பேரொளியைக் கலக்கச் செய்வேன்
4.என் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் அந்த அருள் சக்தியைப் பெறும்படி செய்வேன் என்று எண்ணுங்கள்.

அதே சமயத்தில் அகஸ்தியன் தன் வாழ் நாளில் பல விஷத் தன்மைகளை ஒடுக்கினான். அந்த உணர்வுகளைத் தனக்குள் வலிமை மிக்கதாக அவனுக்குள் உருவாக்கிக் கொண்டான்.

அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட அந்த உணர்வுகளும் இங்கே பரவி உள்ளது. உங்களுக்குள் பதிவு செய்ததை எண்ணத்தால் அதைக் கவர முடியும்.

அகஸ்தியன் பெற்ற நஞ்சை வென்றிட்ட அந்த அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று கண்களைத் திறந்து ஏங்குங்கள். உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்…!

இப்போது
1.உமிழ் நீர்கள் வாயிலே சுவை மிக்கதாக பச்சிலை மணம் கலந்ததாகச் சுரந்து உங்கள் உடலுக்குள் செல்லும்
2.உங்கள் ஆகாரத்துடன் கலந்து இரத்தத்துடன் கலந்து உடலுக்குள் விஷத்தன்மையை மாற்றும் சக்தியாக நீங்கள் பெறுகின்றீர்கள்.
3.காற்றிலே இது உண்டு… உங்களால் அதை எடுத்து வளர்த்துக் கொள்ள முடியும்.

அதற்குத் தான் இந்தப் பயிற்சிகள் எல்லாம்…!