ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 16, 2021

ஆரம்பத்தில் யாம் அதிவேகமாக உபதேசம் கொடுத்ததன் நோக்கம் என்ன...?

 

சாமி (ஞானகுரு) நன்றாகச் சொல்கிறார்...! என்ற இந்த எண்ணங்களில் தான் இருக்கின்றோமே தவிர “அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்...” என்று நாம் இன்னும் தயாராகவில்லை.

எத்தனையோ வருடங்களாக எண்ணிலடங்காத உபதேசங்களை யாம் கொடுத்திருக்கின்றோம். ஆனால் இதைக் கேட்டுவிட்டு
1.சாமி எப்படிப் பேசுகின்றார் தெரியுமா...? என்று
2.இந்தப் பேச்சைத் தான் அளக்கின்றோம்.

ஆனால் உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு இருக்கின்றது...? என்று அடிக்கடி யாம் சொல்லி இருக்கின்றோம். இப்பொழுது தற்சமயத்தில் கொடுக்கும் உபதேசங்கள் எல்லாம் தெளிவாகச் சொல்கின்றோம்.

முந்தி எல்லாம் உபதேசம் செய்யும் போது எக்ஸ்பிரஸ் போன்று அதுபாட்டுக்குக் காற்றிலே போவது போன்று திடு...திடு... என்று ஓடிக் கொண்டிருக்கும்.

அதைக் கேட்பவர்கள் நன்றாக இருக்கிறது என்று சொல்வார்கள். உபதேசம் கேட்டு முடிந்தவுடன் “அற்புதமாக இருக்கின்றது என்றெல்லாம் தலையை ஆட்டுவார்கள்.

கடைசியில்... சாமி சொன்னது உங்களுக்கு அர்த்தமானதா...? என்று ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

முதலில் அதிவேகமாகச் சொன்னேன். இப்பொழுது ஒரு உணர்வின் இயக்கம் எவ்வாறு இயக்குகிறது...? என்று நிறுத்தி விளக்கமாகச் சொல்கிறேன்.

காரணம்...
1.அன்று குருநாதர் (ஈஸ்வரபட்டர்) கொடுத்த சக்திகளை
2.அந்த உணர்வுகளை எடுத்து மீண்டும் எனக்குள் வளர்த்து
3.அந்த உணர்வலைகளை இங்கே பரப்பச் செய்தேன்.

நீங்கள் நோட்டுப் புத்தகங்களில் குறிப்புகளை எழுதிக் கொள்வது போன்று தான் அந்த உணர்வலைகளை வெளியில் பரப்பினேன். கேட்பவர்களுக்குள்ளும் பதிவானது.

உதாரணமாக ஒருவர் பேசுவதை டேப் ரெக்கார்டரில் பதிவு செய்தபின் அதைக் குறைவான வேகத்தில் மீண்டும் சுழல விட்டால் தொண்டை கனமாகப் பேசுவது போன்று இருக்கும். ஆனால் அதை வேகமாகச் சுழல விட்டால் கீச்சு...பூச்சு... கீச்சு... பூச்சு... என்று சப்தமிடும்.

அதைப் போன்றுதான் ஆரம்பத்தில் யாம் சொல்லும் பொழுது கீச்சு...பூச்சு... கீச்சு... பூச்சு... என்று தான் இருக்கும். அர்த்தம் புரியாது. ஆரம்பத்தில் எனக்குக் கிடைத்த சக்திகளை அப்படித்தான் பதிவு செய்தேன்.

ஒருத்தர் எம்மிடம் கேட்கிறார் என்றால் அவரைக் கேட்கச் சொல்லிவிட்டு உடனே எல்லாவற்றையும் பேசி அவர்களுக்குள் பதிவு செய்து அந்த அலைகளைப் வெளியிலே பரப்பச் செய்வேன்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு விதமாகக் கேட்பார்கள். அந்தந்தக் காலகட்டத்தில் உடனே குருநாதர் பதிவு செய்ததை நினைவுபடுத்தி மீண்டும் எடுத்து அந்த அலைகளை இங்கே பரப்பிக் கொண்டே இருப்பேன்.

1.அப்படிப் பரப்பி வைத்த அலைகளை எடுத்துத் தான்
2.அதிலே எதை எதையெல்லாம் உங்களுக்குத் திரும்பச் சொல்ல வேண்டுமோ
3.இப்பொழுது எடுத்துச் சொல்லிக் கொண்டே வருகின்றேன்.
4.முந்தி சொன்னதைத்தான் இப்பொழுது சொல்லிக் கொண்டு வருகிறேன்.
5.ஆனால் முந்தி அர்த்தமாகாது. இப்பொழுது அதைத் தெளிவாக எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

அதே சமயத்தில் உங்களுக்குள் பதிவு செய்தது முந்தி அர்த்தமாகவில்லை என்றாலும்... சில நேரங்களில் சில சந்தர்ப்பங்களில் அதை இப்பொழுது நீங்கள் எண்ணும் பொழுது உங்களுக்குள் ஓரளவுக்கு அர்த்தமாகும். அந்தச் சக்தியைப் பெறக்கூடிய தகுதிக்கு வருகிறீர்கள்.

அதே சமயத்தில் உங்களுக்குள் பதிவு செய்ததை உங்கள் நண்பர்கள் மத்தியில் நீங்கள் சொல்லப்படும் போது அவர்களிடமும் இது பதிவாகி விட்டால் நான் (ஞானகுரு) பேசிய மெய் ஞானிகளின் உணர்வலைகளை அவர்களும் நுகர்ந்து... அந்த சக்தியைப் பெறும் தகுதி அவர்களும் பெறுகின்றார்கள்.

ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டு விட்டான் என்றால் என்ன செய்கிறோம்...?

நல்ல மனிதன் என்று பாசத்தால் பழகிய பின் அடுத்தவனிடம் சொல்லப்படும் நோயினால் ரொம்ப அவஸ்தைப்படுகிறான் என்று தான் சொல்கிறோம்.

1.நோயாளியை உற்றுப் பார்த்து அவர் கஷ்டப்படுவதை நுகர்ந்து
2.அடுத்து அடுத்து நண்பர்களிடம் சொல்லப்படும்போது அவர்களும் இதைக் கேட்டு வருத்தப்படுவார்கள்.

அதைப் போன்று தான் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் வரும் சந்தர்ப்பத்தை எடுத்து உங்களுக்குள் ஞானத்தை உபதேசிக்கின்றேன். அதாவது
1.மறைந்த பொக்கிஷத்தை (அருள் ஞானம்) மீண்டும் நினைவுபடுத்தி அந்த அலைகளைப் பெருக்கி
2.அவ்வப்பொழுது அதற்குண்டான உணர்வைக் கூட்டி
3.உயர்ந்த ஞானத்தின் உணர்வுகளை வெளிப்பரப்பு...! என்று குருநாதர் சொன்னதால்
4.ஆரம்பத்தில் அதை நான் செய்தேன்.

அந்த அலைகள் இங்கே உங்களுக்கு முன்னாடி பரவி இருப்பதனால் உங்களுக்கு இப்பொழுது அர்த்தமாகும் அளவுக்குத் தெளிவாக விளக்கமாக வரும்.

அந்த விளக்கங்களை நீங்கள் மற்றவர்களுக்கும் “சாமி இப்படிச் சொன்னார்...” என்று சொன்னால் இலேசாகப் பதிவாகும். இதை அவர்களும் உணர்வார்கள்.

இப்படி இந்தக் காற்று மண்டலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக... மிக அடர்த்தியாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பரவும்.
1.எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் சந்தர்ப்பமாகவும் அது அமையும்.
2.எல்லோரும் ஞானத்தின் வழித் தொடரைப் பெறும் பாக்கியமாகவும் நிச்சயம் அமையும்.