ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 21, 2016

எம்மை அருள் சேவை செய்யச் சொன்னார் குருநாதர், அதன் மூலம் “தீமைகளிலிருந்து விடுபடும் மக்கள்” அதிகரிப்பார்கள் என்றார்

வேதனை என்ற உணர்வை நாம் எடுத்துக் கொண்டால் அந்த விஷத்தின் அளவுகோல் அதிகமானால் அது உடலுக்குள் கேன்சராக மாறுகின்றது.

நம் உடலுக்குள் செல்லும் அணுக்களுக்குள் விஷத்தின் தன்மையை அதிகமாக நுகர்ந்து கொண்டால் தன் விழுதுகளைப் பாய்ச்சி நல்ல அணுக்களுக்குப் போகும் விஷத்தை இது கவர்ந்து கொண்டபின் இந்த மனித உடலை உருவாக்கும் அணுக்களெல்லாம் “நீர் சத்தாக” மாறுகின்றது.

நல்ல அணுக்களுக்களின் இயக்கச் சக்தி குறைக்கப்படும் பொழுது இந்த இரத்தத்தின் தன்மை குறைகின்றது. இது இரத்தக் கேன்சராக மாறும் போது இந்த அணுக்களின் தன்மையும் மற்ற அணுக்களுக்குக் கொண்டு போய் இதே வேதனைகளை உருவாக்கிவிடுகின்றது.

இதைத் தெளிவாக எமக்குக் காட்டுகின்றார் குருநாதர்.

விஷத்தன்மை நமக்குள் அதிகமாகி கேன்சராக மாறும்போது அதற்கு மருந்து இல்லை. ஆனால், அக்காலங்களில் இந்தக் கேன்சர் என்ற நிலை இல்லை.

புற்று நோய் என்று இருப்பினும் அதற்கு அன்றைய பச்சிலையை எடுத்து அரைத்து அந்த விஷத்தின் தன்மை கொண்டு ஒரு துளி எங்கே புற்று நோய் இருக்கின்றதோ அங்கே தடவிவிட்டால் அந்தக் கண்களின் (புற்றின்) வழி கொண்டு அந்தப் புற்றை உருவாக்கிய அணுக்கள் மடிந்துவிடுகின்றது.

இதற்காக வேண்டி எம்மைக் காட்டுக்குள் அழைத்துச் சென்று சில பச்சிலைகளையும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டினார். இதை வைத்து நீ பிறருக்கு உதவி செய்தாலும் இந்த உணர்வை உனக்குள் பதிவு செய்து கொள். இந்த உணர்வின் “வாக்காக” நீ அவர்களுக்குள் கொடு.

அதே அணுவின் தன்மை அங்கே விளையும். அவர் தொடர்ந்து எடுத்தார் என்றால் அவர் செய்த பாவ நிலைகளைப் போக்கும் நிலை அங்கே வருகின்றது. அவர் எண்ணியதை அவர் உயிர் உருவாக்குகின்றது. அந்த அணுக்களைப் பெருக்குகின்றது.

ஒருவர் கோபமாகப் பேசுவதை நாம் அதிகமாகக் கேட்க நேர்ந்தால் நமக்குள் அது இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது.

அதைப் போல நான் உனக்குக் காட்டியபடி அந்தக் கேன்சர் நோயை நீக்கிடும் உணர்வை நீ நுகர்ந்தாய். அந்த உணர்வின் தன்மை கொண்டு கேன்சர் (விஷ அணுக்கள்) செயலற்றதாக ஆகவேண்டும் என்ற ஒரு வாக்கினைக் கொடு.

யாரொருவர் இந்தப் பதிவினை நினைவு கொண்டு தியானிக்கின்றனரோ நஞ்சினை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அங்கே பெருகும். அப்பொழுது அவருக்குள் இருக்கும் அந்தக் கேனசர் ஒடுங்கும்.

அவர்கள் எதை எண்ணுகின்றார்களோ அதை “அவர்கள் உயிர் தான்…, இயக்குகின்றது”.

“நான் செய்கின்றேன்…,” என்று நீ இதைச் செய்தால் அவர்கள் செய்யும் உணர்விலிருந்து தீமையிலிருந்து விடுபட மாட்டாய்.

உடல் நல்லதாகிவிட்டால் நல்லதான பின் மீண்டும் வேதனைப்படும் செயல்களைத்தான் செய்வார்கள். அந்த வேதனை உணர்வைத்தான் நுகர்வார்கள். மீண்டும் அதே நோய் உருவாகும்.

அவரில் விளைந்த உணர்வுகள் மற்றவர்கள் அவருடன் உறவாடும்போது அங்கே பதியும். பதிந்த உணர்வே மீண்டும் செயலாகும். இதை மாற்றும் நிலை இல்லை.

ஆகவே, இதை மாற்றவேண்டும் என்றால் இந்தப் பிரபஞ்சத்தில் விஷத்தன்மை பரவாது தடுக்க வேண்டும் என்றால் அருள் மகரிஷிகளின் உணர்வை நுகரச் செய். இந்த உணர்வின் தன்மை இருளை மாய்க்கச் செய்.

உணர்வின் துணை கொண்டு பிறவியில்லா நிலை அடையச் செய்யும் பருவம் பெற்றது இந்த மனித உடல்.

ஆகவே, அவர்களின் உயிரை நீ ஈசனாக மதி. அந்த உடலைக் கோவிலாக மதி. உடலைச் சிவமாக மதி. அதற்கு “அருள் சேவை” என்ற நிலைகள் கொண்டு அருள் ஞானத்தை வினையாகச் சேர்க்க ஊழ்வினையாக ஊழ்வினை என்ற வித்தாக ஊன்று.

அந்த வித்தினை எவர் வளர்த்துக் கொள்கின்றனரோ அவர் இந்தப் பாவ வினையும் சாப வினையும் நீக்கும் நிலை பெறுகின்றார்கள். தீய வினைகளிலிருந்தும் விடுபடுகின்றனர்.

இதை வளர்க்க எண்ணினால் உயிருடன் ஒன்றி ஒளியின் தன்மை வளர்கின்றது.

ஆகவே, இதை வளர்த்தால் தான் அதைப் பெறமுடியுமே தவிர உன் கையால் பலருக்கு நன்மை செய்தாலும் அடுத்த கணம் நல்லதானாலும் அந்த நேரத்திற்குத்தான் நல்லதை எண்ணுவார்கள்.

அடுத்தால் போல் இவர்கள் என்ன செய்வார்கள்?

பிறர் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தறிவார்கள். நுகர்ந்த உணர்வுகள் அந்த வேதனைப்படுத்தும் சொல்லாக மீண்டும் இவருக்குள் வரும்.

இவருக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவான நிலை மீண்டும் நுகர்ந்து அந்தத் தீய அணுக்களைத்தான் உருவாக்கும். நீ செய்த நன்மையும் பயனற்றுப் போகும்.

சக்தி பெற்ற நிலையை அந்த ஞான வித்தை அங்கே ஊன்றிவிடு. அதை வளர்க்கும் உபாயத்தைக் கூறு. அதன் வழியே அவர்கள் நுகரட்டும். அருள் பெறட்டும். இருளை அகற்றட்டும்.

ஆகவே, மனிதனான பின் இதுதான் விநாயகர் தத்துவத்தில் முழு முதல் கடவுள்.

ஆகவே நமக்குள் தீமைகளை அகற்றிடும் உணர்வுகளை விளைய வைத்துத் தீமைகள் அகன்றிட வேண்டும் என்று நாம் கூட்டுத் தியானங்கள் இருந்து இந்த உணர்வுகளைப் பரவச் செய்தோம் என்றால் “தீமைகளிலிருந்து விடுபடும் மக்களும்” அதிகரிப்பர்.

ஆகவே, இதைப் போன்ற உணர்வின் தன்மை விளையப்படும் பொழுது நினைவுகள் அங்கே பயன்படுத்தக் கூடிய நிலைகள் இருக்கும். இதை நீ செய் என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

அதைத்தான் யாம் இப்பொழுது செய்கின்றோம்.

ஆனால், சில பேர் என்ன நினைக்கின்றார்கள்? சாமியிடம் ஆசீர்வாதம் வாங்கினால் சரியாகும் என்று இப்படிக் கீழே போய்க் கொண்டிருக்கின்றார்கள்.

சாமியின் ஆசீர்வாதம் எது என்றால் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நீங்கள் பெறவேண்டும் நீங்கள் அருள் உணர்வை நுகர்ந்தால் உங்களுக்குள் தீய வினைகளை மாற்றும் திறன் உங்களுக்குள் நிச்சயம் உண்டு.