ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 23, 2023

ரோட்டில் செல்லும் போதெல்லாம் செய்ய வேண்டிய ஆத்ம சுத்தி

இந்த உபதேசத்தின் வாயிலாக அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம். நீங்கள் எண்ணும் போதெல்லாம் அதைப் பெறக்கூடிய தகுதியாக இது அமைகின்றது.

நீங்கள் எங்கே வெளியே சென்றாலும்
1.பஸ்ஸிலே சென்றாலும்… மற்ற வாகனத்தில் சென்றாலும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து கொண்டே செல்லுங்கள்
3.ஆத்ம சுத்தி செய்துவிட்டு நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும்…
4.வாகனத்தில் செல்வோர்கள் எல்லாம் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்லுங்கள்.

ஏனென்றால் ரோட்டிலே வாகனத்தில் செல்லும் நிலையில் எத்தனையோ விபத்துக்களும் சேதாரங்களும் ஆகிறது. அதையெல்லாம் மறந்துவிட்டு நாம் எந்த வாகனத்தில் சென்றாலும் ஆத்ம சுத்தி செய்து கொண்டே செல்ல வேண்டும்.

பஸ்ஸிலே பயணம் செய்வோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

நாம் வாகனத்தில் போகும் பொழுது…
1.ரோட்டிலே “பாதசாரிகள்” நடந்து செல்பவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர் வாழ்க்கையில் மகிழ்ந்திருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
3.உங்கள் எண்ணம் உங்களையும் காக்கின்றது… பஸ்ஸிலே பயணம் செல்வோரையும் காக்கின்றது… ரோட்டில் செல்வோரையும் காக்கின்றது.

அதே போன்று பத்திரிக்கையையோ டிவியையோ பார்த்தாலும் அடுத்த கணமே மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

அதற்குப் பின் மகரிஷிகளின் அருள் சக்தி உலக மக்களுக்குக் கிடைக்க வேண்டும். உலகில் அறியாது சேரும் இருள்கள் நீங்க வேண்டும். உலக மக்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்… மன பேதமின்றி வாழும் அந்த அருள் சக்தி பெற வேண்டும். மகரிஷியின் அருள் உணர்வுடன் ஒன்றி வாழ்ந்திடும் அந்த சக்தி உலக மக்கள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அப்பொழுது நீங்கள் அதுவாக ஆகின்றீர்கள்…!

இது போன்ற உணர்வுகளை நாம் பெருக்கப் பெருக்க உலகம் எங்கிலும் இந்த அருள் உணர்வுகள் பெருகும். காற்று மண்டலத்திலும் மகரிஷிகளின் அருள் சக்தி அதிகமாகப் பெருகும்.

1.நமது நினைவுகள் அனைத்தும் அந்த மகரிஷியின் அருள் வட்டத்தில் இணையும்.
2.அந்த உடலை விட்டு அகன்றால் வாழ்க்கையில் வரும் எந்தத் துயரங்களும் நம்மைப் பற்றி விடாது அந்த சப்தரிஷி மண்டலத்துடன் இணைகின்றோம்.
3.ஆகவே அந்த மகரிஷிகளுடனே ஒன்றி வாழுங்கள்.

ஆகவே நம் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அதிகமாகப் பெருக்கப் பெருக இந்தப் பூமியின் பிடிப்பு குறைந்து மிதப்பது போன்று அந்த உணர்வு கிடைத்திருக்கும்… பூமியின் ஈர்ப்பு குறைந்திருக்கும்.

உங்கள் நினைவு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் சென்றால் எப்பொழுதுமே அதைப் பற்றுடன் பற்றுகின்றீர்கள். யாருடைய உணர்வும் இழுத்து விடாதபடி தடுத்துக் கொள்ள முடியும்
1.இதை ஒரு பழக்கமாக நாம் வைத்துக் கொள்ள வேண்டும்…
2.“குரு அருள் உங்களுக்கு என்றுமே உறுதுணையாக இருக்கும்…”