ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 8, 2020

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் “கோடி… கோடி… கோடி…” என்று அடிக்கடி சொல்வதன் உட்பொருள்


அதாவது இந்த விண்வெளியில் எத்தனையோ வகையான நட்சத்திரங்கள் இருக்கின்றது. அந்த நட்சத்திரத்திற்குள் இந்தத் தூசி (துகள்கள்) வருவதற்கு… ஒளிகள்… நிறங்கள் கவர்வதற்கு எத்தனை கோடி அண்டங்களிலிருந்து சக்தி கிடைக்கிறது தெரியுமா…? என்பார்.

ஒரு நட்சத்திரம் ஒளியைக் கொடுப்பதற்கு எத்தனையோ கோடி நட்சத்திரங்களின் அந்தச் சக்தி சேர்த்துத் தான் வருகின்றது.
1.இந்த நட்சத்திரம்… இது கோடி…!
2.அது கோடி… கோடி… கோடி...

அதிலிருந்து கோடியாக வரப்படப்போகும் போது இந்தத் தாவர இனங்களில் அது ஒவ்வொன்றும் காரமாக வருவதற்கு எத்தனை காரம்...? தெரியுமா..?

உடனே “மிளகாய் கோடி… கோடி… கோடி…” என்பார்.

இந்தக் காரம்… கோடிக்குள் கோடியாக எப்படி உண்டானது...? அந்தக் கோடியின் உணர்வுகள் காரத்தின் ருசியாக வருவது போல்..
1.நமக்குள் இதே மாதிரியான எண்ணங்கள் பல சேர்த்து
2.அது கோபத்தின் உணர்ச்சிகளாக உருவாகும்.

கோபத்தின் உணர்ச்சிகள் உடலுக்குள் வளரப்படும்போது இந்த உணர்வின் பொறிகள் எப்படி நோயாக மாறுகின்றது…? என்று இப்படிக் கேள்வி எழுப்புகின்றார் குருநாதர்.

இப்படிக் கோடி… கோடி… கோடி… என்று அன்று பூராம் எனக்குச் சோறு அந்த அடி தான்…! (குருநாதர் கோடி கோடி என்று சொல்லி அடிப்பார்)

ஏனென்றால் இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்வதற்குத்தான் சொல்கிறோம். என்னமோ… சாமி லேசாக உங்களிடம் வந்து சொல்கின்றேன் என்று இல்லாதபடி உங்களுக்குள் குருநாதர் காட்டிய உணர்வலைகளை உணர்த்திக் கொண்டே வருகின்றோம்.

நமது வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலே நம்மை கோபக்காரனாக ஆக்கி விடுகிறது…. வேதனைப்படுவோனாக ஆக்கி விடுகிறது… தாய் தந்தையை மறக்கச் செய்து விடுகின்றது….!

1.தாய் தந்தை நம்மை நன்றாக வளர்க்க வேண்டுமென்று எண்ணினாலும் இடைப்பட்ட உணர்வுகள் தடுக்கின்றது.
2.தன் தாய்க்கும் தன் மனைவிக்கும் ஆகாது. என்கிற நிலை வரும்போது இந்த உணர்வை இழுக்கின்றது
3.இதைப் பிளந்து தள்ள வேண்டுமென்றாலும் முடிவதில்லை.

சில குடும்பங்களில் இப்படி எல்லாம் இருக்கிறது. அதே சமயத்தில் தாய்க்கும் மகனுக்கும் ஆகவில்லை. தாய் தான் கடவுள் என்கின்றோம் தாய் தான் தெய்வம் என்கின்றோம் தாய் தான் குரு என்கிறோம்.

ஆனால் யாம் சொன்னதற்கும் இதற்கும் புறம்பாகப் போகின்றது. காரணம்… ஒரு உடலில் ஒரு உணர்வின் தன்மையை அந்தக் குணத்தின் வித்தினை விளைய வைத்தால் அது பல கோடி ஆகின்றது.

ஒரு உணர்வின் தன்மையை எடுத்துக் கொண்டு மற்ற உணர்வோடு அதைச் சேர்க்கப்படும்போது இங்கே மனிதன் என்ற தன்மையே பிரிக்கப்படும். இந்தப் பிரிவிலிருந்து மீள்வதற்கு முடியவில்லை.

மிளகாயை இணைத்துவிட்டால் காரம்… காரம் தான்…! என்று சொல்லும். அதற்குப் பக்கத்தில் இஞ்சியை எடுத்துக் கொண்டால் அதையும் காரம்… காரம்… என்று தான் சொல்லும்.

ஏனென்றால் இந்த உணர்வு அதைத் தான் சொல்லும். காரத்திற்குள் இஞ்சி மிளகு எல்லாம் ஒன்றாகுவதுபோல் இந்தக் கோப குணங்களிலே நியாயங்களையும் பேசும்.

ஆனால் அந்தக் கோபங்கள் என்ன செய்யும் என்றால் தன் இருப்பிடத்தை வலுப்படுத்திக் கொண்டே இருக்கும். அதைப் போக்க வேண்டும் என்பதற்குத் தான் இப்பொழுது சொல்வது.

காரணம் இதையெல்லாம் குருநாதர் என்னிடம் இருக்கக்கூடிய வெறுப்புகளை எல்லாம் வெளியே கொண்டு வந்து குருநாதர் என்னை அடித்து அந்த விண்ணுலக ஆற்றலைக் காட்டினார்.

அப்பொழுது தெரியவில்லை என்று நான் சொன்னால் அதற்கு ஒரு அடி விழும் திடீரென்று...!

உன்னை பேய் பிடித்து ஆட்டுகின்றது என்பார்.

பேய் என்றால் என்ன….?

1.ஒரு மனிதனின் உடலின் விளைந்த உணர்வுகள்
2.அவனை ஆட்டிப்படைத்த அதே செயல்
3.அவன் எந்த உடலை அழிக்க எண்ணினானோ
4.தன் உடலையோ அல்லது மற்றவர் உடலையோ அழிக்க வேண்டும் என்ற ஆணவம் கொண்ட உணர்வுகள் அங்கே விளைந்தது.
5.அந்தக் கார உணர்ச்சிகளுடைய உணர்வுகளை நீ வேடிக்கையாகப் பார்க்கின்றாய்
6.தர்மத்தை நீ கடைபிடிக்கின்றாய்… ஆனாலும் அவனைப் பார்த்த அந்தப் பேய் குணம்
7.உன்னில் வந்து உனக்குள்ளும் அதைப் படைத்துவிடுகின்றது.

உனக்குள் அதைப் படைத்தபின் உன்னுடைய நியாயம் இந்தக் கோபத்தைக் கொண்டே அதை நீக்க வேண்டும் என்று சொல்கின்றது.

உதாரணமாக நாம் சொல்லிப் பார்க்கின்றோம்… கேட்கவில்லை… தப்பாகச் சொன்னால் இன்றைக்கு இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தான் வருகின்றது.

நம் நல்ல குணத்தை மாற்றிவிட்டு இரு நான் பார்த்துவிடுகின்றேன் என்று வருகிறது. இதுதான் ஓம் நமச் சிவாய சிவாய நம ஓம். நம் உணர்வின் செயல்கள் இப்படி எல்லாம் வந்து சேர்ந்து விடுகின்றது

இதைப் போன்ற நிலை எல்லாம் மாற்றிட வேண்டும் என்பதற்குத்தான் உங்களைத் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.