ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 29, 2016

மனிதனாக உருவாக்கப்பட்ட நல்ல குணங்கள் காக்கப்படவேண்டும் என்று தவமிருக்கின்றேன்

இன்று பெரும்பகுதி என்ன செய்கின்றார்கள்?

சாமியிடம் சக்தி இருக்கின்றது. அவரிடம் சென்றால் எல்லாம் சரியாகப் போகும் என்று எண்ணுகின்றார்கள்.

சாமியினுடய சக்தியைத்தான் உங்களிடம் கொடுக்கின்றேன். அந்தச் சக்திகளை நீங்கள் பயன்படுத்த வேண்டுமா இல்லையா..,?

சாமி செய்கின்றார் என்று என்னைத்தான் நம்ப முடிகின்றதே தவிர சாமி கொடுத்த சக்தியை நீங்கள் நம்ப முடியவில்லையே.

அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவோம் என்ற நிலைக்கு நீங்கள் வர வேண்டும்.

சில பேர் சங்கடத்துடன் எண்ணுவார்கள். "நான் நினைத்தேன் வரவில்லை..," என்பார்கள். ஒரு தடவைக்கு இரண்டு தடவை எடுத்தால் அது நிச்சயம் கிடைக்கும்.

யாருக்கும் கிடைக்காது என்று எதுவும் இல்லை. 

உங்கள் எல்லோருக்கும் அந்த அருள் சக்திகள் கிடைக்க வேண்டும் நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தான் தவமிருக்கின்றேன்.

ஏனென்றால், இந்தக் காற்று மண்டலம் நச்சுத்தன்மையாகிக் கொண்டே இருக்கின்றது இதிலிருந்து நீங்கள் மீள வேண்டும்.

நமது குருநாதர் இதைத்தான் சொன்னார். “நீ கடவுளை எங்கேயும் தேடவேண்டாம்.., மனிதனாக உருவாகிய நிலையில் “முழு முதல் கடவுள்” மனிதன் தான்.

உங்கள் உயிர் ஒரு கடவுள். அவனால் அமைக்கப்பட்ட உடல் அது ஒரு கோவில். அந்த ஆலயத்திற்குள் மனிதனாக உருவாக்கப்பட்ட நல்ல குணங்கள் தெய்வங்கள் அது காக்கப்படவேண்டும்.

உங்களைத்தான் நான் பூஜிக்கின்றேன். உங்கள் உயிரைத்தான் கடவுளாக மதிக்கின்றேன். உங்கள் உடலைத்தான் கோவிலாக மதிக்கின்றேன்.

ஏன், உங்கள் உடலைக் கோவிலாக மதிக்கக்கூடாதா..? உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கக்கூடாதா..?

நல்லதை உருவாக்கி அந்தத் தெய்வத்தைக் காக்கும் அந்த அருள் உணர்வை உங்களால் பெற முடியாதா? சொல்லுங்கள் பார்க்கலாம்.

எத்தனையோ சிரமத்திற்கிடையில் இதையெல்லாம் நீங்கள் பெறவேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் என்னுடைய தவம் இது தான்.