ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 24, 2016

ஒரு கல்லில் இரண்டு மாங்காய் – குலதெய்வங்களுக்குச் செய்ய வேண்டியது

நம் சொந்தமோ பந்தமோ நண்பர்களோ உடலை விட்டுப் பிரிய நேர்ந்தால் பாசத்தால் “ஐயோ..,” இப்படிப் போய்விட்டார்களே என்று எண்ணினால் அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் வந்துவிடும்.

இந்த மாதிரி நேரத்தில் நாம் விழித்திருத்தல் வேண்டும். உடனே நம் உயிரை எண்ணி “ஈஸ்வரா” என்று அவனிடம் வேண்டுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்குதல் வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று சிறிது நேரம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

அடுத்து, உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்ற உணர்வுடன் உந்தித் தள்ள வேண்டும்.

அப்படி உந்தித் தள்ளாமல் “ஐயோ.., இப்படி ஆனதே” என்று எண்ணினால் அந்த ஆன்மாக்கள் நம் உடலுக்குள் வந்துவிடும். உள்ளே வந்த பின் அவர் பட்ட வேதனையும் கஷ்டங்களும் நோய்களும் நமக்குள்ளும் வந்துவிடும்.

ஆகவே, இதை மாற்றிப் பழகுதல் வேண்டும்.

நம் மூதாதையர்களோ, சொந்தமோ, பந்தமோ, நண்பர்களோ யாராக இருந்தாலும் சரி, அந்தப் பாசப் பற்றுடன் நாம் கவர்ந்தால் நம் உடலுக்குள் வந்துவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் விடுபடுதல் வேண்டும். அவர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்தல் வேண்டும். நமக்குள் அந்தத் தீமைகள் புகுந்துவிடாதவாறு தடைப்படுத்துதல் வேண்டும்.

தடைப்படுத்த வேண்டுமென்றால் எப்படிச் செய்ய வேண்டும்?

எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற குலங்களின் தெய்வங்களான முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெற்று பிறவியில்லா நிலை அடைந்து சப்தரிஷி என்ற நிலை அடைந்திட அருள்வாய் ஈஸ்வரா.

எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற உறவினர்களின் உயிராத்மாக்களும், நண்பர்களின் உயிராத்மாக்களும் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெற்று பிறவியில்லா நிலை அடைந்து சப்தரிஷி என்ற நிலை அடைந்திட அருள்வாய் ஈஸ்வரா.

உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்கள் எடை அற்றது. நாம் உடலுடன் இருப்பதால் ஒரு இயந்திரம் போன்று அவர்களை நம்முடைய வலுவான எண்ணத்தால் (ஒரு பந்தைப் போன்று) உந்தித் தள்ள முடியும்.

இந்தப் புவி ஈர்ப்பின் பிடிப்பிலிருந்து அவர்களை விடுபடச் செய்ய முடியும். மீண்டும் அவர்கள் இன்னொரு உடல் பெறக் கூடாது.

இப்படி அந்த ஆன்மாக்களை உந்திச் செலுத்தி அங்கே அந்த சப்தரிஷி மண்டல ஒளிக் கடலில் கரைத்திட வேண்டும். இதுதான் ஞானிகள் காட்டிய வழி.

ஆக, “ஒரு கல்லில் இரண்டு மாங்காய் விழும்..,”

அதாவது அவர்களும் பிறவியில்லா நிலை அடைகின்றனர். நீங்களும் நலம் பெறும் சக்தி பெறுகின்றீர்கள்.  

சில உடல்களில் அறியாது ஆன்மாக்கள் புகுந்திருந்தால் நம்மை அறியாது சில தீமையான உணர்வுகளைத் தூண்டிக் கொண்டேயிருக்கும். நம்முடைய செயலாக்கங்களை மாற்றி பாவ வினைகளாக அதன் வழிக்கு நம்மை இயக்கும்.

இதைப் போன்ற தீமைகளிலிருந்தும் உங்களால் விடுபட முடியும்.

எங்கள் உடல்களில் அறியாது சேர்ந்த ஜீவான்மாக்கள் அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி பெற்று துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா என்று தியானியுங்கள்.

அந்த ஜீவான்மாக்கள் மகரிஷிகளின் அருள்வட்டத்தில் வாழ்ந்து எங்கள் உடல்களில் நலம் பெறும் ஜீவான்மாக்களாக மாறிட அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.

அந்த ஆன்மாக்களும் சப்தரிஷி மண்டல அலைகளுடன் கலந்து பிறவியில்லா நிலை அடைந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று தியானித்தால் அதனின் செயலாக்கங்கள் தணிந்து நம்மை நலம் பெறச் செய்யும். 

எதிர்பாராது நடக்கும் சில விபத்தான நிலைகளிலிருந்தும் நாம் விடுபட முடியும். நம் எண்ணத்தால் நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.