ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 22, 2023

தனித்து யாரும் விண் செல்ல முடியாது…!

இன்று தன் கணவன் என்று இருக்கும்… ஆனால் கணவனுக்கோ தொழில் நிமித்தம் வேலை பார்க்கும் இடங்களில் அவருக்குப் பல தொல்லைகளைக் கொடுத்திருப்பார்கள்.

1.“உன்னை விட்டேனா பார்…?” என்ற நிலைகளில் கோபமாகச் சண்டை இட்டிருந்தால்
2.கடைசியில் உடலை விட்டுச் சென்ற பின் அந்த உடலுக்குள் கணவனுடைய ஆன்மா சென்று விடும்…
3.அவருடைய எண்ணமே எமனாக மாறிவிடும்.

அந்த எண்ணத்தின் வழி மற்றவர் உடலுக்குள் கணவன் சென்று விட்டால் அடுத்து… “தன் கணவன்…” என்று சொல்வதற்கு என்ன இருக்கின்றது…?

அதே போன்று தொழிலில் நஷ்டம் என்று வரும் பொழுது ஒருவர் கணவனுக்கு உதவி செய்கின்றார். இருந்தாலும் வாழ்க்கையின் கடைசியில் உடல் பலவீனமாகும் பொழுது… நன்றிக்காக வேண்டித் தனக்கு உதவி செய்தவரின் எண்ணம் தான் வரும்.

அந்த எண்ணம் வந்து உடலை விட்டுச் சென்று விட்டால் அவர் உடலுக்குள் தான் கணவனின் ஆன்மா செல்லும்.
1.இங்கே இவருக்குக் கணவன்… பிள்ளைகளுக்கோ தந்தை…
2.உடலை விட்டுச் சென்று இன்னொரு உடலுக்குள் போனால் பேய்…!
3.அந்த உடலில் இருந்தும் வெளியே சென்ற பின் மாடோ ஆடோ தான்…!
4.ஆட்டிலோ மாட்டிலோ அங்கே உரு பெற்ற பின் அதன் இனமாக வளர்ந்தது இதற்குத் தாயாக மாறுகின்றது.

அப்போது இங்கே இந்த மனைவிக்குக் கணவன் எங்கே…? மற்றொன்றுக்குத் தான் கணவனாக மாறுகின்றது.

ஆகவே தான் “எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்…!” என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டது.

ஆனால்… சாங்கியப்படி என்ன செய்கிறோம்…? கணவன் இறந்து விட்டால் தாலியை நீக்கிவிடுகின்றோம். ஏனென்றால் கணவனை இழந்தவர் என்று மற்றவர்களுக்குத் தெரிவதற்காக அவ்வாறு செய்து வேதனையைத் தான் உருவாக்குகின்றோம்.

வேதனையை உருவாக்கினால்… கணவனை மனைவி எங்கே மீட்டுவது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

பல இலட்சம் ஆண்டுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனும் அவர் மனைவியும் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள். அவர்களைப் பின்பற்றிச் சென்றவர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

இன்று பெரும் பகுதியானோர்…
1.தனித்த ஆளாக நான் கடும் தவம் இருந்து விண்ணுலகம் சென்று விடுவேன்…
2.பிறவா நிலை அடைந்து விடுவேன்…! என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.
3.முடியாது…! முனி(வனாக)யாகத் தான் மாற முடிமே தவிர உணர்வின் தன்மை “ஒளியாக மாற்றும் திறன் இருக்காது…”

கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாகி “அந்த உணர்வுகள் உராய்ந்து குழந்தைகள் எப்படி ஜெனிக்கின்றதோ” அதே போன்று இந்த உடலை விட்டு அகன்ற பின் கணவன் மனைவி எவர் முன் பின் சென்றாலும் அங்கே இரு மனமும் ஒன்றாகி ஐக்கியமாகி… ஒரு உணர்வாகும்.
1.என்றுமே ஒளியின் கருவின் அணுவினை உருவாக்கிக் கொண்டே
2.வளர்ந்து கொண்டே செல்லும்…! (துருவ நட்சத்திரம் – சப்தரிஷி மண்டலம்)

தாவர இனங்களிலும் ஆண்பால் பெண்பால் உண்டு. ஆண்பால் வீசும் உணர்வினைப் பெண்பால் கொண்ட செடி கொடிகள் கலந்தால் தான் அதிலே மற்ற வித்துக்கள் உருவாகும். இல்லையென்றால் வித்துக்களைக் காண முடியாது.

அன்று வாழ்ந்த அகஸ்தியனும் திருமணம் செய்துதான் மனைவியை அரவணைத்துத் தன்னுடன் அழைத்துச் சென்றார். அகஸ்தியன் என்று (சொல்) தனித்துச் சொன்னாலும்
1.அவன் உருவாக்கிய உணர்வின் தன்மை கொண்டு தன் மனைவியைத் தன்னுடன் அழைத்தே சென்றான்.
2.அதைத்தான் கவர்ந்து கொண்ட உணர்வுகள் “வசிஷ்டரும் அருந்ததியும் போன்று…” என்று சொல்வது

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் இரு மனமும் ஒன்றாக இயக்கி… குறைகள் இருப்பினும் அதை நீக்கி… அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை இணைத்துக் குறைகளைக் களைந்து… அந்த ஞானிகள் உணர்வு கொண்டு இந்த வாழ்க்கையிலே ஒன்று சேர்த்து வாழ வேண்டும்

இதற்குப் பெயர் நளாயினி…!ஆகவே என்றுமே இணை பிரியாது ஒருவருக்கொருவர் மதித்து நடக்க வேண்டும் என்பது.

1.குடும்பத்திலே கணவன் மனைவிக்குள் குறைகள் வரும்
2.உடலில் அழகான துணிகளை நாம் அணிந்திருந்தாலும் அதிலே அழுக்குப் படியத்தான் செய்யும்
3.அதை மீண்டும் மீண்டும் நாம் தூய்மைப்படுத்திக் கொண்டுதான் இருக்க வேண்டும்.

இதைப் போன்று தான் வாழ்க்கையில் கணவனுக்கும் மனைவிக்கும் சில சந்தர்ப்பம் வெறுப்பின் நிலைகள் வரும். அதைக் களையும் தன்மையாக “மகரிஷியின் அருள் சக்தி கொண்டு இணைத்து” அதை மாற்றுதல் வேண்டும்.

கணவன் மனைவியின் உணர்வுகளை மதித்து… அதே போல் கணவன் சொல்வதை மனைவி மதித்து… இரு உணர்வு ஒன்றாகும் போது தான்
1.மகிழ்ச்சி என்ற உணர்வும்.. இருளைப் போக்கும் அருள் சக்தியும் கிடைக்கின்றது.
2.காவியத்திலே காட்டப்பட்ட இந்த உண்மைகளை நமக்கு யாரும் தெளிவாகச் சொல்லவே இல்லை.

“மனைவி மட்டும் தான்” என்று ஒருதலைப் பட்சமாக நளாயினி முடவனான கணவனைச் சுமந்து சென்றாள்…! என்று திரிபு செய்துவிட்டனர்.

கணவன் மனைவி இருவருக்குள்ளும் எந்தக் குறைகள் இருப்பினும் ஒருவரை ஒருவர் மதித்து அந்தக் குறைகளைக் களைந்து மகிழ்ச்சியை உருவாக்க வேண்டும்…!

அப்படி உருவாக்க வேண்டும் என்றால் கணவன் மனைவி இருவருமே சமப்படுத்தி இணைத்து… விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த சப்தரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும்.

இந்த வாழ்க்கையில் கணவன் மனைவி இருவரும் ஒன்று சேர்ந்து “வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்தவர் எவரோ… அவர்கள் தான் அங்கே இருக்கின்றார்கள்…”

அவர்களை எண்ணிக் குறைகளைக் களைய அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைத் தனக்குள் இணைத்து இணைத்து இருள்களை மாய்த்து “ஒன்று சேர்ந்து விண் செல்ல வேண்டும்…!” என்பதுதான் தத்துவம்.