ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 21, 2023

விநாயகர் தத்துவத்தில் காட்டப்பட்டுள்ள பேருண்மை

உயிர்:-
நாம் எண்ணியதை நமக்குள் பதிவு செய்வதும் மீண்டும் நினைவுபடுத்தும் போது அதை இயக்குவதும் உயிருடைய வேலை.

கண்;-
நாம் எண்ணியது எதுவோ நமது கண் இந்த உயிரின் இயக்கத்தின் ஓட்டத்தை அது வழிகாட்டுகின்றது நல்லவை கெட்டவை என்று கவர்ந்து உயிருடன் இணைத்து உடலாக மாற்றுகின்றது.

உடல்:-
எது இயக்கியதோ அதைத் தன்னுடன் வரவேற்று அணைத்துக் கொள்வதுதான் உடலின் வேலை. ஆகவே சிவன் அனைத்தையும் சிவமாக்கித் தனக்குள் சக்தியாக இயக்கச் செய்வது தான்.

எல்லாவற்றையும் இயக்குவதும் உருவாக்குவதும் தான் உயிரின் வேலை.
1.அதைத்தான் விஷ்ணு வரம் கொடுக்கின்றான் பிரம்மாவோ உருவாக்குகின்றான் என்று சொல்வது.
2.நாம் எண்ணியதை நமது உயிர் ஓ… என்று ஜீவ அணுவாக ஆக்கி
3.ஜீவ அணுவாக ஆனபின்… எந்த எண்ணமோ அதை மீண்டும் உருவாக்குவது தான் பிரம்மாவின் வேலை.

நாம் எண்ணியது அனைத்தையும் தனக்குள் ஜீவ அணுவாக மாற்றுவது தான் உயிரின் வேலை. நாம் எண்ணியதைத் தன்னுடன் அரவணைத்துக் கொள்வதுதான் உடலின் வேலை.

ஒருவர் நல்ல சொல்லைச் சொல்கின்றார். அதை நாம் கேட்கும் பொழுது உடனே உயிர் ஜீவ அணுவாக மாற்றி நம் உடலாக மாற்றி விடுகின்றது.

மீண்டும் அந்தச் சொன்னவரை நாம் நினைக்கின்றோம்
1.அவர் உடலில் இருந்து வெளிப்பட்ட அலைகள் இங்கே உண்டு
2.அதை மீண்டும் கவர்ந்து நாம் சுவாசித்து “உயிரின் வழி தான்” அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் (முடியும்).
3.உயிர் அதை இயக்கிக் காட்டி இந்த உணர்வினை உடலுக்குள் பரப்புகின்றது.
4.அவர் சொன்னது உடலில் ஜீவ அணுவாக இருக்கும் பொழுது அந்த நல்ல அணுக்களுக்கு இது உணவாகப் போய்ச் சேர்கின்றது
5.அந்த நல்ல அணுக்கள் விளையத் தொடங்குகிறது.

உயிரின் வேலையையும் அதனின் இயக்கத்தையும்… உடலின் வேலையையும் உடலாக ஆவதைப் பற்றியும்… அறிந்து கொள்வதற்கே இதை உணர்த்துகின்றோம்.

ஆதியிலே இதை எல்லாம் அறிந்தவன் அகஸ்தியன். அந்த அகஸ்தியன்… அவன் வாழ்க்கையில் தான் கண்டறிந்த தீமைகளை அகற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு இன்றும் விண்ணிலே மின்னிக் கொண்டிருக்கின்றான் துருவ நட்சத்திரமாக.

துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றிச் சென்ற அனைவருமே பிறவி இல்லா நிலை அடைந்து பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டே உள்ளார்கள். இந்தப் பேரண்டத்தில் மனிதனாகி ஒளியின் சரீரம் ஆகிவிட்டால் என்றுமே அதற்கு அழிவில்லை.

சூரியன் அழியும்… மற்ற பேரண்டங்கள் எவையாக இருப்பினும் அவைகளும் அழிந்து விடும். ஆனால்
1.உயிரணு தோன்றி பரிணாம வளர்ச்சியில் மனிதனாகி… ஒளியின் சரீரமாக மாறிவிட்டால் அதற்கப்புறம் பிறவி இல்லை… அழிவே இல்லை…!
2.அதிலிருந்து உருப்பெரும் உணர்வுகள் உயிரணுக்களுக்கு வழிகாட்டியாக அமைந்து
3.இருளை நீக்கிப் பொருள் காணும் நிலைகளில் ஒளியாக உருவாக்கிக் கொண்டே இருக்கும்

விநாயகர் தத்துவத்தில் இது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.