ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 12, 2016

செடிகளுக்குத் தூரில் உரம் போடுவது போல் உங்கள் உணர்வுகளுக்குள் மகரிஷிகளின் சக்திகளை ஊடுருவச் செய்கின்றோம்

உங்களுக்குள் உள்ள நல்ல உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து அதிலே மகரிஷிகளின் அருள் சக்திகளை இணைத்துக் கொண்டே வருகின்றோம்.

செடிகளுக்கு எப்படித் தூரைக் கிளறிவிட்டு அதிலே உரத்தைப் போடுவது போன்று உங்கள் ஒவ்வொரு உணர்வுகளையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் அது தூண்டச் செய்து அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் படரச் செய்கின்றோம்.

ஏனென்றால், இதற்கு முன்னாடி இதை நாம் யாரும் செய்யவில்லை. இன்றைய நிலைகளில் இதைச் செய்து ஆக வேண்டிய நிலை உள்ளது.

இந்த உணர்வுகளை அடிக்கடி தூண்டச் செய்து பௌர்ணமி மற்ற கூட்டுத் தியானங்களில் செயல்படுத்தும்படி செய்கின்றோம்.

கூட்டுத் தியானங்களில் அனைவருடைய எண்ணங்களும் வலுவான நிலைகள் சொல்லும் பொழுது எல்லோரும் எல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று எல்லோருடைய எண்ணங்களும் ஒன்றாகச் சேர்க்கப்படும் பொழுது இந்த உணர்விற்கு வலு கூடிவிடுகின்றது.

இப்பொழுது நாம் தேர் இழுக்கின்றோம் என்றால் ஒருவரால் இழுக்க முடியாது. பல நூறு பேர் சேர்ந்து தான் தேரை இழுத்து அதை எல்லை சேர்க்க முடியும்.

இதைப் போன்று தான் பலருடைய எண்ணங்களும் ஒன்று சேர்த்து நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளை எல்லோரும் பெறவேண்டும் என்று இந்த உணர்வின் தன்மை எல்லோருக்கும் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்கள் உடலான எல்லைக்குள் எளிதில் சேர்க்க ஏதுவாகின்றது.

இவ்வாறு சேர்க்கப்படும் பொழுதுதான் அதனின் வலிமை கொண்டு நீங்கள் எண்ணும் பொழுது இந்தக் காற்றிலுள்ள அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

ஆகவே, இதை எந்த நேரத்தில் எத்தகையை தீமைகளைக் கண்டாலும் கேட்டாலும் பார்த்தாலும் அடுத்த நிமிடமே ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள். நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.

இதைப் போல பிறர் வாழ வேண்டும் என்று நீங்கள் எண்ணினால் நீங்கள் முதலில் வாழ்கின்றீர்கள்.

பிறர் கெட வேண்டும் என்று எண்ணினால் முதலில் நாம் கெட்டுத்தான், “கெட வேண்டும்” என்ற சொல் அங்கே விளைந்து அந்த எண்ணங்களை எடுக்கும் பொழுது அங்கே அவர்களும் கெடுகின்றார்கள்.

ஒருவரை நாம் குறை கூறும் பொழுதும் குறையின் உணர்வுகள் நமக்குள் விளைந்த பின்பு தான் குறையின் நிலைகள் பிறர் மேல் பாய்ச்சப்பட்டு அவர்கள் நினைவுக்கு வரும் பொழுது அது வருகின்றது.

எனக்குக் கஷ்டம் கஷ்டம் என்று சொன்னால் கஷ்டத்தின் நிலைகள் விளைந்து நம் ஆன்மாவாகி, நம் சொல்லே நம் எண்ணமே நமக்குக் கஷ்டத்தை ஊட்டுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்கு ஒவ்வொரு நிமிடமும் எத்தகைய தீமையைக் கண்டாலும் ஆத்ம சுத்தி செய்யுங்கள். மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும் என்று எண்ணுங்கள்.

உங்கள் நினைவினை அடிக்கடி அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைக்கப்படும் பொழுது அதனின் வலுப் பெற்றால் நீங்கள் அதனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் இணைகின்றீர்கள்.

இந்த வாழ்க்கையில் பிறர்படும் துன்பங்களையும், பகைமை உணர்வுகளையும் சேர்த்துக் கொண்டால் நாம் புவியின் ஈர்ப்புக்குள்ளேயே வந்து விடுகின்றோம்.

இதைப் போன்ற தீமைகளிலிருந்து விடுபட்டு நாம் அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைவோம். பேரின்ப பேருவாழ்வு வாழ்ந்த அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றும் பதினாறு என்ற நிலையை அடைவோம்.