ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 27, 2023

நல்லதைக் காக்கும் சக்தியைப் பெற விரும்புவோருக்கு…

யாம் (ஞானகுரு) சித்தாவதற்கு முன் என்னுடைய ஆரம்ப வாழ்க்கையிலும் நான் நல்லதைச் செய்யப்படும் போது அதிலே எத்தனையோ சிக்கல்கள் வந்தது. அதிலிருந்தெல்லாம் மீண்டு தான் வந்தது.

நல்லதைச் செயல்படுத்த வேண்டும் என்று விரும்பி இன்றும் எத்தனையோ பேர் சிக்கலில் சிக்கித் தவிக்கின்றார்கள். நல்ல உணர்வுடன் செய்யும் போது தீய உணர்வுகளில் சிக்கி அதிலிருந்து தப்ப முடியாதபடி இருக்கின்றார்கள்.

அதை எல்லாம் மாற்றிடும் சக்தி பெற வேண்டும்.

ஏனென்றால் வாழ்க்கையில் எதைப் பெற வேண்டும்…? எங்கே பெற வேண்டும்…? என்ற இந்த உணர்வு கொண்டுதான்
1.ஒவ்வொரு நிலையிலும் குருநாதர் காட்டிய நெறிகள் கொண்டு
2.அது எத்தனையோ சிரமங்கள் எல்லை கடந்து சந்தர்ப்பங்கள் செல்லும் பொழுது அதிலிருந்து மீள்வதற்கு
3.அந்தச் சந்தர்ப்பத்தில் என்ன செய்வது…? என்று அவர் கொடுத்த சக்திகளைத் தான்
4.உங்களுக்குள் சொல்லாக… வாக்காக… இப்பொழுது கொடுத்துக் கொண்டே வருகின்றேன்.

ஆனால் ஆரம்பத்தில் ஒரு எக்ஸ்பிரஸ் போல் வேகமாக உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தேன்… அர்த்தத்தைக் காண முடியாத அளவிற்கு…! ஏனென்றால் இங்கே அதைப் பதிவு செய்வதற்காக அவ்வாறு செய்தது.

முதலிலே இந்தச் சக்திகள் காற்றிலே இல்லை. ஆகவே அந்த அருள் ஞானிகள் உணர்வுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் இந்தக் காற்று மண்டலத்திலே பரப்பி வைப்பதற்காக வேகமாக உபதேசித்தேன்.

1.யாரெல்லாம் அதை ஏங்கிப் பெறுகின்றார்களோ… எண்ணும் போது அவர்களுக்குக் கிடைப்பதற்காகவும்
2.காற்றிலிருந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எளிதில் பெறச் செய்வதற்கும்
3.எண்ணியவுடன் அந்த உணர்வுகள் வேலை செய்ய வேண்டும் என்பதற்காகவும் தான் வேகமாக உபதேசித்து வந்தது.

ஆரம்ப நிலைகளில் சஷ்டிச் கவசத்தைக் கூட நான் பாடி இருக்கின்றேன். சில அன்பருடைய வீடுகளில் குருநாதர் எனக்குக் காட்டிய உண்மைகளை இரவு முழுவதும் விடிய விடியப் பேசியும் வெளிப்படுத்தியிருக்கின்றோம்.

உதாரணமாக மங்களூர் நாராயணசாமி வீட்டுக்குச் சென்றால் எல்லாக் கோவில்களுக்கும் மற்ற இடங்களுக்கும் சென்று வந்தது தான். கர்நாடகாவில் உள்ள பல இடங்களுக்கும் என்னை அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தார். மூகாம்பிகை கோவிலுக்கும் சென்று வந்தது தான்.

குருநாதர் காட்டிய வழியில் அனுபவங்கள் பெறுவதற்காக எல்லா இடங்களிலும் இவ்வாறு சுழன்று வந்தது. காரணம்…
1.எந்தப் புத்தகத்தையும் படித்து விட்டு நான் உங்களுக்கு உபதேசிக்கவில்லை.
2.குருநாதர் கொடுத்த சக்திகளை எல்லாம் எனக்குள் விளைய வைத்தேன்
3.அதிலே விளைந்த ஞான வித்தைத் தான் உங்களுக்குள் இப்பொழுது ஆழமாகப் பதிவு செய்கிறேன்.

ஆகவே இதை எல்லாம் பதிவு செய்யும் நீங்கள் ஒவ்வொருவரும்
1.உங்கள் குடும்பத்தில் வரக்கூடிய சிக்கலை நீக்குவதற்கு என்ன வழியோ
2.அந்த மகரிஷிகள் அருள் சக்திகளைப் பெற்று
3.அதை நீக்கக்கூடிய அளவிற்கு முதலில் “பயிற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்…”

கோபமோ வெறுப்போ வேதனையோ மற்ற இன்னல்கள் வரும் பொழுதெல்லாம் அருள் உணர்வுகளைச் சேர்க்கப் பழகிக் கொள்ளுங்கள்

உங்களுக்குள் தீமைகளை நீக்கிய பின் அது யாரால் எவரால் அந்தத் தீமைகள் வந்ததோ…
1.நம்மைப் பார்க்கும் பொழுது அவர்களுக்கும் அந்த உயர்ந்த உணர்வு கிடைக்கச் செய்யும் விதமாக
2.மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பாய்ச்சிப் பழக வேண்டும்.

யாரிடத்தில் நாம் பேசினாலும் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை இணைத்தே வெளிப்படுத்த வேண்டும். அப்போது நமக்குள்ளும் அந்த அருள் உணர்வுகள் பெருகிக் கொண்டே வரும்.