ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 13, 2020

நம் காரியங்கள் சித்தியாக வேண்டும் என்றால் செய்ய வேண்டிய “முதல் பிரார்த்தனை”


மீண்டும் மீண்டும் யாம் (ஞானகுரு) ஞாபகப்படுத்துவது “ஓ..ம் ஈஸ்வரா… குருதேவா…! என்றால் நம் உயிர் உடலுக்குள் நின்று ஓ… என்று இயங்கிக் கொண்டே உள்ளது.

நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் அனைத்தையும்…
1.சுவாசிக்கும் அந்த உணர்வின் சத்தை
2.அந்த உணர்வின் அணுவாக
3.ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி ம்… என்று நம் உடலாக மாற்றி விடுகின்றது.

இது தான் ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!

காலையிலிருந்து இரவு வரைக்கும் நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் அனைத்தும்… நம் உடலுக்குள் நம் வாழ்க்கையில் இவ்வாறு சதாசிவமாக (உடலாக) ஆகிக் கொண்டே உள்ளது.

அதே சமயத்தில் நம் உடலான சிவனுக்குள் இருக்கும் அனைத்துக் குணங்களுக்கும் “நம் உயிரே குருவாக” இருக்கின்றது.

ஆகவே...
1.நாம் ஒவ்வொரு முறையிலும்
2.ஒவ்வொரு தியான நேரத்திலும்
3.எந்தக் காரியங்களுக்குச் செல்ல வேண்டும் என்று எண்ணினாலும்
4.அம்மா அப்பாவை எண்ணி அவர்கள் உயிரைக் கடவுளாக மதித்து
5.அவர்கள் நம்மைக் காத்தருளிய குணங்களைத் தெய்வமாக மதித்து
6.ஒவ்வொரு நொடியும் நமக்கு நல் உணர்வுகளை ஊட்டி நல் வழி காட்டிய அவர்களைக் குருவாக மதித்து
7.ஈஸ்வரா என்று அவரவர்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி
8.எங்கள் காரியங்கள் வெற்றி பெறவேண்டும்
9.என் செயல் அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும்
10.என் செயல் அனைத்தும் எல்லோருக்கும் நன்மை பயக்கும் செயலாக இருக்க வேண்டும்
11.என் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும் என்ற உணர்வினை முதலிலே செலுத்த வேண்டும்.

இந்த முறைப்படி நாம் எண்ணும் போது அத்தகைய குணங்களை உயிர் நமக்குள் ஓ… என்ற ஜீவ அணுவாக மாற்றிவிடுகின்றது.

அதன் பின் அந்த எண்ணங்களே... அந்தக் குணங்களே... “குருவாக நின்று” நாம் சொல்லால் சொல்லப்படும் பொழுது செயலுக்கும் அந்தக் குணங்களே குருவாக நின்று கேட்போர் உணர்வுகளிலும் நல்ல உணர்வுகளாகப் பாய்ந்துவிடும்.

அந்த நல் உணர்வுகள் பாய்ந்த பின்..
1.அவர்களும் நமக்கு நன்மை செய்யும் பயன்களை உருவாக்க இது உதவும்.
2.அதே போல் நம் சொல்லிலே இனிமையும்... நல் செயலை ஊட்டும் குணங்களாக நமக்கும் இது அமைகின்றது.

ஆகவே ஒவ்வொரு நிமிடத்திலும் எந்தக் காரியங்கள் செய்தாலும் அல்லது செய்ய எண்ணினாலும் நம் உயிரை ஈஸ்வரா.. என்று எண்ணிவிட்டு அடுத்த காரியங்கள் எது நன்மையோ அவைகளை மேலே சொன்ன முறைப்படி எண்ணுதல் வேண்டும்.

அப்பொழுது அத்தகைய நல்ல அணுக்களாக உடலுக்குள் உருவாகி அந்த உணர்வின் செயலாக
1.அந்தக் குணங்களே நமக்குக் குருவாக நின்று
2.நல்வழிப்படுத்தும் நற்செயலாக நம் வாழ்க்கையில் அமைவதும்
3.நாம் எண்ணிய நல்ல உணர்வுகள் நமக்குள் நல்ல அணுக்களை உருவாக்கி
4.நம் உடலைப் பாதுகாக்கும் நல்ல குருவாகவும் அது அமையும்.

நாம் ஒவ்வொருவரும் இரவிலே தூங்கச் செல்லும் போதும் சரி... காலையில் எழுந்தாலும் சரி... அவசியம் இதைப் போன்று நாம் எண்ணுதல் வேண்டும்.

அதே போல் நாம் வெளியிலே செல்லும் போதும் சரி இதைப் போன்ற நல்ல எண்ணங்களை நாம் எண்ணி
1.அந்தச் செயல்களை செவ்வனே செய்ய வேண்டும் என்று எண்ணினால்
2.செவ்வனே செய்யும் அணுக்களாக நமக்குள் உருவாகும்
3.உருவான அந்த அணுக்கள் தன் உணவுக்காக ஏங்கும் போது
4.மீண்டும் அதே உணர்வுகளைச் சுவாசிக்கும் போது அந்த உணர்ச்சிகள் நம்மை நல்வழியில் செயல்படுத்தும் நிலை உருவாகும்.

இதுவே நம் சொல்லைக் கேட்போர் உணர்வுகளிலும் நல்ல உணர்வாகப் பதிந்து நம்முடன் இணக்கமாகச் செயல்படும் அந்த உணர்ச்சிகளை ஊட்டும்...! பகைமையை அகற்றி மகிழ்ந்து வாழச் செய்யும்.