ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 16, 2016

ஒரே எரிச்சலாக இருக்கிறது என்கிறோம்...! ஏன்...?

கோபம் வந்தபின் நம்முடைய செயல்கள் எப்படி இருக்கும்?

வேறு ஒன்றும் வேண்டியதில்லை. பெண்களுக்குக் கோபம் வரட்டும். தோசையைச் சுடச் சொல்லுங்கள். நெருப்பைக் கொஞ்சம் அதிகமாக்கி விடுவார்கள். மாவை ஊற்றியபின் தோசை சட்டியிலே ஒட்டிக் கொள்ளும். எடுக்க வராது.

“சே.., சனியன் பிடித்தது.., தொலைந்து போகிறது இப்படிப் பண்ணுகிறது..,’ என்று சொல்லிக் கொண்டு சட்டியைச் சுரண்டு.., சுரண்டு..., என்று சுரண்டுவார்கள்.

 அப்புறமாவது அதைத் துடைக்க மனம் வருமா என்றால் வராது. மீண்டும் அப்படியே தோசையை ஊற்றுவார்கள். தோசை கருகிவிடும்.

“சனியன்.., எவன் கண் பட்டதோ..,?” நான் தோசை எப்படி எல்லாம் சுட்டிருக்கின்றேன்..,? இப்பொழுது இப்படி ஒட்டிக் கொள்கின்றது என்பார்கள்.

இந்த உணர்வுகள் நம்மைச் சிந்திக்க விடாது. ஏனென்றால், அந்தக் கோப உணர்வின் செயல்கள் இப்படி.

கோபமான உணர்வுடன் பெண்கள் சமைக்கட்டும்.

அன்றைக்குப் பார்த்தால் குழம்பிலே மற்றதிலோ இரண்டு மிளகாய் அதிகமாகப் போட்டுவிடுவார்கள். வாயில் வைத்த பின்பு. “உஷ்ஷ்.., தஷ்ஷ்., ஆ..,” என்று சொல்லிக் கொண்டு தான் சாப்பிட வேண்டியதிருக்கும்.

அதே சமயத்தில் அவர்கள் வேறு ஏதாவது ஒரு பொருளை வைக்க வேண்டும் என்றால் “டப்..,” என்று வைப்பார்கள். சாப்பாடு போடும் போது பார்க்கலாம். “சொத்..,” என்று போடுவார்கள்.

இதைப் பார்த்த பின்பு உங்கள் மனது எப்படி இரு,க்கும்? குழந்தைக்குக் கொடுத்தாலும் சரி மற்றவர்களுக்குக் கொடுத்தாலும் சரி, அந்தக் கோபம் தன்னாலே இயக்கும்.

ஆக, தப்பு செய்யாமலே தப்பு செய்ய வைக்கும்.

நாம் நல்ல மனம் கொண்டு நாம் நல்லதைச் செய்யவேண்டும் என்று ஓங்கி வளர்த்திருந்தாலும் சந்தர்ப்ப பேதத்தால் என்ன நடக்கின்றது?

ரோட்டில் போகும் போது ஒருவன் மற்றொருவரை உதைக்கின்றான். நாம் பார்க்கின்றோம்.

“பாவிப்பயல், இப்படி அடிக்கின்றானே.., நடு ரோட்டில் போட்டு இப்படி அடிக்கின்றானய்யா…,” என்போம். அப்பொழுது அவன் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வை நாம் நுகர்ந்துவிடுகின்றோம்.

நுகர்ந்த பின் என்ன சொல்வோம்?

ரோட்டில் வைத்து இப்படித் தாக்குகின்றான். இவனெல்லாம் உருப்படுவானா..,? நாம் தன்னாலேயே பேசுவோம்.

அங்கே பதிவு செய்த உணர்வுகள் இங்கே வருகின்றது.

ஒரு இடத்தில் மிளகாயைத் தூற்றிக் கொண்டிருந்தால் மேலே பட்டால் என்ன ஆகும்? நமக்குத் தெரியாது. ஆனால், காற்றிலே கலந்து அது வருகின்றது. நம் மேல் பட்டவுடன் எரிகின்றது.

அப்புறம் இன்னும் அதிகமாக எரிந்தால் என்ன செய்கின்றோம்?

சனியன்.., எங்கேயோ தூசி பட்டுவிட்டது போலிருக்கின்றது. குளித்தால் தான் எரிச்சல் போகும் என்று நினைக்கின்றோம். குளித்தால் தான் அந்த எரிச்சல் நீங்கும்.

அதே மாதிரி எங்கேயாவது சர்க்கரைப் பாகு காய்ச்சிக் கொண்டிருப்பார்கள். அது காற்றிலே கலந்து வரும். நாம் போகும் வழியில் நம் உடலில் பட்டபின் “பிசு.., பிசு..,” என்று ஆகிவிடும்.

நான் ஒன்றையுமே தொடவில்லை.., இப்படி உடலில் “பிசு.., பிசு..,” என்று வந்துவிட்டதே என்று நினைப்போம்.

ஆக, இதை அப்படியே விட்டுவிடுகின்றோமா..,? இல்லை, உடனே நாம் குளித்து உடலில் பட்ட அந்தப் பிசு பிசுப்பை நீக்குகின்றோம்.

இப்படி நம் வாழ்க்கையின் நிலைகளில் சில நேரங்களில் நடந்து போகும் போது பிசு பிசுப்போ, ஒரு எரிச்சலோ வருவதைப் பார்க்கலாம்.

சில இடங்களில் சோளம் அறுவடை ஆகியது என்றால் அதைத் தட்டிப் பிரிப்பதற்காக வேண்டித் தூற்றுவார்கள். அந்தச் சோளத் தூசியிலே சிறு மூக்கு மாதிரி இருக்கும். காற்றிலே கலந்தது நம் கண்ணுக்கே தெரியாது.

காற்றிலே கலந்து வருவது நம் உடல் மீது பட்டவுடன் “சுள்.., சுள்..,” என்று அரிப்பு எடுக்கும். நம்மை அறியாமலே இது நடக்கும். அப்பொழுது நாம் குளிக்காமல் இருக்க முடியுமா..,? அப்படியே விட்டுவிடுகின்றோமா?

புற நிலைகள் கொண்டு நம் உடல் மீது படுவதை நீக்குவதற்காகக் குளித்துத் தூய்மைப்படுத்திக் கொள்கின்றோம்.

ஆனால், நாம் ஒரு தீமையான செயலைப் பார்த்துவிட்டு வந்தோம். நமக்குள் பதிவாகியிருக்கின்றது. நாம் போகிற பாதையில் பிறர் தவறு செய்வதைப் பார்க்க நேருகின்றது.

அந்த மாதிரி நிலைகளைப் பார்த்தவுடன் வெறுப்பான நிலைகள் தன்னையறியாமலே வரும். இதைச் சுத்தப்படுத்த வேண்டுமா.., வேண்டாமா..,? சற்றுச் சிந்தியுங்கள்.

சுத்தப்படுத்தவில்லை என்றால் என்ன ஆகும்? நம் உயிரிலே பட்டு அந்த உணர்வு அதன் வழியில் நம்மை இயக்கிக் கொண்டே இருக்கும்.

இதைப் போல நமக்குள் எத்தனையோ தீமையான உணர்வுகளைப் பார்த்திருப்போம். அந்த அணுக்கள் நமக்குள் இருக்கும். அதற்குச் சாப்பாடாகும். தீமையான அணுக்கள் வளரத் தொடங்கும்.

அதனின் நிலைகள் வளரப்படும் பொழுது நம் உடலில் என்ன நடக்கும்?

எனக்குக் கால் வலிகின்றது, தலை வலிக்கின்றது, உடலெல்லாம் வலிக்கின்றது என்போம். நான் நன்றாகத் தான் இருந்தேன். இப்பொழுது ஏனோ தெரியவில்லை கழுத்து சுளுக்கிவிட்டது, நரம்பு பிடித்துவிட்டது, இங்கே சுண்டி இழுக்கின்றது என்றெல்லாம் சொல்வோம்.

ஆக, இதெல்லாம் எதன் அடிப்படையில் வருகின்றது?

சில நேரங்களில் நாம் பதிவு செய்த அந்தத் தீமையின் உணர்வுகள் வலுவாகப்படும் பொழுது நல்ல அணுக்களை அதை இயக்கவிடாதபடித் தடைப்படுத்தும்.

அப்பொழுது உடலில் வலி வேதனை வந்தபின் டாக்டரிடம் சென்று மருந்து கொடுத்துத்தான் அதைச் சுத்தப்படுத்துகின்றோம்.

ஆனால், அதற்கு முதலிலேயே தீமையைக் கண்டபின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நாம் சுத்தப்படுத்துகின்றோமா..,?

அதற்காக வேண்டித்தான் உங்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

நீங்கள் அதை எடுத்து “நான் நன்றாக ஆனேன்.., என்னைக் காத்துக் கொண்டேன்..,” என்ற சொல் வரவேண்டும்.

ஏனென்றால் பல வகைகளிலும் அந்த விண்ணின் ஆற்றலை உங்களுக்குள் பதிவு செய்து கொண்டே வருகின்றேன்.

கோபப்பட்டவர்கள், சலிப்படைந்தவர்கள், சஞ்சலப்பட்டவர்கள், வேதனைப்பட்டவர்கள் குரோதப்பட்டவர்கள் உங்களுக்குத் தொல்லை கொடுத்தவர்கள் இத்தனே பேரையும் பதிவு செய்திருக்கின்றீர்கள். இதை எல்லாம் நினைவுபடுத்தியபின் உடனடியாக வந்துவிடுகின்றது.

ஆனால், அதை மாற்றுவதற்காக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நான் எண்ணச் சொல்கிறேன். எண்ணுகின்றார்களா.., என்றால் இல்லை.

ஏனென்றால், இந்தக் கோபமும் வெறுப்பும் வேதனையும் வலுக் கொண்டது. உங்களுக்குள் நல்லதை வைத்திருக்கும் பொழுது அதை எடுக்கவிடாதபடி முன்னாடி நின்று தடுத்துவிடுகின்றது.

அப்பொழுது இதைச் சுத்தப்படுத்தினால் தான் அந்த அருள் ஞானத்தை நீங்கள் பெருக்க முடியும். இதை உங்களுக்குள் வளர்க்கக் கற்றுக் கொள்வதற்குத்தான் “ஆத்ம சுத்தி” என்று ரொம்பவும் எளிதாகக் கொடுத்துள்ளேன்.

பயன்படுத்திக் கொள்ளுங்கள். தீமைகளிலிருந்து விடுபடுங்கள். மகிழ்ந்து வாழும் அருள் சக்தியைப் பெறுங்கள். விண்ணும் மண்ணும் போற்றும் அந்த மெய்ஞானிகளில் ஒருவராக நீங்கள் ஆவீர்கள். எமது அருளாசிகள்.