ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 20, 2023

அருள் ஞான வளைய(ம்)ல்

குடும்பத்திலே தாய் கர்ப்பமாக இருக்கிறது என்று தெரிந்து விட்டால் தயவு செய்து வீட்டிலே யாரும் சண்டை போட்டுக் கொள்ளாதீர்கள்.

ஒருவருக்கொருவர் மாறுபட்ட எண்ணங்கள் உணர்வுகள் வரும் பொழுது ஆத்ம சுத்தி செய்துவிட்டு
1.எங்கள் குடும்பத்தில் ஒற்றுமை வர வேண்டும்… ஒழுக்க நிலைகள் பெற வேண்டும்
2.கருவில் வளரும் சிசு ஞானக் குழந்தையாக வளர வேண்டும் என்ற எண்ணத்தை நீங்கள் வளர்த்துக் கொண்டே வாருங்கள்.

அக்கம்பக்கத்தில் புறநிலைகளில் வரக்கூடிய குறைகளையும் துன்பங்களையும் உற்று நோக்கி அதை மனதில் எண்ணி வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

ஆகவே அது போன்ற சந்தர்ப்பங்கள் வந்தால் அந்தப் பத்து மாதங்களிலும் ஒரு கடுமையான விரதமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

எங்கள் குடும்பம் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் கருவில் வளரும் சிசு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணிப் பாருங்கள் கருவுற்றிருக்கும் அந்த தாய்க்கு அந்த உணர்வுகளை செலுத்துங்கள்.

இது தான் “வளைகாப்பு…” என்பது.

ஏழு எட்டு வகையான உணவு வகைகளைப் போட்டு… போட்ட பின் அதைச் சரியாகச் செய்யவில்லை. தங்கத்திலே வளையல் செய்து போட்டார்களா…? என்கிற வகையில்
1.கர்ப்பத்தில் இருக்கக்கூடிய தாய்க்கும் சரி… அந்தக் குடும்பத்தாருக்கும் சரி… வேதனையை உருவாக்கி
2.இது போன்ற சாங்கியத்தால் கருவில் வளரும் குழந்தை ஞானக் குழந்தையாக வளர்வதற்கு மாறாக நஞ்சை வளர்த்து விடுகின்றார்கள்.

இதையெல்லாம் நீங்கள் விடுபட்டு “உதறித் தள்ளுங்கள்...” நமக்கு வேண்டியது என்ன...?

தாய் கருவிலே வளரும் குழந்தை அருள் ஞானக் குழந்தையாக வளர வேண்டும் என்று இப்படி எல்லோரும் எண்ணினால்
1.அந்தக் குழந்தை நோயற்ற குழந்தையாக உருவாகும்… உலக ஞானம் பெறும்
2.பிறந்து வாழ்க்கையில் அது வளரும் பொழுதே அந்தக் குடும்பத்தார் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும்
3.மெய்ப்பொருளைக் காணக்கூடிய சக்தியும் பெறும்.

ஆகவே குழந்தைகளை அரும் பெரும் ஞானிகளாக ஆக்குங்கள். கருவிலே வளரும் குழந்தைகள் ஞானக் குழந்தைகளாக வளர வேண்டும் என்று கூட்டுத் தியானத்தில் எண்ணினால்
1.நீங்களும் ஞானியாகின்றீர்கள்
2.உங்கள் குழந்தைகளும் ஞானியாகின்றார்கள்.

பத்து மாதங்கள் இவ்வாறு எண்ணிக் கருவிலேயே குழந்தையை ஞானியாக உருவாக்கி விட்டால்
1.குடும்பத்தில் எத்தகைய சிக்கல்கள் இருந்தாலும் அது ஓடிப் போய்விடும்…
2.எந்தத் தொல்லையும் அங்கே நிற்காது.

ஆகவே வாழ்க்கையில் வரும் இருளைப் போக்க ஒவ்வொருவரும் வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை அன்றாவது ஒன்று சேர்ந்து கூட்டாகத் தியானம் செய்ய வேண்டும்.

டிவி பார்ப்பதற்கோ சினிமாவிற்குச் செல்வதற்கோ குடும்பத்தில் அனைவரும் ஒன்றாகச் சேர்கின்றோம். டிவியை எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் போது… வீட்டின் பின் கதவைத் திறந்து திருடன் பொருளை அபகரித்துச் சென்றாலும் உள்ளே இருப்பவருக்கு ஒன்றும் தெரிவதில்லை.

இப்படித்தான் நாம் இருக்கின்றோம்…!

டிவி பார்க்க வேண்டாம்… பார்க்கக் கூடாது…! என்று சொன்னாலும் நீங்கள் பார்க்காமல் இருக்கப் போவதில்லை. அப்படியே பார்த்தாலும் ஒரு பத்து நிமிடமாவது எல்லோரும் அமர்ந்து கூட்டுத் தியானமிருந்து
1.எங்கள் குடும்பம் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்
2.எங்கள் குழந்தைகளுக்கு அருள் ஞானம் கிடைக்க வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று உலக ஞானம் பெற வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்
4.அந்தக் குழந்தைகளுக்கு இதையே ஆசிர்வாதமாகக் கொடுத்துப் பாருங்கள்.

கர்ப்பமாக இருக்கும் தாய்க்கு “வளைகாப்பு” என்று பல வகை உணவுகளைப் போட்டு எல்லோரும் வளையலைப் போடுவது போல்
1.அருள் ஞான உணர்வுகளை காப்பாக வளையலாக இதைப் போட்டுக் கொள்ளுங்கள்
2.இது அருள் ஞான வளையல்…!

புறத்தில் வளையலைப் போடுவதைக் காட்டிலும்… அருள் ஞானக் காப்பாக “மகரிஷிகளின் அருள் சக்தியை வளையலாகக் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கும்… அந்தத் தாய்க்கும்… வீட்டில் உள்ள அனைவரும் போட்டுப் பாருங்கள்…”

பிறக்கக்கூடிய குழந்தை “ஞானக் குழந்தையாகப் பிறக்க வேண்டும்… ஞானக் குழந்தையாகப் பிறக்க வேண்டும்…!” என்று எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கள்.

உங்கள் அனைவருக்கும் எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது என்று நீங்கள் பார்க்க முடியும். பிறந்த பின் அந்தக் குழந்தை
1.ஞானத்தை எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்றும்
2.குடும்பத்தில் எவ்வளவு செழிப்பு வருகிறது என்றும்
3.அப்பொழுதாவது நீங்கள் தெரிந்து கொள்ளலாம்… இது உங்கள் அனுபவத்தில் காண முடியும்.

எங்கெங்கோ சென்று எது எதற்கோ நேரத்தைச் செலவிடுகிறோம். மணிக்கணக்காக டி.வி பார்க்கிறோம். ஒரு பத்து நிமிடமாவது இந்தத் தியானத்தை தினமும் எடுத்துப் பாருங்கள்..

1.தொடர்ந்து அதைச் செய்ய செய்ய டிவி பார்க்கும் அந்த மோகம் போய்விடும்
2.டிவியைப் பார்த்து நுகர்ந்த தீய அலைகளும் ஒடுங்கிவிடும்.
3.அந்த அருள் ஞானிகள் உணர்வுகளைச் சேர்க்கச் சேர்க்க டிவியில் பார்த்த (படமாக) மாதிரி
4.உலக ஞானத்தையும் உங்கள் மனக்கண்ணால் பார்க்க முடியும்.

தீமையிலிருந்து விடுபடும் உணர்வுகள் உங்களுக்குள் விளைவதையும் பார்க்கலாம். உங்கள் நினைவுகள் அனைத்தும் அந்தச் சப்தரிஷி மண்டலத்தின் இணைந்து… உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலையை அடையச் செய்யும்.