ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 15, 2020

கண்களின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்ய வேண்டியதன் முக்கியத்துவம்


கண்ணப்பநாயனார் வேட்டையாடிப் பிழைத்தாலும் பக்தி நிலைகள் கொண்டு ஆண்டவனுக்காக வேண்டி தான் வேட்டையாடியதைக் கொடுத்தார்.

ஆனால் கொடுத்து வந்தாலும்... ஒரு நாள் ஈசன் கண்ணிலிருந்து இரத்தம் ஒழுகப் போகும்போது விரலை வைத்துத் தன் கண்ணை நோண்டி எடுத்துக் கொடுத்தார். பக்திப் பெருக்கத்தில் இப்படிக் கொடுத்தார்.

கண்ணப்பநாயனார் ஈசனுக்குக் கண் கொடுத்தார் என்றால் எதை அவர் கொடுத்தார்...?

தன்னுடைய நிலைகள் கொண்டு இதை அடைத்து (இரத்தம் ஒழுகுவதை) அதைக் கொடுத்தார். எதை...?

தான் கொன்று புசித்த உணர்வின் தன்மை எவ்வாறு...? என்ற நிலைகளைத் தான்.. தன் வாழ்க்கையில் வந்த ஒவ்வொரு நிலைகள் வேதனைப்படுவதை எல்லாம் அடைத்தார்...!  என்பதே கண்ணப்பநாயனாருடைய கதை.

1.தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மைகளை... அதை அழுத்தி
2.அந்தக் கண் ஒளியின் தன்மை எதை இறையாகத் தேடுகின்றது...? (தேட வேண்டும்...!) என்ற
3.சூட்சமத்தை உணர்த்துவதற்காகத் தான் இப்படிப்பட்ட காவியங்கள் எல்லாம் படைக்கப்பட்டது.

ஆனால் பக்தி மார்க்கங்களில் இவர்களுக்குத் தகுந்த மாதிரி தான் அதை ஏற்றுக் கொள்கின்றார்கள். அவர்களுடைய உணர்வு எதுவோ அதற்குத் தகுந்தவாறு எண்ணுகின்றார்கள்

கண் என்றால் இப்பொழுது “ஆயிரம் கண்ணுடையாள்” என்று சொல்வார்கள்.
1.நமக்குள் எந்தெந்தக் குணங்கள் இருக்கின்றதோ
2.அதனதன் நினைவு வரப்படும்போது (கோபம் பயம் ஆத்திரம் வேதனை அன்பு பரிவு பாசம் மகிழ்ச்சி போன்ற எத்தனையோ குணங்கள்)
3.அதன் உணர்வின் அலையையே தனக்குள் அறிந்து தனக்குள் அதைக் கவர்ந்து கொள்ளும்.
4.அந்த உணர்வின் தன்மை கொண்டு தான் நாம் தெரிந்து கொள்கின்றோம்.

நமக்குள் சக்தியாக இருக்கும் நிலைகள் எந்தெந்தக் குணமோ இவை எல்லாம் அதன் வழி தான் காட்டும்... உணர்த்தும்... இயக்கும்.

உதாரணமாக... என் நண்பனைப் பார்க்கின்றேன்.. அவனைப் பதிவு செய்து கொள்கின்றேன். இருந்தாலும் அந்த நண்பனைப் பற்றி நான் நினைக்கப்படும் போதெல்லாம்
1.இந்தக் கண்கள் தான்...
2.நண்பனைப் படமாக மீண்டும் காட்டுகின்றது

ஏனென்றால்... நண்பனைப் பார்த்துப் பதிவான உணர்வுகள் விளைந்து அணுக்களாக இங்கே இருக்கின்ற்து. இதே கண் தான் அங்கே படம் எடுத்தது. அதே உணர்வு தான் எனக்குள் பதிவானது.

அதை அறிந்தாலும் அந்த உணர்வின் சத்தை அதை மீண்டும் கவர்ந்து வளர்க்கச் செய்கிறது.

1.ஒரு செடி தாய் மரத்தின் சத்தைத் தனக்குள் எடுக்கின்றது என்றால்
2.அந்த மணத்தை நுகரப்படும் போது அது கண்..
3.தன் இனமான சத்தை அதனுடைய நிலைகளைத் தெரிந்துதான் எடுக்கின்றது.

இதைப்போல தான் கண்ணப்பநாயனார் காவியத்திலும் காட்டப்பட்டுள்ளது.

அதாவது
1.உடலான சிவத்திற்குள் அந்தத் தீமை என்பதை நீக்கிட
2.அந்த உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மையை
3.கண்ணின் நினைவு கொண்டு (கண்ணை எடுத்து உயிரிலே.. அந்த ஈசனுக்குப் பொருத்துவதாக) இதை அழுத்திக் காண்பித்தார் என்று
4.சாதாரண மக்களுக்கும் இந்தத் தத்துவத்தை உணர்த்த இந்த காவியங்களைக் கொண்டு வருகின்றார்கள்.

உள் நின்று இயக்கிக் கொண்டிருக்கும் உயிருடன் ஒன்றி ஒளியான நிலை பெற வேண்டும் என்பதற்குத்தான் “தன் கண்களைப் பிடுங்கி ஈசனுக்கு அவர் கொடுத்தார்...” என்று தெளிவாக்குகின்றார்கள்.