ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 7, 2021

சரீரம் என்ற பாத்திரத்தில் உயிருக்கு வேண்டிய ஆகாரத்தைச் சமைக்க வேண்டும் - ஈஸ்வரபட்டர்

 

மனிதச் சரீரம் சகலத்தையும் ஈர்த்துச் சமைக்கும் திறன் பெற்றது.

உயர் சக்தியின் ஆகாரமான “ஆதி நீர் சக்தி என்ற குளிர்விப்புச் சக்தியே…” தியான வழித் தொடரில் வெப்ப நீர் சக்தியாக மாற்றப்படும் பொழுது... எண்ணத்தின் வலுவிற்கு எது இலட்சியமோ அதுவே பெறப்படும் ஆகாரமாகின்றது.

அந்த ஆகாரத்தைப் பெறும் மூல சக்தியின் சமைப்பின் முன் போடப்படும் உணவுப் பொருள் என்ற அமில குணங்களும் இந்தச் சரீரமாகிய பாத்திரத்தில் நிறைந்துள்ள ஆதி சக்தியின் நீர் அமிலம்
1.தியானம் என்ற அக்கினியில் குளிர்விப்பு நீர் சக்தி வெப்பச் சக்தியாகச் செயல்படும் செயலுக்கு
2.இந்தச் சரீரப் பாத்திரம் தன்னுள் ஈர்த்துச் செயல் கொள்ள வேண்டியது
3.சகல மகரிஷிகளின் அருள் சக்தியே ஆகும்.

விறகிற்குள் மறைந்திருக்கும் நெருப்பின் உணர்வு கொண்டு நல்லாக்கச் செயலை (புறத்திலே சமைக்கும் சமையல் போல்) உண்டாக்குவது போல்
1.மகரிஷிகளின் அருள் என்ற ஜோதித் தத்துவத்தில் இருந்து
2.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு வளர்க்க வேண்டும்.

அதாவது
1.விறகினுள் உறைந்துள்ள நெருப்பைப் பாத்திரம் ஈர்ப்பது போல்
2.பாத்திரத்தில் உள்ள குளிர்வு நீர் சக்தி அந்த வெப்பத்தை ஈர்ப்பது போல்
3.அந்த நீர்ச் சக்தியிலிருந்து எண்ண குண ஆகாரச் சமைப்பு
4.அந்த அருள் சக்தியின் தொடரை ஈர்த்துக் கொள்கிறது.

ஈர்த்துக் கொண்டாலும்... ஆகாரப் பக்குவம் பெற்றுவிட்ட தன்மையை அறிந்துணர்ந்து தெளிவுபடும் செயலுக்கு
1.மாற்று குண எதிர் மோதல் தன்மைகளை விலக்கிடவும் வேண்டும்.
2.சஞ்சல உணர்வுகளை நமக்குள் மோதவிடலாகாது.

பிறவிக்குக் காரணம் ஆசை தான்…! என்ற தொடரை புத்தன் வெளிப்படுத்தினாலும் வெளிப்படுத்தாச் சூட்சமம் புத்தன் அறிந்த அனுபவ ஞான ஆத்ம இரகசியம் “பேரின்பப் பிரம்ம ஐக்கிய லயம்...!” என்பது.

தியான வழித் தொடரில் நிலை நின்று தன் உயிராத்ம சக்தியை வலுக் கொண்ட தொடருக்குச் சகலத்தையும் ஈர்த்திடும் சித்தத்துவ ஆனந்த ஈஸ்வர அனுபூதியைத்தான் புத்தர் பெற்றார்.

ஒவ்வொருவரும் அந்த ஈஸ்வர அனுபூதியைப் பெற வேண்டுகின்றேன்…!