ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 29, 2016

“தாயின் காக்கும் உணர்வு” பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

நம் தாய் தந்தையர் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் பிள்ளைகளை வளர்த்து வருகின்றார்கள்.

ஆனால், பிள்ளைகள் அம்மா அப்பாவிடம் சண்டைக்கு வந்துவிட்டால் போதும். பையன் என்ன செய்கின்றான்? கோவித்துக் கொண்டு சென்று விடுவான்.

சென்ற பின் உங்கள் அம்மா கீழே விழுந்துவிட்டார்கள். அடிபட்டுக் காயமாகிவிட்டது என்று கேள்விப்படுவான். அதைக் கேட்டுவிட்டு பையன் என்ன சொல்வான்?

“அப்படித்தான் வேண்டும்..,” என்பான்.

அதே சமயத்தில், பையன் அம்மாவை அடித்து உதைத்திருக்கட்டும். அதன் பின் பையன் வெளியிலே செல்லும் போது அவனை அறியாமல் தவறிக் கீழே விழுந்திருக்கட்டும்.

அதைத் தாய் கேள்விப்பட்டவுடன் “அடப் பாவி மகனே என்னை இப்பொழுது தானடா அடித்தாய்.., அதற்குள்ளே கீழே விழுந்துவிட்டாயே..,” என்று வேதனைப்படும்.

எழுந்திருக்க முடியவில்லை என்றாலும் கூட பையனைப் பார்க்க வேண்டும் என்று எழுந்து ஓடி வரும்.

அப்பொழுது தாயின் பாசம் எப்படி இருக்கும்? இயற்கையின் உண்மையின் உணர்வுகள் இது. ஆனால், தாயை நாம் எத்தனை பேர் மதிக்கின்றோம்? நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

நம்மை மனிதனாக உருவாக்கியது யார்? தாய். தெய்வமாக நம்மைக் காப்பாற்றியது யார்? தாய். நல்ல மொழிகளை நமக்குச் சொல்லிக் கொடுத்த முதல் குரு நம் தாய் தான்.

தாயை முதலில் நாம் மதித்துப் பழக வேண்டும்.

இந்தச் சாமியார், அந்தச் சாமியார் என்று சொல்கிறார்கள் அல்லவா, எந்தச் சாமியாரும் வேண்டியதில்லை.

நீங்கள் உங்கள் தாயை மட்டும் காலையில் பாத நமஸ்காரம் செய்து உங்கள் அருளாசி வேண்டும் எனக்கு நல்லது நடக்க வேண்டும் என்று ஆசீர்வாதம் வாங்கிப் பாருங்கள்.

காட்டுக்குள் சென்றால் புலியோ யானையோ மற்றதோ தாக்க வரட்டும். நீங்கள் “அம்மா..,மா..,மா” என்று மட்டும் சொல்லிப் பாருங்கள். புலி வந்து தாக்குமா? யானை வந்து தாக்குமா?

நான் உங்களிடம் பந்தயம் கட்டுகின்றேன். “தாக்காது”.

தாயின் உணர்வு உங்களுக்குள் பதிவாகி இருக்கின்றது. இந்தக் காற்று மண்டலத்திலும் பரவி இருக்கின்றது. நீங்கள் “அம்மா..,மா..,மா” என்று எண்ணும் போது அந்த அலைகள் வந்து உங்களைக் காக்கும்.

தாக்க வரும் மிருகங்களும் விலகிச் செல்லும்.

உதாரணமாக, ஒரு இடத்தில் நின்று இங்கே இந்த மரத்தின் அடியில் ஒருவன் “ஆ..,” என்று பயந்துவிட்டான் இங்கே “பேய்.. வந்தது…,” என்று சொன்னால் போதும்.

மற்றவர்கள் அதே மரத்துக்கு அடியில் போகும்போது “நேற்று இங்கே ஒரு பேய் வந்தது..,” என்று பதிவாக்குவார்கள். உடனே என்ன ஆகும்?

அந்த மரத்தைக் கண்ணில் பார்த்ததுமே “இங்கே தான்..,” அந்தப் பேய் வந்தது என்று சொன்னால் நமக்குள் அந்தப் பதிவின் உணர்வை நுகர்ந்தவுடன் “கிடு.., கிடு..,” என்று நடுங்குகின்றது.

நடுக்கம் வருகின்றதா இல்லையா..,? பதிவான உணர்வின் அலைகள் நம்மை இயக்குகின்றதா இல்லையா?

அதைப் போன்று தான், தாய் எப்பொழுதுமே தன் பிள்ளைகள் அவர்கள் உயர்ந்தவர்களாக வேண்டும், நல்லவர்களாக வேண்டும் இதையே தாய் தனக்குள் சதா வளர்த்து வைத்துக் கொண்டுள்ளது. அந்த உணர்வலைகள் நமக்கு முன் உண்டு.

ஆக, நாம் குறும்புத்தனம் செய்தால் திட்டாமலா இருப்பார்கள் சாதாரண வாழ்க்கையில் வந்தது.

எது எப்படி இருந்தாலும் தாய் பட்டினியாக இருந்தாலும் தன் பிள்ளைக்குக் கொடுக்க வேண்டும் என்று உணவைக் கொடுக்கத்தான் செய்யும்.

தனக்கு வயிற்றுக்கு இல்லை என்றாலும் தன் குழந்தைகளைக் காப்பதற்குத் தாய் எத்தனையோ சிரமப்பட்டுக் கொடுக்கின்றது. ஆனால், அந்தத் தாயை நாம் மதிக்கின்றோமா?

ஆகவே, நாம் எப்படி இருக்க வேண்டும்?

எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் என் தாய்க்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும். எனக்காகப்பட்ட கஷ்டங்கள் எல்லாம் நீங்க வேண்டும். என் தாய் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அவர்களின் அருள் துணை எப்பொழுதுமே எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். என்று நீங்கள் எண்ணிப் பாருங்கள்.

உங்களுக்கு ஒரு பெரிய சிரமமே வருகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். தொழிலில் எவ்வளவோ கஷ்டம் வருகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த நேரத்தில் யாம் சொன்ன முறைப்படித் தாயை எண்ணித் தியானியுங்கள். “தாயின் காக்கும் உணர்வு” வந்து உங்களுக்குச் சிந்தனை வரும். உங்களுக்கு நல்ல வழி காட்டும்.

உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.